Friday, July 26, 2013

அநாதை பிணம்


இனி யாருக்கும்
வெறுப்பதற்கென்று
என்னிடம் எதுவும் இருக்காது.
இருந்தால் இனியும்
மறைக்க தேவை இல்லை.

என்னிடம் எடுத்ததை
கொடுக்கும் அவசியமில்லை
இன்னும் வேண்டுமென்பது
எடுத்துக்கொள்ளலாம்.
இனி அனுமதியும் தேவையில்லை.

அழுதுகொண்டிருந்தவர்
கண்ணீரில் எல்லாம் கலந்திருந்தது
நான் கொடுக்க மறந்த கடன்,
நான் பகிராத வங்கி கடவுச்சொல்,
நான் எழுதாத உயில்
என்று எதோ ஒரு கவலை.

ஒரு ரோஜா மாலை
கொஞ்சம் கண்ணீர்
நிறைய பொய் ஒப்பாரி
பகட்டாய் கருமாதி சீரென்று
இவ்வளவு தான்
அவரவர் பங்கிற்கு அன்பு காட்டப்பட்டது.

கட்டாயத்தில் வந்து
கடமைக்கேன்று
இருதுளி கண்ணீர் சிந்திவிட்டு
கடைசி பேருந்தில் ஓடிய அவசரங்கள்

கொண்டு  வந்து எரிகாட்டில்
தனியாய் விட்டுப் போனார்கள்.
திரும்ப எழுந்து வந்திடுவேனோ
என்று பயம் போல்…
முழுதாய் எரிந்து முடியும் வரை
கவனமாய் பார்த்தும் கொண்டார்கள்.

எஞ்சி இருந்த சொத்து
தங்க முட்கிரீடமும், மர சிலுவை…
முள்ளாயிருந்தாலும்
யாருக்கென்பதில் சண்டை. தங்கமல்லவா?
அந்த வீட்டு முற்றத்தில்
சிலுவையும் நான் இறந்த துக்கமும்
கேட்பாரற்று கிடந்தோம்.

மூன்று நாட்களில்
ரோஜா குப்பைகள் காணாமல் போனது,
கூடிய அன்பு கூட்டங்களும்.
பதினாறாவது நாள்
வீட்டில் பத்தி வாடை மாறிப்போனது,
நான் இல்லாத இழப்பும்.
முப்பது நாள் கழித்து
அணையா விளக்கு மீண்டும் தூசிக்கு,
என் நினைவுகளோடு.

மொத்தம் வெந்து முடிந்த பின்னும்
எரி  மேடையில்
சாம்பல் தகித்துக் கிடப்பது போல்
அந்த இரு கண்ணில்
மட்டும் எனக்கான கண்ணீர்
வற்றாமல் இருந்தது…

என் இந்த மரணம்…
வாழ்வதைக்காட்டிலும்
அவ்வளவு எளிதானது.
சாவதைக்காட்டிலும்
கொஞ்சம் கடினாமனது

எல்லாம் இருந்தும்
அநாதை பிணம் நான்...

Monday, July 22, 2013

ஈரமில்லாத மழை – 4


நிற்க போவதை சொல்லாமல்
மழை  நனைத்துகொண்டிருந்தது.
நிற்க போவது தெரியாமல்
மழையில் நனைந்துகொண்டிருந்தனர்.

o

மழை விட்டுபோனதை
நம்ப முடியாதவராய் இருக்கிறார்கள்
கிளை குலுக்கி, இலை நீரில் நனைந்து
தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு.

o

நனையும் ஆசையில் வந்தவனுக்கு
மழை நின்று விட்டது,
மழை வராமல் பொய்த்து
என்ற இரண்டும் வலி தான்
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம்.
இருந்தாலும் இரண்டும் வலி தான்.

o

நொடிக்கொருமுறை
குடைக்குள்ளிருந்து கை நீட்டி பார்க்கிறார்கள்
மழை நின்றுவிட்டதா என்று…
நின்றால் என்ன? நிற்காமல் பெய்தால் என்ன?
என்ன பெரிய வித்தியாசம் அவர்களுக்கு?

o

பூக்கள் சிரிக்கிறதாம்.
மழை அழுகிறதாம்.
இவர்களுக்கு யார் சொன்னது?
இதழ் விரிப்பது பூக்களின் கண்ணீராய் இருக்கலாம்.
தூறல் தெறிப்பது மழையின் சிரிப்பாய் இருக்கலாம்.

ஈரமில்லாத மழை – 1 | 23

Tuesday, July 9, 2013

என்னை தொலைத்த நான்



"என்ன ஆனதென்று"
விசாரிக்கும் அக்கறைகளை
வழக்கம் போல்
"ஒன்றும் இல்லை, சும்மா "
என்று ஏமாற்றி விடுகிறேன்...

அந்த ஒன்றுமில்லைக்கு பின்னால்
உன் மடியினுள் புதைந்து அழுவதற்கான
அழுகையை சுருட்டி வைத்திருந்தேன்.
யாருமே மீண்டுமொருமுறை கேட்டகவில்லை.

என்னை நிரகரித்திருந்தார்கள்.
என்னை மறந்திருந்தார்கள்.
சுமையென்று ஒதுக்கியிருந்தார்கள்.
அதற்கான காரணமும் வைத்திருந்தார்கள்.
எப்படி தேவைபடுவதற்கு, அப்போ
காரணம் இருந்ததோ அதே போல்
இப்போ தேவைபடாததற்கும்.

கண்களைப்போல் காதுகளையும்
முன்னாடி வைத்திருந்திருக்கலாம்...
இப்படி, என் முதுகிடம் பேசுபவர்களை
கேட்க நேர்ந்திருக்காது. தேவைப்பட்டிருக்காது.

என் smileyகள் எனக்காய்
பொய் சொல்ல கற்றுக்கொண்டது.
என் உதடுகள் பல் காட்டி
அழுவதற்குக் கற்றுக்கொண்டது

என் இரவுகள்
என் கண்ணீரில் சாயம் போய்தான்
பகலாய் வெளுக்கிறது...
விடிந்ததா? தெரியவில்லை.

தண்ணீர் பஞ்சத்தில்
என் தேவதைகளின் இதயம்
ஈரமின்றி வறண்டு போனது...
என் கண்ணீர் கேட்கிறார்கள்
ஈரப்படுத்திக்கொள்ள

எவ்வளவு கொடுத்தும் போதவில்லை.
ஈரமில்லா தேவதை சபிக்கிறாள்.

எல்லோரும் காயபடுத்த துடிக்கும்
என் இருதயத்தை கல்லாக்கி கொண்டேன்...
காயப்பட்டு போனார்கள்.
கண்ணீர் வடித்தேன், அவர்களுக்கு தெரியாது.

காய்ச்சலின் கசப்பாய்
என் நாட்களை விழுங்கிக்கொள்கிறேன்.
முடியாவிடினும் தனியொரு ஆளாய்
தின்று தீர்க்கிறேன்.
எப்போது முடியும் இது.

யாருக்கும் தெரியாமல்
யாருக்கும் சுமையாய் இல்லாமல்
என்னை தொலைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்
நான் தொலைந்த பிறகு
சிரித்தவர்கள் இருக்கலாம். அழுதவர்கள் இருக்க கூடாது.
என் இருப்பினில் வருந்தியவர்கள்
என் இழப்பினில் பொய் கண்ணீர் எதற்கு
கொண்டாடிவிட்டு போகட்டும்...

Friday, July 5, 2013

அடடே ஆச்சரியக் குறி - 6

அவர்களை பார்பதாய்
என்னை முறைத்துபார்க்கும்
அந்த பெண்களிடம் எப்படி சொல்வேன்…
எல்லோரும் நீயாய் தெரிவதை…

காலை இரண்டு மணிதான்
என்னும் கடிகாரத்திடம்
வேகமாய் விடிய சொல்லி எப்படி சொல்வேன்…
உனக்கென எழுதி வைத்த என் குறுஞ்செய்தி
என் விரலைத் தின்னுதடி.

காலை பத்து மணிக்கெல்லாம்
கத்தி எழுப்பிவிடும் உன் மாமியாரிடம்
எப்படி சொல்வேன்…
நம் மகனின் progress card ல் கையெழுத்திடும் முன்
கனவு கலைந்துவிடுவதை…

கவிதையென்று நினைத்து
இதை படித்து கொண்டிருக்கும்
இவர்களிடம் எப்படி சொல்வேன்
அவர்கள் ஏமாந்து போகப்போவதை

எல்லாமே இருந்தும், எதையுமே
சொல்லத்தெரியாது சொல்லமுடியாது
எனக்கும். என்  கவிதைக்கும்



அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4 | 5


Tuesday, July 2, 2013

இந்த பூக்கள் விற்பனைக்கு

நூறு சவரன் நகையையும்
ரொக்க பணத்தையும்
கட்டிக்கொள்ள போகிறவனுக்கு

60 கிலோ அன்பை
வரதட்சனையாய் கொடுத்தார்கள்…

ஒன்று இரும்பு பெட்டிக்குள்
இன்னொன்று அஞ்சறை பெட்டிக்குள் சிறை

o

கண்ணீரோடு பெண் வந்தாலே
கணவன் தொல்லையாய் தான் இருக்கும் என்று
ஒரு கட்டெடுத்து கொடுத்து
“போக போக சரியாகிவிடும்”
என்று சொல்லி அனுப்பும்
பிறந்த வீட்டாரின் பணத்திற்கு

அவள் கண்ணீர் கதை கேட்க நேரம் இல்லை

o

ஊரை மெச்ச வைத்தீர்களோ இல்லையோ…
ஊரார் நாக்கில் எச்சில் சொட்ட வைத்தீர்…

இப்போது நீங்கள் கிளப்பிய
பசியின் ருசிக்கு
இவர்கள் இரையாகி போகிறார்கள்

o

அவன் கேட்டு கொடுப்பவர்களைவிட
அவர்கள் கேட்பார்களே என கொடுக்கிற
இவர்களுக்கு எப்போது புரியும்?

கசாப்புக்கடைகாரன்
ஒரு துண்டு போட்டதும்
போதும் என்ற நாயே இல்லை என்று…

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்