Tuesday, October 28, 2014

பசி தீரா கனவு


கலி முற்றும் சாமத்தில்,
புயலேரிய கடலாகும் கட்டில்.
உச்சிமண்டையில் நடமாடும் களிறிரண்டின்
காலிலிருந்து கழன்று உருளும்
சலங்கை மணிக்குள் அனு பிளவும்.
பிடரி பூத்த வியர்வை பற்றி எரிய
நிலா வந்து நெய் வார்க்கும்.
பயந்து, பூமியிலிருந்து இறங்கி
வின்நதி மீது ஓட எத்தெனிக்கையில்
மீன்களின் முள் இடறி உயிர்
முடிவறியா குழிக்குள்ளே விழப்போகையில்…
அவள் மடியில் விழித்துக்கொள்கிறேன் நான்.

திருவிழாவில் தொலைந்த குழந்தையை
தேடி வந்து தூக்கி கொஞ்சும் தாயென
தலை வருடி, உச்சி முகர்கிறாள்.
மீண்டும் ஒரு கனவு. வேறொரு கனவு. தொலைகிறேன்.

- காதலிக்கப்படாதவன் 

Monday, October 20, 2014

அப்பிகை மழை


அவன் காதல்,

நின்று நிதானமாய்,
யோசித்து, ஒத்திகை பார்த்து,
அழகாய், கவிதையாய் எல்லாம்
பெய்யத் தெரியாத
அப்பிகை மழை.

பெய்யென பெய்கையில்,
குடை விரித்துக்கொ(ள்ளா)ல்லாதே…
தாங்காது.

o

அவன் காதல்,
கொட்டும் அப்பிகை மழை.

தேநீர் குவளையின் கதகதப்பில்
ரசிக்கக் கூடியதில்லை,

குடைபிடித்து, ஒதுங்கி
ஓடத் தேவையில்லை,

இறங்கி நட, மெல்ல நனை,
மழையிடம் உன்னைக் கொடு,
மழையை கொஞ்சம் கையில் ஏந்து.
உனக்கும் பிடிக்கும்.

o

மழையின் கல்லறையில் பூக்கும்
வானவில் ரசிக்கும் தேவதை அவள்.
அவளுக்கான வானவில் செய்ய
மீண்டும் மீண்டும் பிறக்கும் மழை அவன்.

தேவதையே வானவில் வேண்டுமா?

- காதலிக்கப்படாதவன்

Saturday, September 6, 2014

இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்


நடைபழகும் மழை பிள்ளை,
யாரோ மறந்த காப்பிக் குவளை,
நீ தந்த பாதி மிட்டாய்,
எழுந்துக்கொள்ளப் பிடிக்காமல் நீயும் நானும்.
சிலரை மழையால் அடித்துக்கொண்டு போகமுடிவதில்லை.

இடது தோள் நனைய நீ,
வலது தோள் நனைந்து நான்,
தீராத மழை, தீராத நம் பேச்சு,
நகராத கடிகாரம், ஒற்றைக் குடை.
சிலருக்கு மழையில் குடை தேவைப்படுவதில்லை.

இன்னும் வரவில்லையென நீயும்,
வந்துவிடக்கூடாதென நானும்
வேண்டியும் வந்துவிடுகிற உன் பேருந்து.
குடையெதுமின்றி நனையாமல் ஓடி ஏறிக்கொண்ட நீ,
குடை இருந்தும் நனைந்துகொண்டு வழியனுப்பும் நான்.
சிலர் நனைவதை குடைகளால் தடுக்க முடிவதில்லை.

நீ கிளம்பிய இருபத்தியோன்பதாவது நொடியின் பாதியில்
இரண்டு ஜென்ம பிரிவை சுமக்கிறேன்.
சிலருக்கு மழை எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை

சில மேகங்கள் மட்டும்
நிற்காமல் தூறும்.
நீ அந்த வகை மேகம்.
எனக்கு இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்.

Friday, August 22, 2014

அன்புள்ள கருவாச்சிக்கு

அன்புள்ள கருவாச்சிக்கு,

எனக்குள் திருட்டுத்தனமாய் நுழைந்த நீ நலம்.
என்னிடம் திருடிக்கொண்டு போன நான் நலமா?

காதலை, சொல்லிவிடுகிற வார்த்தைகளை
இன்னும் பிரசவிக்காத மொழி பேசும் ஊரில்,
அடை மழையில் சிக்கிய உப்பு வியாபாரியாய் இருந்தேன்  நான்.
காதலை சொல்ல பயப்படுகிறவன் கோழை இல்லை.
காதலிக்க பயபடுபவன் தான் கோழை.

நான் கோழையாய் சாவதை விட,
காதலிக்கப்படாதவனாய் செத்துப் போகிறேன்.
இந்தா படி. பிடித்திருந்தால்,
பதிலை கடிதமாய் தான் தர வேண்டுமென்றில்லை.
ஒரு ஸ்மைலி போதும்.
பிடிக்காவிட்டால்?!!! பிடிக்கும்.

எதிலிருந்து ஆரம்பிக்க?

உனக்கு குட் மார்னிங் அனுப்பி பேசும் ஆர்வத்தில்
2 மணிக்கே விடிந்து விடுகிற என் காலை,
குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் தாண்டி
கைபேசி வெளிச்சத்தில் அழகாய் நீளும் இரவு,
சாதாரண ஒரு நிமிடத்தைவிட பெருசாகும்
நீ பேசாத ஒவ்வொரு நிமிடமும்…
எதை பற்றி சொல்ல?

இன்னும் எத்தனை நாள்
வெறும் ஸ்மைலிகளில் உன் முகம் நான் பார்க்க?

எல்லா அலங்காரமும் களைந்து
புன்சிரிப்பு மட்டும் கொண்டு உறங்கும்
உன்னை பார்த்தே விடியட்டும் என் நாட்கள்.
இரவு உறங்கும் உன்னை முத்தமிடுகையில்
குழந்தையாய் சிணுங்க
இன்னுமொரு முத்தத்தோடு நீளட்டும் நம் இரவு.
இவ்வளவு தான்.

உன் சமையலறை சுதந்திரத்தில்
போர் எடுக்கும் என் குறும்புத்தனத்தை…
அடி பிடித்த பாலும், சமையலறை சுவரோவியமும்
கதை பேசட்டும்.
கவிதைகளின் வரிகளிலே
என் கன்னங்களை பதம் பார்த்த
உன் நகத்தளும்புகளின் சாயல் தெரியட்டும்
இவ்வளவு தான்.

இருட்டறை, அழுக்கு போர்வை,
என் மார்பில் நீ, உனக்கு(நமக்கு) பிடித்த இசைவரிசை,
உன்னிடமிருந்து பிடுங்கிகொண்ட ஒரு பாதி ஹெட் போன்,
இவ்வளவு தான்.

தாலி, மெட்டி, முத்தம், கலை
முந்தானை முடிச்சு, தலையணை மந்திரம்
உன் சீப்பில் இருக்கும் என் முடி
என் சட்டையில் படியும் உன் சேலை சாயம்,
கோபித்துகொண்ட இரவுகளின் பட்டினி..
வீம்பை பசி வெல்லும் இரவுகளில் ஒரே தட்டில் நிலா சோறு…
இந்த கடிதத்தை படித்து சிரிக்கும் நம் பேரன்
இதில் எதிலோ தான் நீயும் நானும் நாமாகி இருப்போம்.
இவ்வளவு தான்.

இந்த காதலை இப்படி பக்கம் பக்கமாகவும் சொல்லலாம்.
உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம்.
சொல்ல வந்த வார்த்தை இன்றி,
உன் முட்டை கண்களுக்குள் நான் சொல்லாமலே தொலைந்தும் போகலாம்.
இவ்வளவு தான்.

இப்படிக்கு

உன் ராம் கருவாயன்


Thursday, August 7, 2014

நத்தை கூட்டுக்குள் தேங்கிய மழை


கொட்டும் மழையில் போகும் பேருந்தின்
சரியாய் பூட்டாத சன்னல் கொண்ட இருக்கை மட்டும்
அவ்வளவு கூட்டத்திலும்
அடுத்த நிறுத்தத்தில் ஏறப்போகிறவனுக்கென காலியாய் கிடக்கிறது,
விரல் நிறைய காதல் வைத்து
உன் பெயர் பக்கத்தில் online எனக்காட்ட
கைபேசியுடன் காத்துக்கிடக்கும் நான்,

அன்ன நடையிடும்
மாநகர பேருந்தின் ஒழுகும் கூரைக்கு
“உச்” கொட்டி எரிச்சலடைபவர்கள் ரசிக்காமல்
கிடைக்கிறது சன்னலுக்கு வெளியே வானவில்,
ரொம்ப நேரமாய் காட்டும் typing-க்கிற்கு
காத்திருக்கும் பொறுமையின்றி தூக்கி நானெறிந்த கைப்பேசியில்
வந்து சேரும் உன் ஸ்மைலி,

முன் கண்ணாடியில் மழை பெய்ததும்
துடைத்துவிட்டு அமைதியாகும் பேருந்தின் wiper,
முன்னாடி விழும் அந்த ஒற்றை முடியை
விரலால் ஒதுக்கிவிட்டு அமைதியாய் பார்க்கிறாய்
ஒரு நிமிடம் துள்ளி குதித்துவிட்டு அமைதியாகும் என் இருதயம்.

ஊர் உறங்கிய இரவின் நிசப்தத்தில்
தகரக்கூரை மேல் பெய்யும் மழை…
பேசி நாம் தீர்ந்து போன
அந்த நிசப்தத்தில் உன் குண்டுக்கண்கள்  பேசும் ரகசியம்.

மழை. நீ. நான்.

Saturday, July 26, 2014

நீங்கள் திவ்யா குட்டி இல்லை


உயிரோடு எறும்பு மிதக்கும் பாலை
கண்ணுக்கு நல்லதென்று சொல்லி
குடிக்கக் கொடுக்கிறீர்கள்.
"அப்போ, எறும்புக்கு?" என்று கேட்பாளென
எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இழவு விடொன்றில்
விளையாடிய திவ்யா குட்டியை
அடித்து அழவைக்கிறீர்கள்.
நீங்கள் அழுது வராத இறந்தவர்,
அவள் அழுதாலும் வரமாட்டார்
என்று தெரிதிருக்காது உங்களுக்கு.

அவளை, வருந்த வேண்டியதற்கு சிரிக்கவும்
மறக்க வேண்டியதற்கு அழவும் செய்கிறீர்கள்.

நீங்கள் திவ்யா குட்டி இல்லை,

விளையாடவென ஐபோனைக் கொடுத்தீர்கள்.
அவள் தூக்கி போட்டு விளையாடுவாள் 
என்று எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.

அவள் விளையாடிக்கொண்டிருந்த பலூன் 
பீங்கான் பூந்தொட்டியை தட்டி உடைத்துவிட, 
கோபத்தில் அவள் பலூனை பிடுங்கி 
பரணில் எரிந்துவிடுகிறீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.

நீங்கள் உடைத்ததை விட 
அவள் உடைத்தது எல்லாம் 
திருப்பி சரி செய்யக்கூடியாதகவே இருந்தது.

நீங்கள் திவ்யா குட்டி இல்லை.
திவ்யா குட்டியாய் ஆகவும் முடியாது.

Thursday, July 17, 2014

செத்துப்போ

யாரோ ஒருவன்
பெரியவன் ஆக வேண்டி இருக்கலாம்.
தன் பலம் நிருபிக்கும் அவசியம் வரலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவனுக்கு
உன்னுடையது பிடித்துப்போகலாம்.
உன்னை பிடிக்காமல் போகலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவன்
உன் வீடு கொழுந்துவிட்டெரிகையில்
மிச்சத்தை பிடுங்கி கொள்ள வந்திருக்கலாம்.
குளிர் காய காத்திருக்கலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவனுக்கு
உன் மரணத்தில் லாபம் அதிகம் இருக்கலாம்.
நீ உட்கார்ந்திருக்கும் இடம் தேவைப்படலாம்.
அதற்காகவேனினும்,
ஏறிப் போக படிக்கட்டு வேண்டும்
ஆடும் நாற்காலியின் காலுக்கு வைக்க ஜடம் வேண்டும்.
அதற்காகவேனினும்,
செத்துப்போ.

நீ செத்துப்போகையில்
உன்னை தூக்கி போடவென
யாருமே இல்லாமல் போகலாம்.
அதற்குள்ளாகவேனினும் செத்துப்போ.

உன் பிணங்களை நல்ல விலைக்கு கேட்கிறார்கள்.

காதலிக்கப்படாதவன்


Friday, July 11, 2014

அதே மழை, வேறொரு நாள்


வக்கனை காட்டி மழை தராமல்
காற்றில் கலைந்துவிடுகிற கார்மேகமாய்,
“typing… typing… ”
என்று காட்டிக்கொண்டே இருந்த
உன்னிடம் இருந்து வந்து சேரும் வெறும் ஸ்மைலி.

காற்றை மீறி பெய்யத்துவங்கி
சொல்லாமல் கொள்ளாமல் நின்று போன மழையாய்,
திரும்ப அனுப்பாமல் குப்பைக்கு போகும்
உனக்கு டெலிவர் ஆகாத குறுஞ்செய்தி.

நின்று போன பிறகு
மரம் தூறும் தூறலாய்
திரும்ப திரும்ப படிக்கையில்
உயிருக்குள் இனிக்கும் நீ அனுப்பிய
குட் நைட்டும், குட் மார்னிங்கும்.

12 மணி தாண்டி, அரை தூக்கத்தில்
உன் குறுஞ்செய்தியோடு நீளும் நாள்…
அன்று இரவெல்லாம்
தகர ஓட்டிடம் மழை பேசிக்கொண்டிருக்கிறது
நான் சொல்லாத ரகசியத்தை…

                                  - காதலிக்கப்படாதவன்

அவள் அனுப்பிய ஸ்மைலியாய் இந்த மழை, எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை. :)

Monday, June 2, 2014

சாக்லேட் க்ஆத்அல்

|| க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3 | 4 | 5 ||

தெரியும்,
உன்னை கேட்டு அடம்பிடிக்க
நான் ஒன்றும் குழந்தை இல்லை.
அடம்பிடித்து அடைந்துவிட
நீ ஒன்றும் மிட்டாய் இல்லை.

இருந்தும் ஏனோ,
உன்னை கடக்கும் பொழுதெல்லாம்
மிட்டாய் கடை பார்த்த குழந்தையாய்
இருதயம் என்னிடம் அடம்பிடிக்கிறது.

oOo

நீயும் சரி, மிட்டாயும் சரி…

கிடைத்திருந்தால்
கொஞ்ச நேரம் இனித்து
வாயில் கரைந்து போயி ருக்கும்.

கிடைக்காததால் பார்,
நினைக்கிற பொழுதெல்லாம்
உயிருக்குள் இனிக்கிறது.

அந்த இனிப்பின் பெயர் வலியென்றிருக்கலாம்.
இனிக்கும் வலி.

oOo

என் சாக்லேட்டில்
பாதியை உனக்கு கொடுத்தால்,
உன்னை பிடிக்கும் என்று அர்த்தம்.

உன் சாக்லேட்டையும் பிடுங்கி
நானே சாப்பிட்டுவிட்டேன் என்றால்,
உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று அர்த்தம்.

P.s. – நம்ம எல்லார்கிட்டயும் பிடுங்கி தான சாப்பிட்டு இருக்கோம்!! யாருக்கும் கொடுத்தததா நியாபகம் இல்லையே!! :P

Sunday, June 1, 2014

பச்சோந்தி நிமிடங்கள்


கருகலைத்த மருத்துவச்சியின் நக இடுக்கில்
மிச்சமிருக்கும் உயிரை,
முதுகிலிறங்கிய கத்தியிலிருக்கும்
கைரேகையின் ஜாடையை,
பிரசவ களைப்பில் தாயுறங்குகையில்
குட்டி கடத்தும் கோணிப்பையின் முனங்கலை,
நடக்க இடமில்லாது இருந்தும் அந்த தெருவில்
தன்னந் தனியாய் நடக்கும் இருதயத்தை,
அடுத்த வேலைக்கு காசில்லாத கவலையின்றி
இப்போது சாப்பிடுபவனின் பசியை
சூழ்நிலையால் கொலை செய்ததாய்
அழுதுகொண்டிருந்தவனின் கையிலிருக்கும் கத்தியை

நின்று ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு
மெல்ல தன் நிறம் மாற்றிக்கொண்டு
பார்க்காதது போல் நடந்து போகிறது அந்த நிமிடம்.
அப்போதைக்கு தப்பித்துவிடுகிற பச்சோந்தியாய்.

அவர்களும் கூட.


குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்