Tuesday, January 29, 2013

கழியாத மார்கழி

 
படம் இங்கிருந்து
.
முடித்துவிட்டு கேட்கிறாள்
"கோலம் அழகா இருக்கா?"...
உன்னருகே...
அசிங்கமாய் தான் தெரிகிறது
சொல்ல முடியவில்லையே!
(அப்புறம் அடி யாரு வாங்குறது)
o.o.o
.
உன் சோம்பேறிதனத்திற்கு
அந்த கோலத்திற்கு ஏன்  
இரவெல்லாம்
பனியில் நிற்கும் தண்டனை?
o.o.o
.
மார்கழி முடிந்து
ஒரு வாரம் தானே ஆகிறது
உன்னை பார்க்காத சோகம்...
கன்னத்தில் தாடியுடன்
உன் வீட்டு முற்றம்...
புற்கள்!
o.o.o
.
குளித்துவிட்டு வீட்டுக்குள்
நடந்தாய்...
முற்றத்தைவிட வீட்டுக்குள்தான்
அழகான கோலம்...
உன் கால்தடமாய்...
o.o.o
.
கோலம் போட
தெரியாதென்கிறாய்...
வேண்டாமடி செல்லமே
கால் பதிய நடந்து வா போதும்
( இது பழசு; நான் எழுதி நான் ரசிச்சது)

மேலெழும்பிய பெருவிரல்

என்னை முட்டாளாக்கிய
ஒரே புத்தகம் அது...
என் அம்மாவை
பிடிக்கும் என்பதை காட்ட
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
முத்தமும் பாசமும் தேவை 
என்று நினைத்தேன்..
 .
என் தேசத்திற்கு 
உயிர் துறந்த வீரனை கௌரவிக்க
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
சிலையும் மாலையும்
என் மகனுக்கு அவன் பெயருமல்லாவா
என்றல்லவா நினைத்தேன்...
.
பிடித்ததை சொல்ல
பிடிக்காததை கொல்ல
எதிர்ப்பை காட்ட
ஆதரவை நீட்ட
இன்னும் எதற்கெல்லாம்
நான் லைக் இடப் போகிறானோ?
நல்ல வேலையாக
திருமணம் செய்ய
பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ
லைக் இட்டால் போதுமென்று
கலாச்சாரம் மாறும்வரை
.
அந்த புத்தகத்தின் பூச்சியாகவே
கிடந்துவிடுகிறேன்...
அவன் மூடி நசுக்கட்டும் என்னை...
.
நம்மை பிடித்த
ஒரு வாதம் அது...
உயிரோடு பிணமாக்கும்
வாதமது...

Monday, January 14, 2013

கடிக்கும் குரைக்கிற நாய்

என்னை நீங்கள்
இதற்கு முன்பு
பார்த்திருப்பீர்கள்...
எங்கேனும் நிச்சயம்
பார்த்திருப்பீர்கள்...

எங்காவது அடிபட்டு
கிடந்த உங்களை
நீதியின் அலைச்சலுக்கு
பயந்து, துடிக்க விட்டு
போய் இருந்திருப்பேன்...

உங்களை அதர்மம்
சூறையாடிய போது
என் உயிர் என்னும்
சுயநலத்தோடு கண்டு கொள்ளாமல்
நகர்ந்திருப்பேன்...

ஏன்?
உங்களை பார்த்து குரைத்த
உங்களை துன்புறுத்திய
உங்கள் காலை அசிங்கம் செய்த
அந்த நாய் நானாக கூட
இருந்திருக்கலாம்...


எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்

துடிக்க விட்டு போன
நான் நிச்சயம்
உங்கள் இறுதி ஊர்வலத்தில்
கண்ணீர் சிந்தி இருந்திருப்பேன்...
ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிருப்பேன்...
உங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு
மூச்சு முட்ட கத்தி இருந்திருப்பேன்...

துடிக்க உங்களை சாக விட்டுவிட்டு
நீதியை காப்பதாய் குறைப்பேன்
எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்



Thursday, January 3, 2013

அரிச்சந்திர பொய்கள்

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

காதலில்லை என்ற
உண்மையின் முகம்
அமிலத்தில் பொசுங்கி போகிறது...

உரிமைகள் முழங்கும்
முகப்புத்தக உண்மைகள்
சிறை அடைபடுகிறது...

காதலோ, பூக்களின்
ஹைஹீல்சில் நசுங்குகிறது...

உன் வலியோ
நிர்வாணமாக்கப்பட்டு
சோதனைக்குள்ளாகிறது

பசியோ கொலை செய்யப்படுகிறது
திறமையோ மலடாக்கப்படுகிறது
உரிமையோ ஊமையாக்கப்படுகிறது

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

புன்னகைகளின் பின்னால்
கூர் பற்கள் ருசிக்க துடிக்கிறது...
முத்தங்களின் பின்னால்
விசப்பற்கள் சீண்டிப் பார்க்கிறது
பூங்கொத்துகளின் பின்னால்
துப்பாக்கி ஒன்று குறி பார்த்து கிடக்கிறது

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

Wednesday, January 2, 2013

தெளியாத போதை

எப்பேர்பட்ட துயரமாகினும்
மறக்க
ஒரே ஒரு கிரிக்கெட் நூறோ
இன்னுமொரு புத்தாண்டு கொண்டாட்டமோ
தலைவனின் அரசியல் நுழைவோ
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட துயரமாகினும்
மறக்க மெழுகுவர்த்தியும் ஒருவார பேச்சும்
போதுமாய் இருக்கிறது...
எப்பேர்பட்ட துரோகமாகினும்
மறக்க
இன்னுமோர்  பெரிய துரோகம்
வோட்டுக்கு அதிகமாய் நூறு
ஐந்தாறு இலவசங்கள்
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட துரோகமாகினும்
மறக்க இன்னுமோர் ஐந்தாண்டு
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட வலியாகினும்
மறக்க
இசையும் தனிமையும்
பேனாவும் காகிதமும்
புத்தகமும் நீயும்
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட வலியாகினும்
மறக்க கோப்பை போதையும், பனி துண்டும்
போதுமாய் இருக்கிறது...

நீ என்கிற கொடும் போதையிலிருந்து
என்னை தெளிவிப்பது மட்டும்
இன்னும் எதாலும் எவராலும்
முடியவே இல்லை...

Wednesday, December 26, 2012

அடடே ஆச்சரியக்குறி - 3

FLAMES நம்மை
கணவன் மனைவி என்கிறது,
<< 23 vayasulaiyum flames azhagu thaan Try Chellam ;) >>
ஆண்ட்ராய்டு ஜோசியன்
ஏகப்பொருத்தம் என்கிறான்,
ஜாவாஸ்கிரிப்ட் காதல் கணிப்பானோ
நூறை தாண்டி காட்டுகிறான்...

காதலர்களின் இத்தனை
பாரம்பரியக் கருவிகளும்
பொய்யாக வேண்டுமா?
பேசாமல் உண்மையை ஒப்புக்கொள்...

(#_#)---(#_#)

ஒற்றைபுறம் வெட்டுண்ட
மீசை நகைக்குது
<< காதல் கனவில் பமீசையை பறிகொடுங்கள்
உண்மையில் நீங்க அழகா இருப்பிங்க >>
toothbrush வந்த shaving gel
கேலி பேசுது
மாற்றி மாட்டிய செருப்புஜோடி
குத்தி காட்டுது
முட்டை தோளில் போட்ட
omlette கதைகள் சொல்லுது <>

காதல் பைத்தியம் எனை
பாதித்த ஆழம் பற்றி

(#_#)---(#_#)

என் சிறுக் குறும்புகளுக்கு
முறைகிறாயே?

என்னை
சீண்டும் உன் முடியை
உசுப்பேத்தும் உன் உதடை
வம்பிழுக்கும் உன் தோடை
<< கல்யாணம் ஆகுற வரைக்கும் தோடு... பின் பூரிக்கட்டை >> 
சிறையெடுக்கும் உன் சிரிப்பை 
உறக்கம்பறிக்கும் நம் காதலை

என்றாவது நான் ஏதாவது
சொல்லியதுண்டா... நீ மட்டும் ஏன்?

என் சிறுக் குறும்புகளுக்கு
முறைகிறாயே? << கள்ளி >>

 

(#_#)---(#_#)

ஆடடே ... நீ
ஆச்சரியக் குறியுடன் ... நான்
காதல் அழகான கவிதை...

அடடே ஆச்சரியக்குறி – 1 | 2

பின்குறிப்பு - உலகம் அழியாததின் காரணம்... காதலுக்கு ஆயுசு கெட்டி...

Wednesday, December 19, 2012

[2012 v1.0] மாயன் லீ(இல்)லை

எரி கல், கருங்குழி ,பேரலை
வாய்பிழவும் பூமி என்கிறான்
மாயன் நாட்குறிபென்கிறான்
ஆனால் தான்தான்
இந்த பேரழிவிற்கான
காரணமென்பதை மட்டும்
மனிதன் மூடி மறைக்கிறான்...

அழிவை கேட்டதும்
உயிருக்கு அஞ்சியவன்
அழித்த தன் செயலுக்காய்
இன்னும் வருந்தவில்லையே

தின்பதெல்லாம் விஷம்...
செய்வதெல்லாம் அதர்மம்
பேசுவதெல்லாம் காயப்படுத்தவே
வெல்வதேல்லாம் மிதித்து தள்ளியே

"வல்லனவற்றில் வாழ்வு வளம்" (Survival of the Fittest)
டார்வின் சொன்னதென்னவோ
உயிர்கள் உருவாகத்தான்
தான் மட்டுமே உயிரென்று கொண்டு
அழிவாய் மாற்றியே விட்டான் மனிதன்

இன்னும் இந்த பூமி
இருந்து என்ன செய்ய
உலகம் அழிந்தே ஆகா வேண்டும்...

சாக பயப்படுபவனே...
எறும்பின் எண்ணிக்கை; தீப்பட்டி வீடு
யானை உடல்; சோளப்பொறி காசு
அரசியல் அசிங்கம்; விலையோ நசுக்கும்
வெடிகுண்டு புகை;ஊரெல்லாம் பகை
அறிவியல் கொலை; அறிவே விலை
என்று வாழ்வே
போராட்டமாகிப் போனவனிடம் கேட்டு பார்
உலகம் அழிவதின் அவசியம் சொல்வான்...

                                        P.S. -  உயிரோடிருந்தால் மீண்டும் (ச)சிந்திப்போம்... புது மனிதனாய்




Friday, December 14, 2012

கடிகார பல்


எதோ குரூரமான
மிருகம் அடித்ததில்
 மார்கூடு பிளவுற்று கீழ்வானத்தின்
ரத்தம் சொட்டி துவங்கியது
அந்த தனித்த நாளின் போராட்டம்

கடும் பனியிலும் வியர்க்கவைக்கும்
ஒரு நீள் கனவை போர்த்தி
உறங்கிக்கிடந்தேன் நான் ...
நிஜத்தில் என்னை  பழிதீர்க்கும்
என் ஆசைகளை
அந்த கனவு கட்டிலில் சீரளித்திருந்தேன்

அந்த பெரும் காமப் போதை தெளியும் முன்
மீண்டும் மீண்டும் மீண்டுமொருமுறை
என் மார்பெலும்பு வெடிக்குமளவு
அந்த தனிமையை பருகினேன்...

தனிமை ... அது
குட்டி தூக்கும் தாய் பூனையின்
பற் கடி சுகமல்ல அது...
பத்து நாள் பசிக்கு சிக்கிய மான்பெறும்
சிங்கத்தின் பற்பதம்
அந்த நொடி முள்ளின்
துடிப்பை தங்குவதென்பது

என் வரலாறு ஆகிப் போன
அந்த தப்பு; அந்த சிரிப்பு; அந்த பயம்
என்று நான் கடந்தது
ஆயிரம் உருவம் அச்சுறுத்தும்
கொடும் கனவது

மனைவியை அள்ளும்
கணவனின் இரவு ஸ்பரிசத்தொடு
சடாரென்று  என்னை பிடித்தது
3600 சிலுவைகளை
என் மீது ஏற்றி எனை
குண்டூசி பள்ளத்தாக்கில் நடக்க செய்தது
விச முட்கள் முடிந்த
சவுக்குகளை என் மேல் வீசியது
முடித்து  கரும் மெகா மிருகத்தின்
மேல் என் தேகம் காட்டப்பட்டது

என் காய தேகம் கட்டிய
கரும் மேக மிருகம் தீடீரென்று
உப்பளக் காட்டில் கட்டவிழ்க்கப்பட்டது 

அதை துரத்திக் கொண்டு
குரூரமான மிருகமொன்று ...
என் தேகம் உயிர் பெற்றெழுந்து
வேதனை கட்டுக்குள்
மிருகத்தை இழுத்து கொண்டு
எதிர் திசையில் ஓடினேன்
ஓட முயன்றேன்
முடியாமல் தோற்றேன்

எல்லாம் முடிந்தது
எதோ ஒரு பேனாக் முள்
முறிந்து மடிகையில் ...
விழித்து பார்த்தால்...

எதோ குரூரமான
மிருகம் அடித்ததில்
 மார்கூடு பிளவுற்று கீழ்வானத்தின்
ரத்தம் சொட்டி துவங்கியது
அந்த தனித்த நாளின் போராட்டம்

Wednesday, December 12, 2012

மறப்பதென்பது


உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை

அலறிடும் கைபேசியில்  நீ
என்று வேண்டுவதை

உன் பெயரின் முதலெழுத்து
பார்க்கையில் உன்னை நினைப்பதை

தோழி எவளாவது என்றாவது
உன் பெயர் சொல்கையில்
கலங்கிடும் கண்ணினை

அதே உடை.. உனக்கு அழகான
அதே உடை பார்க்கையில்.. நீ என்னை
முறைத்து கடந்த அந்த நாளை நினைப்பதை

அவ்வளவு தான்..
இதை மட்டும் நிறுத்தி கொண்டால் போதும்
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...

நெருப்பின் மீது சுகமாய்
படுக்க பழகி கொண்டால்...
வழிகிற கண்ணீரை ஆனந்த
கண்ணீரென்று சொல்லி விட்டால்...
மசாலா நீரின் வாளிக்குள்
கண் விழிக்க தெரிந்தால்
இரவுகளை கண்மூடி
பகலினை இருதயம்மூடி கடந்தால்

அவ்வளவு தான்..
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...

என் அழுகை  தாங்காதவர்களுக்காக
சாதியின் கையில் நம் காதலை காப்பதற்காக
உன் பெற்றோரின் அருவாளிடம் உன்னை மீட்பதற்காக
சுருக்கமாக என் காதலை காப்பதற்காக
என் காதலின் மாரிலே 
நான் இறக்கும் விசக்கத்தி தான்
உன்னை மறப்பதென்பது...
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...

என் இரவெல்லாம் நனையும்
தலையனைக் கவருக்கும்
என் ரகசியம்மொத்தம் அறிந்த
குளியலறை சுவருக்கும்
மட்டும் தான் தெரியும்
உன்னை மறப்பதென்பது
எனக்கு எவ்வளவு கடினமென்று...

Sunday, December 2, 2012

நடித்துவிடுகிறேன்

எதையும் பார்க்காதது போல்
கடந்துவிடுகிறேன்...

இருதயம் உடைத்துவிட்டு
போகும் அவளை,
நான் தேவைப்படாமல்
போன  என் நட்பை
எதையுமே

எதையும் கேட்காதது போல்
இருந்துவிடுகிறேன்...

என் முயற்சிகளை கண்டு
நகைக்கும் ஏளனங்களை,
என்னை பின்வாங்க சொல்லும்
அச்சுறுத்தல்களை
எதையுமே

எதையுமே சொல்லாமல்
வந்துவிடுகிறேன்...

அப்படி செய்தால் என்ன? என்பவரிடம்
இப்படி செய்தால் என்ன? என்பதை,
அது இல்லையா என்றவரிடம்
இது இருக்குது என்பதை
எதையுமே

எதையுமே உணராதது போல்
கிடந்ததுவிடுகிறேன்...

தன்  தேவை வருகிற பொது தான்
என்னை  அடையாளம் காணுகிற
என் உலகை,..
பணப்பையை கண்ணால் எடைபோடும்
என் உறவை அதன் வித்தையை,
எதையுமே

எதையுமே  தெரியாதவனாய்
நடித்துவிடுகிறேன்...

அழுக்கு  சட்டையில்
என்றோ மறக்கப்பட்ட 
நூறு ரூபாய் தாளின்
மௌனம் நான்...

மாதக் கடைசியின் நெரிசலில்
நான் தான் உன் கடவுள்

அந்த நாள் வரை
எதையுமே தெரியாதவனாய்
நடித்துவிடுகிறேன்...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்