Tuesday, December 3, 2013

வெற்றிடத்தின் கனம்


மூன்று நாள் முன்னாள் அழைக்கையில்
வேறு அழைப்பில் இருப்பாதாய் சொல்லப்பட்ட
நண்பனின் “சாரி மச்சி. கொஞ்சம் பிஸி. சொல்லுடா”
குறுஞ்செய்தி வந்து எழுப்பிய ஓர் இரவது.
“சும்மா தான். தூங்கு, பிறகு பேசலாம்”.
என்று அனுப்பிவைத்தேன். மூன்று நாளில்,
பேச நினைத்த வார்த்தைகள் தொலைந்துவிட்டேன்.
வேறு என்ன சொல்ல?

நேரம் இரவு 3.28.
வாட்ஸாப்பில்
அவளுடைய last seen 2.57 என்றது.
9.50க்கு அனுப்பிய  ”"Hi”க்கு பதிலில்லை.
உறங்கி இருப்பாள். ஏமாற்றிக்கொண்டேன்.
last seen பற்றி யோசிக்கும் அளவு
என் இருதயம் புத்திசாலி இல்லை.

மூன்று கோடியாவது முறையாக
அன்புத் தோழி எழுதிய பக்கத்தை வாசிக்கிறேன்.
“பத்திரிக்கை அனுப்புகிறேன். நிச்சயம் வரவேண்டும்.
எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
அவள் மகனுக்கு என் மகள் தரவேண்டும்” என்று விரிந்தது.
திருமண மேடையில், புகைப்பட நிமிடங்களில்
அவள் மாமியார் முறைக்க கடைசியாய் பேசிய நியாபகம்.
பேசலாம் என்றழைக்கையில்
அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றது.
மூன்று கோடியில் முதல் முறையாக
அழுகிறேன். மீண்டும் ஒரு முறை வாசிக்கிறேன்.
நல்ல வேளை. அழைப்பை எடுத்து யாரென்று கேட்டிருந்தால்?
இன்னமும் வலித்திருக்கும்.

மார்புகூட்டில் இடப்பக்கம்,
எதோ ஒரு கனம்.
உதறி எறியப்பட்டு நிராகரிக்கப்பட்டு மறக்கப்பட்ட
இருதயம் கிடந்து கனக்குது.
“என்னை நிராகரித்து விலகிப் போக அவர்கள் யார்?”
என்று சொல்லிவிடத்தான் ஆசை.
ஆனால் எதோ ஒரு கனம்
மார்புகூட்டின் இடப்பக்கம்.

எதுவும் இல்லாமல்
என் வாழ்க்கைக்குள் வந்தவர்கள் எல்லோருமே
வெறும் கையுடன் தான் திரும்பிப் போகிறார்கள்.
இருந்தும் எதோ ஒன்றை
நான் தொலைத்திருக்கிறேன்.
நிறைய நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார்கள்.  

Thursday, November 21, 2013

தராசுமுள்ளின் கூன்


பள்ளி கட்டிடங்களுக்கு
விதிமுறைகள் வகுக்க
சில பூக்கள் சாம்பலாக வேண்டியிருந்தது.

ஒழுங்கில்லா பள்ளி வாகனங்கள்மீது
நடவடிக்கை எடுக்க
ஒரு ஸ்ருதி சக்கரத்தில் நசுங்க வேண்டியிருந்தது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமை
எதிர்த்து சட்டம் கொண்டுவர
ஒரு நிர்பயா கொல்லப்படவேண்டி இருந்தது.

தராசுத் தட்டு ஒரு பக்கம் சாய்கிற பொழுதெல்லாம்
நம் பிணங்களை காட்டி சட்டம் எழுதி
நிமித்தி நிறுத்தி இருந்தார்கள் தராசு முட்களை.

மூன்று நாள் கழித்து,
அதிகப்படியாய் ஒரு வருடத்தில்...
அந்த பூக்களை
அந்த ஸ்ருதியை
அந்த நிர்பயாவை
நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
அஹிம்சைக்காரன் சிரிக்கிற நோட்டை கொடுத்துவிட்டு
அத்துமீறல்கள் சுதந்திரமாய் திரியத்தான் போகிறது.

மீண்டும் தராசு முட்கள்
நிமிர்ந்து நிற்க
பிணங்கள் கேட்கலாம்...
ஒரு நாளுக்கு ஒரு வீட்டிலிருந்து என்னும் கணக்கில்
ஒரு நாள் உன் வீட்டிலும். 

Wednesday, November 20, 2013

கலைந்துவிடு கனவே

அது வெறும் கனவாய்மட்டும்
இருந்திருக்ககூடாதா?
கண்விழித்தவுடன்
அது முடிந்திருந்தக் கூடாதா?

திடுக்கிட்டு எழுந்து துழாவிப்பார்க்கையில்
தொலைந்து போன அந்த அன்புக்குரியவர்

பக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடாதா?
இல்லை, சும்மா அழைத்தேன் என்கையில்
திட்டிவிட்டு அலைப்பேசியை துண்டித்திருக்கக்கூடாதா?

அது கனவாய் க(தொ)லைந்துவிட்ட நம்பிக்கையில்
மீண்டும் நான் உறங்கி இருக்கக் கூடாதா?

வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
இது ஒரு நீளமான கனவாய் போக.
விழித்து இந்த கனவை
முடித்துக்கொள்ள காத்திருக்கிறேன்.

பேராசையெல்லாம் இல்லை எனக்கு.
நிஜங்களில் சில கனவாகிப் போக வேண்டும்.
கனவுகளோ மொத்தமும் நிஜமாக கையில் வேண்டும். 

கார்த்திகை இரவு


ஒரே ஒரு நிலா.
ஒரு சில நட்சத்திரம் போதாதோ?
என் கண்ணீர் துளிக்குள்
பிம்பம் விழுந்து. பிம்பத்திற்கு பிம்பம் விழுந்து.
என் கண் முன்னே நூறு விளக்கை
ஏற்றி வைத்திருக்கிறது இந்த இரவு.
o
மின்வெட்டு நாளொன்றில்
அழுக்குப் போர்வைக்குள்
அதைவிட அழுக்காய் கிடந்த
என் மார்பில் தலைவைத்துக் கிடக்கும் அவள்.
என்னை திரியாக்கி
விழி தீபம் ஏற்றி வைத்திருக்கிறாள்
எங்கள் ஒற்றை இருதயத்தின்
எட்டு அறையும் வெளிச்சமடையும்
அந்த ஒற்றை தீபம் போதாதோ.
தினமும் கார்த்திகை தான் எங்களுக்கு…
o
மருதாணி கைகள் கொண்டு
காப்பாற்றி விடுகிறாள்
அணையப்போகிற அந்த விளக்கை.
நானும் அணையப்போகிறேன்.
வருவாள் தானே… காப்பாற்ற…

Thursday, November 14, 2013

குழந்தை


தான் சீருடை மாட்டி
பள்ளிக்கு ரிக்சாவில் போகையில்
அந்த தெருவொரக்கடையில்
தன் வயது ஒருவன் அழுக்கு உடையில்
அந்த இரும்புகளோடு என்ன செய்கிறான்?
அவன் கடையில் வேலை பார்த்தால்,
அவன் வீட்டுப்பாடங்களை யார் செய்வார்கள்?
அவன் வருங்கால கனவு
என்ஜினியரா இருக்குமா டாக்டரா இருக்குமா?
என்று யோசித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு

மேடையில் கதருடைகள் பேசும்
குழந்தைகள் தினம் எதுவும் காதில் ஏறவே இல்லை.

o

பூக்கால்களை ஷூவுக்குள் திணித்துக்கொண்டு
அம்மாவின் தோசையை வாய்க்குள் திணித்துக்கொண்டு
சொல்லிக்கொடுத்த நேருவின் வரலாறை
மூன்றாவது முறையாக ஒப்புவித்துவிட்டு
ரோசா குத்தி பள்ளியில் போய்
முதல் பரிசை வாங்கிவந்துபிறகு
எல்லா வேசத்தையும் கலைத்துவிட்டு,
களைப்பில் குழந்தையாய் உறங்கிக்கொண்டிருக்கிறான்.

அம்மா சீரியல் டைட்டில் சாங்
ராகத்தில் தட்டிக்கொடுத்துக்கொண்டிருகிறாள்.

என்னைப்போன்ற குழந்தைகளுக்கு :D குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

Monday, November 11, 2013

இன்னுமொரு நாள்


தோற்றுப் போகும் அலாரம்.
உதடு சுட்ட தேனீர் குவளை.
ஈரத்துணியுடன் அறுந்து விழும் கொடி.
சோப்பு போடுகையில் தண்ணீர் நின்ற குழாய்.
பக்கத்து வீட்டுக் குழந்தையின் முத்தம்.
முறைத்துப் போகும் இரட்டைசடை தேவதை.
அன்று குறுஞ்செய்தி அனுப்பாத நீ.
அன்றும் சுவாசிக்காத நான்.

மொட்டை மாடி.

கூடு தொலைத்தலையும் பறவை
ரயில் விட்டுசென்ற அழுகுரல்.
பறிக்க மறந்து, செடி மிஞ்சிய மல்லிகை.
பசித்தழும் குழந்தை.
கல்லெறி பட்ட நாயின் வேதனை.
காலியான சாலை.
அன்றும் உன்னிடம் தர மறந்து
பையில் கணக்கும் அந்த காதல்.

12 மணிக்கு ஆறிப் போன தோசை.

யாரை நினைத்தோ விழித்திருக்கும் நிலா.
நீ என்றோ அனுப்பிய "ஸ்வீட் ட்ரீம்ஸ்"
ஹெட்போன் உளரும் இசை.
போர்வைக்குள் நுழைந்த கொசு.
தூக்கத்தில் நடக்கும் கடிகாரம்.
உறங்காமலும் எனக்குள் கணவாய் நீ.
குப்பைத்தொட்டி நிறைய கசங்கிய காதல்.
இன்னும் ஒரு குவளை "நீ". நான்.

இன்னுமொரு நாள் வாழ்வதற்கு

இதை விட காரணம் வேண்டுமா என்ன?
இன்னுமொரு நாள் உன்னோடு. 

Friday, November 8, 2013

பட்டுப்பூச்சியின் சிறகசைவு

தேன் திருடிய பட்டுப்பூச்சியின்
சிறகுதிர்ந்ததில்
தோட்டம் வண்ணமாகி இருந்தது.

இதயம் எடுத்துவிட்ட அவள் கொடுத்த
நினைவினைப்போல் அது.

தோட்டத்தின் வண்ணப்பூக்கள் எல்லாம்
நடந்த திருட்டின் சுவடுகள்.

o

காதல் ஒரு Chaos.
அவள்களின் விழி சிறகடிக்க
அவன்களுக்குள் ரிக்டர் அளவு தாண்டி வெடிக்குது
காதலென்னும் பூகம்பம்.

என்னுள், உன்னால்.

o

இமைக்காத(து) உன் விழி பார்த்திருக்கும்
எனக்குள் சத்தமின்றி கோடி பூகம்பம்.
ஒரு பூகம்பத்திர்க்காய்
பட்டாம்பூச்சி சிறகசைக்கத் தேவை இல்லை.

பார்வை ஒன்றே போதும்.

o

Chaos theory சொல்லி வளர்க்கப்பட்ட
ஒரு பட்டாம் பூச்சி தலைக்கனத்தில்
சிலந்தி வலையிடம் சோதனை நடத்தியது.

சோதனை, தோல்வியா? வெற்றியா?
சொல்ல வரவே இல்லை பட்டாம்பூச்சி

o

படித்த Chaos theory -யை புரிந்து கொள்ளாதவன்
பூகம்பமே இனி வராது என்று
பட்டாம்பூச்சியின் சிறகுகுகளை கத்தரித்தான்…
அவன் கத்தரிக்கோலின் சிறகசைப்பு
ஒரு பெரும் பூகம்பத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது அறியாமல்.

o

வானமே இல்லாத பட்டாம்பூச்சி,
சிறகு முளைத்த ஒரு கூட்டுப்புழு.

o

அவள் பூகம்பம். வந்தாள்.
வந்ததால் என் அடிவயிற்றில்
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு.
நாங்கள் இங்கே தலைகீழ் விதி.

Sunday, November 3, 2013

அவளலை

திரும்பிப் போகிற ஒவ்வொருமுறையும்
என்னைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு
போகிறதந்த கடலலை

o0o

அடியே கடலே…
எல்லை கடந்தால்
நீயும் சுடுவாயோ?

o0o

பிரிந்து போகும் அலைக்காய்
கரைகள் அழுகிறதோ?
அழுகிற கரையின் கண்ணீர் துடைக்க
அலை விரல் மீண்டும் நீள்கிறதோ?

பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது இந்த அலை

o0o

காதல் செய்யும் நேரம்.
எலியாட்ஸ் கடற்கரை.
கடல் குடித்துக்கொண்டிருக்கும் நான்.
என் இடது தோள் சாய்ந்து,
விழியால் என்னை விழுங்கிகொண்டிருக்கும் அவள்.

இருவரும் மாறி மாறி
அலை தெரித்தனர் என்மேல்…
திடீரென்று என்னைக் காணவில்லையென்றால்
எந்த அலை கொண்டு பொய் இருக்குமென்று
உங்களுக்கு தெரியுமல்லவா?

o0o

அடுத்த அலையில் கரையப்போகும்
கவலை இல்லாத குழந்தையாய் நான்
மணல் வீடு கட்டிகொண்டிருக்கிறேன்…

இன்னுமொன்று கட்டிக்கொள்ள
கரையில் இன்னும் மண் இருக்கிறதே…

o0o

கரை எற முடியாத
கடலலை திரும்ப வருவதை
நிறுத்திக்கொள்ளவேயில்லை

Saturday, November 2, 2013

23 வயதுக் குழந்தை

எடுத்துக்கொள்ள நீட்டப்படுக்கிற
மிட்டாய் தட்டில் பத்தை
எடுத்துக்கொள்ளும் அந்த குழந்தை

ஏரோப்பிளேன் சத்தத்திற்கு ஓடி வந்து
வானத்தை பார்த்து அதிசயித்துப் போகிற
அந்த குழந்தை

சன்னல் சீட்டுக்கள் காலியில்லாத
பேருந்தில் ஏறப் பிடிக்காத
அந்த குழந்தை

மூக்கில், மூஞ்சி எங்கும்
ஒட்டிகொண்ட பஞ்சுமிட்டாய் பற்றி
கவலைப்படாமல் தின்னும் அந்த குழந்தை

கிணற்று தண்ணீர் பார்த்ததும்
உச்சியிலிருந்து உள்ளே குதிக்கும்
அந்த குழந்தை

அழுகிற பொழுதெல்லாம்
நிலா காட்டி ஏமாற்றப்படுகிற
அந்த குழந்தை

அடிகிடைக்கும் பொழுதெல்லாம்,
காயமடையும் பொழுதெல்லாம்
தலையணைக்குள் புதைந்து கொள்கிற
அந்த குழந்தை

பிடித்ததை செய்ய யாரிடமும்
கேட்கத் தேவை இல்லாத,
பிடிக்காததை பிடிக்காது
என்று சொல்ல பயமில்லாத,
பட்டாம்பூச்சி சிறகுகள் மேல்
அடுத்தவரின் கனவு நிறத்தை
பூசிக்கொள்ளத் தேவை  இல்லாத

அந்த குழந்தை இன்னும் எனக்குள்
கொஞ்சம் எங்கோ மிச்சமிருக்கிறான்…
அவனை பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்.
தொலைத்துவிடாதீர்கள்… 

க்ஆ-த்அ-ல் – 5

“அ” எழுதி பழகிய சிலேட்டை
அம்மாவிடம் காட்டவென வரும்
பிள்ளையாய் உன்னிடம் பேச தொடங்குகிறேன்…

வரும் வழியில்
பையுள்ளையே அழிந்துவிட்ட சிலேட்டாய்
வார்த்தை வற்றி நிற்கிறேன்…

o

புத்தக நடுவில் வைத்த
மயிலிறகு வளராவிட்டால் என்ன…
வளர்ந்தது போல் தெரியுமே… அது போதாத?
மீண்டும் வைத்து
பூட்டிக் கொள்கிறேன் மயிலிறகை…

வைத்த மயிலிறகு நம்(என்) காதல்

o

கரடி பொம்மைகேட்டு
அழுது பார்கிறான் அந்த குழந்தை.
அடம்பிடித்தும் பார்க்கிறான்.
உண்ணா விரதம் இருந்தும் தோற்கிறான்…
கடைசியில் tom & jerry பார்த்தப்படியே தூங்கிப்போகிறான்.

கிடைக்காததால் அவனுக்கு
பொம்மையை பிடிக்காமல் போவதில்லையே…
வேறு எந்த பொம்மையையும்,
இது போல் பிடிக்காது அவனுக்கு.
அவ்வளவு தான் வித்தியாசம்.

க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3 | 4

Tuesday, October 15, 2013

திவ்யா குட்டியின் கொலு


அம்மா வேகமா
சுண்டல் மிட்டாய்லாம் கொடுத்து
பூஜையை முடிம்மா
சாமி எல்லாருடைய  வீட்டுக்கும்
போகணும் இல்லையா  என்கிறாள்…

அம்மாவும் கொடுத்து
அனுப்புகிறாள்  திவ்யாவை

o0o

என்ம்மா சாமி நம்ம வீட்டுக்கு
வர மாட்டேன்னு சொல்லிருச்சா
சாமி பொம்மை மட்டும் தான்
வச்சு இருக்கீங்க என்கிறாள் …

பதில் சொல்லத் தெரியாத அம்மா
வாயாடி வாய் ரொம்ப பேசாதே
என்று தொடையில் கிள்ளி விடுகிறாள்…

அன்று கொலுவிற்கு சாமி வரவே இல்லை நிஜமாய்

o0o

கொலு முடிந்த மறுநாள்
பொம்மைகளையெல்லாம் துடைத்து
பெட்டியில் வைத்துவிட்ட பிறகு
காலி படிகளில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தாள்

ஒற்றை பொம்மை வைத்த கொலு அது.

o0o

தாத்தா நாற்காலி, ஓட்டை வாளி,
அப்பா தலைகாணி என அடுக்கி
எட்டாத உயரத்தில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
பொம்மை பையை எடுக்க முயற்சிக்கிறாள்
திவ்யா குட்டி…

பிஞ்சுக் கை கொள்ளாமல்
பொம்மை பை சிதறி விழுகிறது…

திவ்யா குட்டிகள் இருக்கிற வீடுகளில்
தினம் தோறும் நவராத்திரி தான்…
அவள் வீட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு கூட
சாமியின் சக்தி உண்டு…

    அம்மா மாலை வீடு வந்த பிறகு
    துர்கையாக மாறலாம்
    நவராத்திரி துர்கா பூஜையாக மாறலாம்


o0o

Tuesday, September 17, 2013

பூனையும் பாலும்


அடுப்படியில் யாரோ,
எதையோ தேடப்போய்
கை தட்டி சிந்திய பாலுக்கு

அப்பாவி பூனைமேல்தான்
பழி விழுகிறது…

o

பாலை எடுத்துக்கொள்கிறார்கள்.
மாட்டிடமிருந்து இவர்கள்.
இவர்களிடமிருந்து பூனை.

எது திருட்டு?
எது மட்டும் திருட்டு?

o

ஒரு பூனையால்
குடிக்க முடியாத அளவு
பால் களவு போயிருப்பது போதாதா?

திருடியது பூனையில்லை
என்பதற்கு சாட்சி.

o

உரிமைககளையே இங்கே திருடத்தான்
வேண்டி இருக்கிறது.

பால் திருடிக்கொள்கிற
பூனையை போல்.

o

சுடும். தெரியாமல் இல்லை.
இருந்தும் பூனைக்கு
அவசரம், ஆசை.

சூடுபட்டுக் கொள்வதின் சுவை
பூனைக்கு மட்டும் தான் தெரியும்.

o

பசித்த பூனை நான்
சுடச்சுட
என்னை திருடிக்கொண்ட பால் நீ…

Thursday, September 5, 2013

கடைசி நாள்



கடன்காரன் கொடுத்த கெடுவின்
கடைசி நாள் முடிந்திருந்தது 

காத்திருந்த கடைசி
இட்லியும் விற்றிருந்தது

மிச்சமிருந்த கடைசி
சொட்டுப்  பெட்ரோலும் தீர்ந்திருந்தது

பையில் இருக்கும் கடைசி
பத்து ரூபாயும் கிழிந்திருந்தது

தட்டப்போன கடைசி கதவும்
வெளிப்புறமாய் பூட்டி இருந்தது

நான் போகும் ஊரின்
கடைசி பேருந்து புறப்பட்டிருந்தது 

பேட்டரி இல்லாமல் கடிகாரம்
கடைசி மணி காட்டியபடி நின்றிருந்தது

பேருந்து நிலையத்தில் துணையாய் இருந்த
கடைசி நபரும் கிளம்பி இருந்தார்

மிச்சமில்லாமல் கடைசி
சொட்டுக் கண்ணீரும் தீர்ந்திருந்தது

என் கடைசி நாள் அது இல்லை
என்பது மட்டும் எனக்கு தெரியும்
இப்போதைக்கு
இந்த கடைசி நாளை கடந்துவிடுவது
போதுமானதாய் இருக்கிறது… – காதலிக்கப்படாதவன்

திவ்யா குட்டி – 1


ஆசையாய் வாங்கிய ஐஸ்க்ரீமை
“அழகா இருக்குதுல்ல” என்று சொல்லி
பார்த்துக்கொண்டே இருக்க நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

கார் கேட்டு அடம்பிடிக்கும் ராமுவை
பாதி கடித்த எச்சில் மிட்டாயில்
சமாதானம்படுத்த முடிவதற்கு நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

“ஏன் அப்படி செஞ்ச?”
என்று கோபித்துக்கொண்ட அடுத்த நொடி 
“இனிமே அப்படிலாம் செய்யக்கூடாது”
என்று சிரிப்பதற்கு நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

மண்ணை சோறென்று தந்து பசி போக்க
ஜெம்ஸ் மிட்டாயை மருந்தென்று கொடுத்து
வலிக்காத ஊசி குத்தி காய்ச்சல் போக்க நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

எனக்கு அது வேண்டும்.
எனக்கு இது கிடைத்தால் உனக்கு அது செய்கிறேன்
என்று எல்லோரும் சாமியை நச்சரித்துக்கொண்டிருக்கையில்
சாமி சாப்பிட்டுடியா? இந்தா ஆப்பிள்
என்று சாமிக்கு கொடுக்க நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

எல்லோர் வீட்டிலும் ஒரு திவ்யா குட்டி.
ஆனால் யாரும் அவளை
திவ்யா குட்டியாகவே இருக்க விடுவதில்லை – காதலிக்கப்படாதவன்

Wednesday, August 28, 2013

கண்ணன் வருவான்


அந்த வீட்டு ராதைக்கு
கண்ணன் வேஷம்.
கிருஷ்ணஜெயந்தி.

o

கண்ணன் வருவான்
என்பதை நம்பாதவர்கள் தான்
 அரிசி மாவில் கால்கள் வரைகிறார்கள்.

o

சேட்டை செய்யாமல்
மீண்டும் வெளியே போய்
ஒழுங்காய் நடந்து வா என்றார்கள் குழந்தையை.
கால் தடம் அழகாய் வரவில்லையாம்.

o

முறுக்கை ஏக்கத்துடன் பார்த்தபடி,
கிருஷ்ணர் வேசத்தில் குழந்தை.
சாமி கும்பிட்ட பிறகு தான்
என்று அம்மா சொல்லி விட்டார்களாம்.
முறுக்கை ஏக்கத்துடன் பார்த்தபடி
கிருஷ்ணர் குழந்தை வேசத்தில்.

Monday, August 26, 2013

வலிகளின் ருசி


துளைபட்ட மூங்கில்
அழுதுகொண்டிருந்தது
இசையென்று ரசிக்கிறார்கள் ...

சூட்டில் மெழுகுக் கூடு
உருகியது. சேர்த்து வைத்த,
உழைப்பு எல்லாம் ஒழுகியது.
திருடிய கை முழங்கை வரை இனிக்கிறதென்கிறார்கள்

மனமுடித்த மகளின் கணவனுக்கு
விருந்தென்று சொல்லி
கெடையில் ஒரு ஆட்டின் தாலி அறுக்கிறார்கள்

சுரந்த மடியை மகனுக்கு தராமல்
போன வாரம் அவன் செத்துப் போனான்...
வைக்கோல் திணித்த அவனை நீட்டுகிறார்கள்...
மகனுக்காய் மடிசுறக்கிறாள் அன்னை இன்னமும் ... விழியும் கூட...

அடுத்தவன் வலியில் தான்
பாதிபேர் வாழ்கிறான்...
அடுத்தவனுக்கு வலிக்க வைத்து வாழ்கிறான்
அடுத்தவன் வலியில் ருசி கண்டுவிட்டவன்... - காதலிக்கப்படாதவன்

Thursday, August 22, 2013

கனவின் கனம்


மறக்கவில்லை இன்னும்,
நியாபகத்தில் இருக்கிறது
அந்த இரவு…

முகம்தெரியாத இருட்டாய் இருந்தாலும்
அவளை அடையாளம் கண்டுகொள்வதொன்றும்
அவ்வளவு கடினமாய் இல்லை அன்று.
அவளே தான் அது…
ஒரு குழந்தையை என் கைகளில் திணித்தாள்.

இன்னும் காதுக்குள் எதிரொலிக்கிறது
அந்த  குழந்தையின் அழுகுரல்
இன்னும் என் கையில் பிசுபிசுக்கிறது
அந்த குழந்தையின் மென்மை ,
அந்த  குழந்தையின் பிஞ்சு கைகள்,
பிளவாத பூ உதடு
இன்று  நினைத்தால் கூட
மயிர்கூச்சிடுகிறது உயிர் கூசுகிறது…

இன்னும் நியாபகத்தில் இருக்கிறது
என் அவள் ஜாடையில் இருந்த அந்த குழந்தை
இன்னும் நியாபகத்தில் இருக்கிறது.

என்னவாயிற்று. தெரியவில்லை.
ஒன்றும் பேசாமல் கத்திக்கொண்டு
குழந்தையின் குரல்வளையை அறுக்கத்தொடங்கினால்…
வெண்ணையில் இறங்கும் ஊசி போல
அமைதியாக அறுபட்டது…
தோல்,நரம்பு என மெல்ல நிதானமாய்…
குழந்தையும் அழாமல் வாங்கிக்கொண்டது.

ஆனால்  எனக்கு வலித்தது.
அந்த வலி,
சுமக்கும் கரு களவுபோகையில்
தாய் கொள்ளும் வலியது
விழித்த கருவிழியில் அமிலத்துளி
விழுந்த வலியது
உயிரோடு இருதயம் வெளிஎடுத்து
சுத்தியால் அடிக்கும் வலியது
வார்த்தைக்குள் அடங்காத வலியது
உங்களால் புரிந்துகொள்ள முடியாத வலியது

எதுவுமே நினைவில் இல்லை.
ரத்தம் நனைத்து விழித்துக்கொண்டேன்.
என்னவாயிற்று அந்த குழந்தைக்கு?
எதுவுமே நினைவில் இல்லை
அந்த வலியை தவிர
எதுவுமே நினைவில் இல்லை
நினைத்தாலே பிடரி நரம்புக்குள்
மெல்ல பரவுது அந்த வலி…

எழுந்து பார்த்தேன்
அந்த குழந்தை என் அருகே
அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.
வேப்பம் பூ தேனைப் போல
அந்த பிஞ்சுதட்டில் சிறுப் புன்னகை…
இப்போது வலிப்பதில்லை.
எப்பேர்பட்ட வலியும்
அந்த புன்னகையில் தீர்ந்துவிடுகிறது

Friday, August 16, 2013

இதழதிகாரம்


காதல் என்றால் என்னவென்றால்
இதயங்கள் கொடுப்பது என்றேன்…

முத்தம் என்றால்?
கொடுத்த இதயம் பத்திரமா
என்று வந்து பார்த்து செல்வது
என்று சொல்லுமளவுக்கெல்லாம்
எனக்கு பொறுமை இல்லை

o

கொஞ்சம் விட்டால் போதும்
நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
இதற்குத்தான்
என் முத்தங்களை நிறுத்துவதே இல்லை…

o

பெண் இதழ்கள், ஆண் இதழை
சிறைகொள்கையில்
என்றாவது பெண்ணாதிக்கம் என்று
நாங்கள் கத்துகிறோமா.
ஆண்கள் எப்போதும் சமத்து.

o

காதல் பாடமென்றால்,
மொத்தமும் படிக்க
ஒரே புத்தகம் அவள் இதழ்.

o

உயிர்வாழ்வதற்கு
ஆக்ஸிஜெனா தேவை?
முத்தங்கள் போதும்.

o

முற்றுப்புள்ளிகள்
தேவைப்படாத கவிதை.
யாருக்குத்தான் அது முடிவது பிடிக்கும்.

o

என்னை சொல்லிவிட்டு
நீ பேசிகொண்டே இரு.
இதற்கு தான் கவிஞனை
காதலிக்க கூடாது.
இது அவளின் கோபம்.

o

Thursday, August 15, 2013

அடிமையின் சுதந்திரம்


அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

விதயெல்லாம் மலடா போச்சு
எங்க செடிக்கு லைசன்சு எவன் பேரிலோ ஆச்சு
குலதொழிலையும் கை மறந்து போச்சு
விடியையில வேல இருக்குமா? துறமாரு இருக்காக

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

டாலர் சரிஞ்சா நெஞ்ச புடிச்சோம்
பணத்துக்காக நம்ம நாமே வித்தோம்…
அப்பா ரெண்டு ரூபாய்க்கு வித்த நெல்ல
மகன் வால்மார்ட்டில் நாப்பது ரூபா அரிசியா வாங்குறான்…
நாப்பது ரூபா ஆனா என்ன நாப்பதாயிரம் சம்பள இருக்கையில

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

ரெண்டு மாநிலம் தண்ணி கேட்டு அடிச்சுகிறான்
ஒரே மாநிலம் ரெண்டா பிரிஞ்சுகிறான்
சாதி சாமின்னு சனங்களத்தான் கொல்லுறான்
பத்திக்கிட்டு எரியற காட்டில் குளிர் வந்து காயுறான்…
என் வீட்டுக்கு எதுவுமில்ல. எனக்கெதுக்கு வீண் கவல

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

தொட்டவன் வாழ, சீதைகள் தீக்குளிக்காமல் எறிகிறார்கள்
காதல் உறங்கிய தண்டவாளத்தில் சாதி ரயிலோடுது
உழச்சவனுக்கு உணவு இல்ல, படிச்சவனுக்கு வேல இல்ல
எதிர்கட்சிக்கு பங்கு தரத ஆளும்கட்சி பிடிபதில்ல
அடுத்த தேர்தலில் தலையெழுத்து மாறும்

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

காந்தி காமராஜர் பேரை சொல்லி தேர்தலில் ஜெய்க்குது…
காந்தி பட நோட்டுக்காக மட்டும் ஆட்சி நடக்குது…
வெறும் மிட்டாயால 67 வருஷம் ஏமாற்றிப் போச்சு
பெத்தெடுக்க தாய் இன்னும் லஞ்சம் கேட்கல…
மத்தபடி இன்னும் நீயும் நானும் அடிமைகள் தான்

Friday, July 26, 2013

அநாதை பிணம்


இனி யாருக்கும்
வெறுப்பதற்கென்று
என்னிடம் எதுவும் இருக்காது.
இருந்தால் இனியும்
மறைக்க தேவை இல்லை.

என்னிடம் எடுத்ததை
கொடுக்கும் அவசியமில்லை
இன்னும் வேண்டுமென்பது
எடுத்துக்கொள்ளலாம்.
இனி அனுமதியும் தேவையில்லை.

அழுதுகொண்டிருந்தவர்
கண்ணீரில் எல்லாம் கலந்திருந்தது
நான் கொடுக்க மறந்த கடன்,
நான் பகிராத வங்கி கடவுச்சொல்,
நான் எழுதாத உயில்
என்று எதோ ஒரு கவலை.

ஒரு ரோஜா மாலை
கொஞ்சம் கண்ணீர்
நிறைய பொய் ஒப்பாரி
பகட்டாய் கருமாதி சீரென்று
இவ்வளவு தான்
அவரவர் பங்கிற்கு அன்பு காட்டப்பட்டது.

கட்டாயத்தில் வந்து
கடமைக்கேன்று
இருதுளி கண்ணீர் சிந்திவிட்டு
கடைசி பேருந்தில் ஓடிய அவசரங்கள்

கொண்டு  வந்து எரிகாட்டில்
தனியாய் விட்டுப் போனார்கள்.
திரும்ப எழுந்து வந்திடுவேனோ
என்று பயம் போல்…
முழுதாய் எரிந்து முடியும் வரை
கவனமாய் பார்த்தும் கொண்டார்கள்.

எஞ்சி இருந்த சொத்து
தங்க முட்கிரீடமும், மர சிலுவை…
முள்ளாயிருந்தாலும்
யாருக்கென்பதில் சண்டை. தங்கமல்லவா?
அந்த வீட்டு முற்றத்தில்
சிலுவையும் நான் இறந்த துக்கமும்
கேட்பாரற்று கிடந்தோம்.

மூன்று நாட்களில்
ரோஜா குப்பைகள் காணாமல் போனது,
கூடிய அன்பு கூட்டங்களும்.
பதினாறாவது நாள்
வீட்டில் பத்தி வாடை மாறிப்போனது,
நான் இல்லாத இழப்பும்.
முப்பது நாள் கழித்து
அணையா விளக்கு மீண்டும் தூசிக்கு,
என் நினைவுகளோடு.

மொத்தம் வெந்து முடிந்த பின்னும்
எரி  மேடையில்
சாம்பல் தகித்துக் கிடப்பது போல்
அந்த இரு கண்ணில்
மட்டும் எனக்கான கண்ணீர்
வற்றாமல் இருந்தது…

என் இந்த மரணம்…
வாழ்வதைக்காட்டிலும்
அவ்வளவு எளிதானது.
சாவதைக்காட்டிலும்
கொஞ்சம் கடினாமனது

எல்லாம் இருந்தும்
அநாதை பிணம் நான்...

Monday, July 22, 2013

ஈரமில்லாத மழை – 4


நிற்க போவதை சொல்லாமல்
மழை  நனைத்துகொண்டிருந்தது.
நிற்க போவது தெரியாமல்
மழையில் நனைந்துகொண்டிருந்தனர்.

o

மழை விட்டுபோனதை
நம்ப முடியாதவராய் இருக்கிறார்கள்
கிளை குலுக்கி, இலை நீரில் நனைந்து
தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு.

o

நனையும் ஆசையில் வந்தவனுக்கு
மழை நின்று விட்டது,
மழை வராமல் பொய்த்து
என்ற இரண்டும் வலி தான்
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம்.
இருந்தாலும் இரண்டும் வலி தான்.

o

நொடிக்கொருமுறை
குடைக்குள்ளிருந்து கை நீட்டி பார்க்கிறார்கள்
மழை நின்றுவிட்டதா என்று…
நின்றால் என்ன? நிற்காமல் பெய்தால் என்ன?
என்ன பெரிய வித்தியாசம் அவர்களுக்கு?

o

பூக்கள் சிரிக்கிறதாம்.
மழை அழுகிறதாம்.
இவர்களுக்கு யார் சொன்னது?
இதழ் விரிப்பது பூக்களின் கண்ணீராய் இருக்கலாம்.
தூறல் தெறிப்பது மழையின் சிரிப்பாய் இருக்கலாம்.

ஈரமில்லாத மழை – 1 | 23

Tuesday, July 9, 2013

என்னை தொலைத்த நான்



"என்ன ஆனதென்று"
விசாரிக்கும் அக்கறைகளை
வழக்கம் போல்
"ஒன்றும் இல்லை, சும்மா "
என்று ஏமாற்றி விடுகிறேன்...

அந்த ஒன்றுமில்லைக்கு பின்னால்
உன் மடியினுள் புதைந்து அழுவதற்கான
அழுகையை சுருட்டி வைத்திருந்தேன்.
யாருமே மீண்டுமொருமுறை கேட்டகவில்லை.

என்னை நிரகரித்திருந்தார்கள்.
என்னை மறந்திருந்தார்கள்.
சுமையென்று ஒதுக்கியிருந்தார்கள்.
அதற்கான காரணமும் வைத்திருந்தார்கள்.
எப்படி தேவைபடுவதற்கு, அப்போ
காரணம் இருந்ததோ அதே போல்
இப்போ தேவைபடாததற்கும்.

கண்களைப்போல் காதுகளையும்
முன்னாடி வைத்திருந்திருக்கலாம்...
இப்படி, என் முதுகிடம் பேசுபவர்களை
கேட்க நேர்ந்திருக்காது. தேவைப்பட்டிருக்காது.

என் smileyகள் எனக்காய்
பொய் சொல்ல கற்றுக்கொண்டது.
என் உதடுகள் பல் காட்டி
அழுவதற்குக் கற்றுக்கொண்டது

என் இரவுகள்
என் கண்ணீரில் சாயம் போய்தான்
பகலாய் வெளுக்கிறது...
விடிந்ததா? தெரியவில்லை.

தண்ணீர் பஞ்சத்தில்
என் தேவதைகளின் இதயம்
ஈரமின்றி வறண்டு போனது...
என் கண்ணீர் கேட்கிறார்கள்
ஈரப்படுத்திக்கொள்ள

எவ்வளவு கொடுத்தும் போதவில்லை.
ஈரமில்லா தேவதை சபிக்கிறாள்.

எல்லோரும் காயபடுத்த துடிக்கும்
என் இருதயத்தை கல்லாக்கி கொண்டேன்...
காயப்பட்டு போனார்கள்.
கண்ணீர் வடித்தேன், அவர்களுக்கு தெரியாது.

காய்ச்சலின் கசப்பாய்
என் நாட்களை விழுங்கிக்கொள்கிறேன்.
முடியாவிடினும் தனியொரு ஆளாய்
தின்று தீர்க்கிறேன்.
எப்போது முடியும் இது.

யாருக்கும் தெரியாமல்
யாருக்கும் சுமையாய் இல்லாமல்
என்னை தொலைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்
நான் தொலைந்த பிறகு
சிரித்தவர்கள் இருக்கலாம். அழுதவர்கள் இருக்க கூடாது.
என் இருப்பினில் வருந்தியவர்கள்
என் இழப்பினில் பொய் கண்ணீர் எதற்கு
கொண்டாடிவிட்டு போகட்டும்...

Friday, July 5, 2013

அடடே ஆச்சரியக் குறி - 6

அவர்களை பார்பதாய்
என்னை முறைத்துபார்க்கும்
அந்த பெண்களிடம் எப்படி சொல்வேன்…
எல்லோரும் நீயாய் தெரிவதை…

காலை இரண்டு மணிதான்
என்னும் கடிகாரத்திடம்
வேகமாய் விடிய சொல்லி எப்படி சொல்வேன்…
உனக்கென எழுதி வைத்த என் குறுஞ்செய்தி
என் விரலைத் தின்னுதடி.

காலை பத்து மணிக்கெல்லாம்
கத்தி எழுப்பிவிடும் உன் மாமியாரிடம்
எப்படி சொல்வேன்…
நம் மகனின் progress card ல் கையெழுத்திடும் முன்
கனவு கலைந்துவிடுவதை…

கவிதையென்று நினைத்து
இதை படித்து கொண்டிருக்கும்
இவர்களிடம் எப்படி சொல்வேன்
அவர்கள் ஏமாந்து போகப்போவதை

எல்லாமே இருந்தும், எதையுமே
சொல்லத்தெரியாது சொல்லமுடியாது
எனக்கும். என்  கவிதைக்கும்



அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4 | 5


Tuesday, July 2, 2013

இந்த பூக்கள் விற்பனைக்கு

நூறு சவரன் நகையையும்
ரொக்க பணத்தையும்
கட்டிக்கொள்ள போகிறவனுக்கு

60 கிலோ அன்பை
வரதட்சனையாய் கொடுத்தார்கள்…

ஒன்று இரும்பு பெட்டிக்குள்
இன்னொன்று அஞ்சறை பெட்டிக்குள் சிறை

o

கண்ணீரோடு பெண் வந்தாலே
கணவன் தொல்லையாய் தான் இருக்கும் என்று
ஒரு கட்டெடுத்து கொடுத்து
“போக போக சரியாகிவிடும்”
என்று சொல்லி அனுப்பும்
பிறந்த வீட்டாரின் பணத்திற்கு

அவள் கண்ணீர் கதை கேட்க நேரம் இல்லை

o

ஊரை மெச்ச வைத்தீர்களோ இல்லையோ…
ஊரார் நாக்கில் எச்சில் சொட்ட வைத்தீர்…

இப்போது நீங்கள் கிளப்பிய
பசியின் ருசிக்கு
இவர்கள் இரையாகி போகிறார்கள்

o

அவன் கேட்டு கொடுப்பவர்களைவிட
அவர்கள் கேட்பார்களே என கொடுக்கிற
இவர்களுக்கு எப்போது புரியும்?

கசாப்புக்கடைகாரன்
ஒரு துண்டு போட்டதும்
போதும் என்ற நாயே இல்லை என்று…

Tuesday, June 25, 2013

யாருமற்றவன்

எப்படி இங்கு வந்தேன் ?
தெரியாது …
யார் கூட்டி வந்தது ?
தெரியாது …
அழைத்து வந்த தேவை தீர்ந்திருக்கலாம்
இல்லை
அழைத்து வந்ததே வீணென்று நினைத்திருக்கலாம்.
விட்டுவிட்டுப் போய் விட்டனர், என்னை…

ஆம்
தேவை தீர்ந்ததும்
தூக்கி எறிவதொன்றும்
இவர்களுக்கு புதிதில்லையே … எனக்கும் பயமில்லையே …

எனக்கென்று நேரம் இல்லை,
என்னை அழைத்துவந்தது நினைவில் இல்லை,
என்னை சேர்க்கும் இடம் தெரியவில்லை,
தவற விட்டுவிடப்போகும் பேருந்து,
அவசர வேலை…
என்று அவர்களுக்கு சொல்லி கொள்ள
ஆயிரம் காரணங்கள் இருந்தது.

யாருமே செய்வதில்லை நான் மட்டும் ஏன்?
எப்படியும் அவர்கள் செய்வார்களே. அப்புறம் ஏன் நான்?
என்று ஒவ்வொருவர் பக்கமும்
ஒரு நியாயம் இருந்தது …

எனக்கென்று
கவலைபடக் கூட ஆள் இல்லாமல்
தெருவில் நிற்கிறேன்…

                                   இப்படிக்கு தெரு குப்பை…

Monday, June 24, 2013

என்னை வாசித்த கவிதை


ஒரு போட்டிக்கென
எழுதி வைத்த கவிதையை
எடுத்து படித்துவிட்டு
நன்றாக இருப்பதாய் சொன்னாள்…

போட்டி துவங்கும் முன்
வெற்றி பெற்றிருந்தது என் கவிதை
o
பிடித்திருப்பதாய்
அவள் சொன்ன பிறகு
என் சோக கவிதை கூட
அன்று முழுக்க சிரித்திருக்கிறது

என்னை போலவே

o
தனக்கு எழுத வருவதில்லை
என சொல்லி உதடு சுளித்தாள்…

என்னை எழுத வைத்துகொண்டிருப்பது
அவளென்று தெரியாமல்

o
அவள்களைவிடவோர்
ஆகச்சிறந்த கவிதையை எழுதி
அவளுக்கு கொடுக்க முயற்சித்துகொண்டிருக்கும்
அவன்களை தான்
இந்த உலகம் கவிஞன் என்கிறது..

என்னையும்…

தோற்று போன எல்லா கவிஞர்களும்
காதலை எழுதுகிறார்கள்
வெற்றி பெற்றுவிடுகிறார்கள்

நானும் கூட

o
என் கவிதைகள்
எல்லாமுமே கற்பனைகளே.
எல்லாவற்றிலும் பொய் கலந்திருந்தது.

“நான் உன்னை காதலிக்கிறேன்”
என்று சொன்னதைத் தவிர…

Sunday, June 23, 2013

நீ எனப்படும் நான்



கடவுள் சொல்ல கேளாமல்
சாத்தான் சொல் மீறாமல்

ஏவாள் தர
ஆப்பிள் தின்ற ஆதாமிற்கு
கடவுள் தந்த காதல் சாபமாம்.

அந்த கடவுளிடம் சொல்லுங்கள்
உண்மையில் அது வரமென்று.

காதலே!
நீ எனக்கான வரம்.

o

ஒரு பாதி என்பது
ஈசனின் இழப்பல்ல.
அவ(ளென்னும்)ளின் மறுபாதி
அவனை நிறை செய்த லாபம்

நீ என்னை
நிறை செய்த சரிபாதி

o

உன்னை காதலிக்காத
அவளை எப்படி காதலிக்கிறாய்
என்கிறார்கள்…

யாருக்கும் என்னை போல்
காதலிக்கத் தெரியவில்லை…
வேறு என்ன சொல்ல?

நான் உன்னை காதலிக்கிறேன்
இது இறவாத காலம்…

o

என் மனைவி அதிர்ஷ்டசாலி என்பதை
நீ சொன்ன பிறகு தான் தெரிந்தது
நான் துரதிர்ஷ்டசாலி என்பது…

நான் எனக்கான சாபம்…

Thursday, June 13, 2013

நின்ற(றாலும்) மழையில் நனைபவன்

கொட்டும் மழை.
எல்லோரும் ஒதுங்கி நிற்க
நான் மட்டும் இறங்கி நடந்தேன்…

எல்லோரும் என்னை
கிறுக்கனாய் பார்த்தார்கள்

அடுத்த நாள்
அந்த மழை இல்லை. வெயில்.

ஒதுங்க யாருக்கும் நேரம் இல்லை
ஓடும் கால்களுக்கு
பொசுக்கும் சூடு பொருட்டாய் தெரியவில்லையோ?

ஓரத்தில் ஒதுங்கி நின்ற எனக்கு
இன்று எல்லோரும் கிறுக்கன்களாய் தெரிந்தார்கள்

o.o.o.

அந்த மழையில்
இதற்கு முன் வந்த
அந்த மழையை போலவே

அவர்களுக்கு
சூடாய் தேநீர் தேவை
காதோரம் இன்னிசை தேவை
கதகதப்பாய் காதல் முத்தம் தேவை
உயிர் வரை சிலிர்ப்பூட்டும் குளிர் தேவை
இதை எல்லாம் தருகிற மழை தேவை

இப்படி தேவைமட்டும் படுகிற
மனிதர்களை(?) பார்த்து
மழைக்கு சலித்து விட்டது…

எல்லாம் தர தயாராய் இருக்கும்
அவர்களைத் தேடி தான்
மழையும் எப்பொழுதாவது வருகிறது

o.o.o.

கப்பல்கள் கவிழ்ந்த பிறகும்,
சிரிக்க நீ குழந்தையாய்
இருந்திருக்க வேண்டும்

                                                                        - #R#

Tuesday, May 28, 2013

என்னை மன்னிப்பாயா?

மன்மத கணை
பூ கணை என்று நினைத்துதான்
உன் மீது எய்தேன்…
கணை உன் இருதயம் காயபடுத்தும்,
தெரியாமல் இருந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

தேன்கூடாகத்தான்
நம் காதலை
இதயத்தில் கட்டினேன்…
என் இம்சை தேனீ.
கொட்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

ரோஜாக்கள் என்றெண்ணி தான்
என் கவிதையை
உன் பாதையில் கொட்டினேன்.
என் பேனா முட்கள்.
குத்தும் என்பதை மறந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

நீ ரசிக்க, ரசித்து சிரிக்க
காத்தாடியாக உன் வானத்தில்
பறந்து வந்தேன்…
மாஞ்சா கயிறு கழுத்தறுக்குமென்று
நினைக்கவில்லை.
என்னை மன்னிப்பாயா?

0

நீ இன்னொரு வானத்து நிலா
நான் நிலா ரசிக்கும்
பிள்ளையாய் பிறந்து(தொலைந்து)விட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

ஈரமில்லாத மழை – 3



இடி மட்டும்
விழுந்து கொண்டே இருந்தது
மழை வரவும் இல்லை…
இடி தாக்கிய மரம் மீண்டும் தளிர்க்கவும் இல்லை

o + o + o

ஓங்கி பெய்த மழை ஓய்ந்ததும்
எல்லோரும் நகரத் துவங்கினர்…

அவர்கள்  விட்ட குடை
அவர்கள் நினைவிற்கு வரவே இல்லை…
அடுத்த மழை வரும் வரை

o + o + o

வானவில்லும் வேண்டுமென்கிறாய்.
மழையையும் பிடிக்காதென்கிறாய்!

o + o + o

எந்த மேகம் மழை மேகமென்று
அந்த மயிலுக்கு மட்டும் தெரிகிறது..

என்னை சரியாய்
மொழிபெயர்த்துவிடுகிற அவளை போல…

பல நேரங்களில்
தோகை விரித்த மயில்
ஏமாந்து போகிறது… ஏமாற்றப்படுகிறது.
அந்த பொய்யை நம்புவது தான்
மயிலுக்கு நல்லதென்கையில்
மேகம் மயிலை ஏமாற்ற யோசிப்பதே இல்லை

o + o + o

மழை நிற்கபோகிறதென
தெரிந்த பிறகு
மழையை ரசிக்க பயமாய் இருக்கிறது…
நாளை மழை கேட்டு அடம்பிடிக்கும்
என்னை எதை காட்டி ஏமாற்றுவது…

o + o + o

மழை வர காத்திருந்தவர்கள்
இன்று நிற்க காத்திருக்கிறார்கள்…

ஈரமில்லாத மழை – 1 | 2

Wednesday, May 22, 2013

எதுவேண்டுமானாலும் நடக்கலாம்

இன்னும் 20 வருடத்தில்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்

எந்தவேறொரு இனமும்
இல்லாது போய்விடுமெனில்
இனி தேசிய விலங்கு மனிதன்
தேசிய பறவை மனிதன்
தேசிய மரம் மனிதன்
என்று அறிவிக்கப்படலாம்

எந்தவொரு இடமும்
இல்லாது போய்விடுமெனில் 
காலை தொலைக்காட்சியில்
சென்னைக்கு மிக அருகே வெள்ளி கிரகத்தில்
2 சதுர அடி வெறும் 25 கோடி
நடிகைகள் விளம்பரம் செய்யலாம்…

எந்தவொரு உணவும்
இல்லாது போய்விடுமெனில்
மனிதன் மனிதனையே
அ(பி)டித்து தின்ன துவங்கலாம்

போகும் கண்டமெல்லாம் குப்பை
பார்க்கும் திசையெங்கும் பாலிதீன் புழுதி
சுவாசிக்கும் காற்றுகூட நஞ்சு
குடிக்கும் நீருக்கு கூட காசு என்று மாற்றி 
எதை நோக்கியோ ஓடுகிறானே மனிதன்
அதை வென்றுவிடலாம்…

ஆறறிவின் அட்டூழியம் தாங்காமல்
மற்ற ஜீவன்கள் சுதாரித்து
மனித இனத்தை துரத்திவிட்டு
பூமியை காப்பாற்றிவிடலாம்

ஆறறிவு இருந்தும்
முட்டாளாகவே இருக்கும் மனிதன்
திடிரென்று ஞானோதயம் கொண்டு
மற்ற ஜீவன்கள் வாழவும் வழிசெய்யலாம்
பூமியை வருங்காலத்திற்கென மிச்சம் வைக்கலாம்

இன்னும் 20 வருடத்தில்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்
அந்த இருபது வருடமே இல்லாமல் கூட போகலாம்

Tuesday, May 21, 2013

அடடே ஆச்சரியக் குறி – 5


நீ, சயனைடு நதி
நான் உன்னில் வாழப்பழகிய மீன்.
நம் காதல் மரணம் வெல்லும்.

நீ, வற்றா நதி
நான், தீரா தாகம்.
நம் முத்தம் முற்றாமல் நீளும்

நீ,  நிஜம்
நான் கனா.
நான் நீயாகிறேன். காதல் நாமாகும்.

நீ, இனி நான்.
நான் எப்போதோ நீ.
இன்னும் இதழ்கள் நான்கு எதற்கு?

சில ஜோடிகள் சொர்க்கத்தில் உருவாகின்றன
சில ஜோடிகள் சொர்கத்தை உருவாக்குகிறார்கள்
நாம் சொர்கத்தை உருவாக்கும் ஜோடி


அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4

Saturday, May 18, 2013

தண்டசோறு


என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?

யாரோ குடித்துவிட்டு போட்டு போன
பாட்டில்களுக்கு நான் கர்தாவாகாமல் காரணம் மட்டுமானது
“கீழ் வீட்டு பெண்ணை காணவில்லையாம்” என்றதும்
அவனாகத் தான் இருக்கும் … என்று என் பெயர் அடிபட்டது
“வேலைக்கு போகலாம்ல, காசோட அருமை தெரியுதா” என்றவர்க்கு
தெரிந்ததால்தான் ஆறு ரூபாய் டிக்கெட் மிச்சமாக்க
10 கிலோமீட்டர் நடந்தது

என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?
.
நான் பக்கத்து வீட்டு குழந்தைக்கு
சோறு ஊட்டுகையில் பூச்சாண்டியாக பயன்பட்டது…

என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?

இந்த தண்ட சோறு(கள்) தோற்காமல்
அவர்கள் வென்றிருக்கவே முடியாதென்று

ஈரமில்லாத மழை – 2


அவளுக்கு சேராது என்று தெரிந்தபின்
அந்த மழை பொழியவே இல்லை…

என்றாவது பெய்யும் மழையால்
அவள் காய்ச்சல் கொண்டால் கூட
அந்த மழைக்கு பின்னான வானவில்
சாயம் இல்லாமல் தான் இருந்தது…

# o # o #

சாரல் துளியின் கணம் தாளாமல்
உதிரும் என்று தெரிந்தும்
அந்த மலர் மழை ரசித்து கொண்டிருந்தது
உதிர்வதின் வலி சுகம் என்பது
மலர் தவிர்த்து யாருக்கு புரியும்…

# o # o #

போன முறை
அவன் ரசித்துகொண்டிருக்கையில்
சட்டென்று நின்ற மழை
இந்த முறை மீண்டும் வந்திருந்தது
ஆனால் ரசிக்க அவன் இல்லை அங்கே
அவன் இருக்க போவதில்லை எங்கயும்…

# o # o #

நிமிடத்தில்
அந்த குழந்தை சிரிப்பை எடுத்துக்கொண்டு
ஓடிப் போக போகிற
அந்த மழை
ஓங்கி பெய்து கொண்டிருந்தது…
இது தெரியாமல் அந்த குழந்தை
சிரித்து விளையாடிகொண்டிருந்தது மழையில்

# o # o #

மேகத்தில் பிறக்கிற “அதே மழை”
மண்ணிற்கு வருவதில்லை
என் இருதய வார்த்தைகளும் கூட…

# o # o #

நான் மழை.
நீங்கள்
என் கண்ணீரை ரசிக்கும் வரம் பெற்றவர்கள்

ஈரமில்லாத மழை – 1

ஈரமில்லாத மழை - 1

நனையாமல் எல்லோரும்
குடை பிடித்துக்கொள்ள
கொட்டுகிற மழை கண்ணீர்.
அவள் இருதயம் குடை பிடித்துக்கொள்ள
என் காதலும் கூட மழையாய் அழுதது…

திட்டும் அம்மாக்கு தெரியாமல் சன்னல் வழி
மழை அள்ளி குழந்தை ஒன்று விளையாட
மழை சிரித்தது… நானும்…
அவள், என் இருதயம் வைத்து விளையாடும் குழந்தை…

# o # o #

மழைக்கு தெரிவதே இல்லை
அதனால் உயிர்கொண்ட பூக்கள் பற்றியும்
அதனால் உதிர்ந்த பூக்கள் பற்றியும்

# o # o #

நனைத்தது மழையின் குற்றமும் இல்லை…
நனைந்தது என் குற்றமும் இல்லை…
காய்ச்சல் தண்டனையாவது ஏனோ?
காதல் காய்ச்சல் எனக்கு…

# o # o #

மழையும் நானும் அழுகிறோம்…
யாருக்கும் தெரியாமல்
எல்லோரையும் மகிழ்வித்து
மழையும் நானும் அழுகிறோம்…

# o # o #

குடை பிடித்து போகிறவர்களே
இது தான் கடைசி மழை…
தெரிந்து தான்
குடைக்குள் போகிறீர்களா?

# o # o #

பங்குனி இரவில்
கனவினில் வரும் மழையை
யாரால் தடுக்க முடியும்…
நான் கொண்ட நினைவை போலது…
என் இரவெல்லாம் தூறுது…

# o # o #

மழை சுதந்திரம் யாருக்கு இருக்கு?
நினைத்தவுடன் அழுதிட முடிவதில்லை

முடியா முடிச்சு


தாகம் எடுத்தவன் கண்ணில்
தடாகம் சிக்குகிறது…
யாரையும் நெருங்க விடாமல்
தடாகம் சுற்றி வேலி போட்டுகொண்டு
இறங்கி குடிக்கத்தொடங்குகிறான்…
தடாகம் தீர்கிறது…
தடாகங்கள் தீர்கிறது…
தாகம் மட்டும் தீர்ந்ததாய் தெரியவே இல்லை…

+ o + o +
சட்டென்று அடைத்து
உட்புறம் தாழிடப்படும் கதவுகள்

உள்ளே நுழைய அனுமதி இல்லை என்றோ
உள்ளே நுழைய அனுமதி இல்லாதவர் எவரோ
நுழைந்துவிட்டனர் என்றோ

சொல்லிவிட்டு சட்டென்று மூடிக் கொள்கிறது

 
+ o + o +
தன் கனிகள் அடிக்கடி திருடுபோவதாய்
கனிமரம் ஒன்று அழுது கொண்டிருந்தது…

அதன் கண்ணீர் பற்றி யாருக்கும் கவலையில்லை?

அடிக்கடி திருட்டு போகும் கனிகள் என்றால்
இந்த மரத்தின் கனிகள் எவ்வளவு சுவையோ!!
என்று எல்லா திருட்டு புத்தியும் கணக்கு போட்டது

கனிமரத்தின் கண்ணீர் நிற்கவும் இல்லை
கனிகள் திருட்டு போவது நிற்கவும் இல்லை
இங்கே ஏகப்பட்ட கனி மரங்கள் மட்டும்
முளைத்து கொண்டே இருந்தது…
+ o + o +
உள்ளே ஒரு பூனை
குறுக்கும் நெடுக்கும் அலைகிறது…

போகும் வழியில் பாலை தட்டிவிட்டு
குடித்து கொள்கிறது…

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது

மீண்டும் அதன் வழியில்
பால் நிரம்பிய செம்பு ஒன்று…
மீண்டும் பாலை தட்டிவிட்டு குடித்து கொள்கிறது

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது
பாலை திருடியதல்ல குற்றம்
பாலை அங்கே வைத்தது குற்றம்
பூனையை அலையவிட்டது குற்றம்


பின்குறிப்பு - இரவு எவ்வளவு சொல்கிறது… அதை கேட்காமல் உதாசினப்படுத்திவிட்டு எப்படி உங்களால் உறங்க முடிகிறது…

Friday, May 3, 2013

சர்க்கரை வலி

பால் குடிக்கையில் பிள்ளை
மார் கடிக்கும் தாயின்பம்
 
உறங்கிய தந்தை முதுகில்
குதித்தாடும் பிள்ளை பாதம்
 
தந்தை முத்தம் நடுவே
குறும்பு செய்யும் மீசை
 
கொட்டும் மழை நடுவே
சுண்டி இழுக்கும் ஐஸ் வண்டி மணியோசை 
 
மறந்து போன கனவை 
மீண்டும் பார்த்துவிடும் ஆசை
 
கட்டெறும்பு முத்தமிட்ட கண் இமை
சொல்லி விளக்க முடியாத சயனைடு சுவை…
 
காதலித்ததுண்டா?
காதல் வலி கொண்டதுண்டா?
எல்லோரும் ரசிக்கின்ற வலி
காதல்…நானும்…

Thursday, April 25, 2013

க்ஆ-த்அ-ல் – 4


இரட்டைக் குழந்தைகள்.
காலம் காதல் அவர்கள் பெயர்.

சுவரில் காதல் ஒரு ஓவியம் வரையும்
காலம் திடீரென்று
அடித்து, அழித்து, காதலை அழவைத்துவிட்டு
தான் விரும்பிய ஓவியம் வரையும்…
ஓவியம் விரியும்…காதல் கரையும்
அந்த சுவர் என் வாழ்க்கை…

அவர்கள் இருவரும்
ஒரு மிட்டாய்கென சண்டைபோட்டு,
அமைதியாகி சேர்ந்துவிடுகிறார்கள் நிமிடத்தில்…
மிட்டாய் மட்டும் மண்ணில்.
அந்த மிட்டாய் என் இரவு…

குழந்தை கடித்தால் அம்மாவிற்கு வலிக்குமா?
வலிக்காது என்பது பொய்…
வலிப்பதை வெளியில் சொல்வதில்லை…
இரண்டு குழந்தையின்
கடியை ரசிக்கும் தாய் என் நெஞ்சம்

காதல் ஒரு குழந்தை
காலம் ஒரு குழந்தை
அவர்கள் இருவர் கையில் மாட்டி
உடையும் பொம்மை நான்…
.
.
க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3




Friday, April 19, 2013

முடிந்த இரவு விடியாத பகல்

அழுத பிள்ளை உணவு உண்ணவென
வானம் வந்த நிலா…
இன்னும் விழித்து கிடக்கிறது
பிள்ளை உறங்கும் அழகை ரசித்தபடி…

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு முத்தமென
எண்ண தொடங்கிய காதலர்கள்
எண்ணுவதை மட்டும் விட்டுவிட
பரிமாறிக்கொண்ட முத்தங்கள் நட்சத்திரமாய்

“தூங்கிட்டியா செல்லம்” அவள் விரல் மடலில்
உறங்கவே தொடங்காத அவன் இரவு
இரண்டு மணிக்கெல்லாம் விடிந்து விடுகிறது…

எல்லோருக்குமான  இரவு நகர்ந்து கொண்டிருக்க
இவனுக்குமட்டும்மேனோ
தூண்டில் முள் முழுங்கிய மீனின் ரணமாய்
இரவு முடியவும் இல்லை  பகல் விடியவும் இல்லை

இரவு பண்ணிரெண்டானால் என்ன?
பரவாயில்லை நான் அனுப்பிய
குட்மார்னிங் குறுஞ்செய்திக்கு பதிலனுப்பி
என் நேற்றை விடிய விடு…
இல்லை போனால் போகட்டும்
சற்று முன் அனுப்பிய ஸ்வீட் ட்ரீம்ஸ்க்காவது
பதிலனுப்பி இன்றை முடிய விடு 
நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தி ஸ்மைலி
என்னை சிரித்து கொல்லுதடி…
முடியாத இந்த நாள் என்னை
எங்கோ இழுத்து செல்லுதடி

கடவுளின் கண்ணீர்

முன்குறிப்பு -
  • எல்லாம் கற்பனையே... யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
  • கடவுள்களே நீங்கள் என் நண்பர்கள் என்கிற உரிமையில் வம்பிழுத்துவிட்டேன். மன்னிக்கவும்.
  • இங்கே என் கடவுள்களை பற்றி நான் பேசி உள்ளேன். யாரவது வந்து ஏன் என் கடவுளை பற்றி பேசினாய் என்று கேட்டால்என்னிடம் பதில் இல்லை. மன்னிக்கவும்.
    யாரைபற்றியும் கவலைபடா(ட நேரமில்லா)த
    மாநிலத் தலைநகரின் மூலையில்
    ஒரு ஆண்கள் தங்கும் அறை அது…

    மூலையில் சிலுவை மரம்
    தரையில் தங்க சங்கு சக்கரம் அடகு ரசிது
    தூசி படிந்த ஹம்சதூளிகா மஞ்சம்* நான்கு

    மூன்று மாத கடன் பாக்கியுடன்
    நாயர் கடை பையன் வைத்துவிட்டு போன
    டீ யில் ஒரு ஈ உயிர் தியாகம் செய்திருந்தது…

    சிவந்த கண்கள் முழுக்க வெறித்த பார்வையுடன் லட்சுமிமணாளன்
    மறுகன்னம் காட்டிய வலியுடன் பரமபிதா
    பழைய செய்திதாளில் மூழ்கிய நபிகள்
    நிம்மதி இழந்து குறுக்கும் நெடுக்குமாய் அலையும் புத்தன்

    ஆண்கள் தங்கும் அறை அது…

    என்னை சிலுவையில் அறைந்த
    கல்வாரி மலையை குவாரிகாரனுக்கு தின்று தீர்த்துவிட்டான்
    என்னை அறைந்து சிலுவை நட வேறு இடம் வாங்கலாமென்றால்
    சதுர அடி ஆயிரம் ரூபாயாம்!!
    மனித பிறப்பிற்கு மட்டும் தான் சாவதற்கு கூட காசு வேண்டும்
    இந்த ஈயை பார் எவ்வளவு நிம்மதியாய் மரணம்…
    முடிந்தால் மூன்றாம் நாள் உயிர்தெழாத ஆணி கொண்டு
    என்னை அறைந்து விடுங்கள் அடுத்த முறை…
    அமைதியை உடைத்தார் பரமபிதா

    நீ பரவாயில்லை மச்சி ஆயிரம் ரூபாய் போதும்
    இந்த பாவியின் உலகிலிருந்து தப்பித்துவிடுவாய்…
    என்னை பார்… இந்த பாவிகள் கொலைகளை செய்துவிட்டு
    புனிதம் என்கிறார்கள், என் பெயரை சொல்கிறார்கள்…
    அந்த புத்தகத்தில் எவ்வளவோ நல்லது சொல்லி இருக்கிறேன்…
    அதில் ஒன்றை கூட கேட்டதில்லை…
    அழிவை மட்டும் பல் இழித்து கொண்டு கடைபிடிக்கிறார்களாம்…
    பேசாமல் நானும் புனித போரில் கலந்து கொண்டு
    பாவிகளின் உயிர் பருக போகிறேன்…
    நாளிதழில் இருந்து தலை நிமிர்த்திய நபிகள் இது

    இப்பொழுதெல்லாம் பாற்கடலில் உறக்கமே இல்லை
    கண்ணயர்ந்தால் ஆதிசேசன் அப்பரைசல் கடுப்பில்
    கடலெல்லை கடந்திடுவானோ! பயம்…
    கடலில் எல்லை எது?
    கடந்தால் மீனவர்களை மட்டும்தானா இல்லை
    மீனாட்சி அண்ணனே ஆனாலும் சுடுவீர்களா?
    இதை எல்லாம் சகோதர தேசத்திடம்
    கேட்டு தெரிந்தால் தான் பயமின்றி உறங்க முடியும் இனி…
    சிவந்த கண்களை தேய்த்துகொண்டே அழுது முடித்தார்…

    பேசி முடித்த மூன்று பேரையும்
    நின்று ஒரு முறை பார்த்தான் புத்தன்…
    மீண்டும் குறுக்கும் நெடுக்கும் நடக்க துவங்கினான்
    அவர்கள் எல்லோர் இதயத்துள்ளும் டமால் என்ற ஓசை
    புத்தன் சிரித்துவிட்டன்** போலும்…

    * – ஹம்சதூளிகா மஞ்சம் - அன்னப்பறவையின் இறகு கொண்டு நெய்த புத்தனின் மஞ்சம் .
    **- புத்தன் சிரித்தான். இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையின் பெயர் என்று படித்ததாய் நியாபகம். தவறெனில் மன்னிக்கவும்.

முடிவிலியின் தாகம்

கொன்று கொய்து கொண்டையில்
கொண்டிடும் கைக்கு மத்தியில்
கண்டு ரசித்திடும் இதயம்
இருந்தும் அந்த ரோஜா
கிள்ளி கொய்யும் கைக்கே சொந்தமாம்
.
o.o.o
.
கண்ணாடி தன் முன்னின்றவன்
பிம்பம் கொள்கிறது…
பிம்பத்தின் சொந்தகாரனுக்கு பிடிக்காமல்
கல்லெடுத்து அடிக்கிறான்…உடைந்த கண்ணாடியோ
இரண்டு பிம்பம் கொண்டு நகைக்கிறது
சில்லு சில்லாய் நொறுங்கியும்
கண்ணாடி தான் களவாடிய பிம்பம் தரவே இல்லை
தோற்று போய் நகருகிறான்… கண்ணாடியும் தோற்று போகிறது
சில சமயம் இருவரின் தோல்வி தான்
பெரும் தீர்வாகும் … தீர்ப்பாகும்
.
o.o.o
.
மீண்டிட நினைத்து
திறந்த சிறைக்கதவோ
மீண்டும் சிறை கூட்டி செல்லுகிற வாசல்…
தெரிந்தா திறந்தேன்… தெரிந்தே நுழைந்தேன்…
மீண்டிட நினைத்தேன்…

Saturday, April 6, 2013

க்ஆ-த்அ-ல் – 3

 
யாரென்கிறாய்???…
நீ தான் என சொல்லிவிட முயல்கிறேன்
நெடிலுக்கு  மாத்திரை இரண்டாம்…
“நீ” என்பதின் மாத்திரை கோடியானது தெரியுமா?
 
o.o.o
 
நீ முறைப்பதை மொழிபெயர்த்தால் கூட
காதல் கிடைக்கிறது…
ஒரு சொல் பன்மொழி போலும்
 
o.o.o
 
காதலின்  இலக்கணத்தில் மட்டும்
“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பதின்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
நான் உன்னை காதலிக்கிறேன் என்பதே…
 
o.o.o
 
இதழும்இதழும் இதழோடு இதழானது…உம்மை தொகை
 
கைப்பேசி முத்தம் பெயரெச்சம்
கன்னத்தில் முத்தம் வினையெச்சம்
இதழ் முத்தம் … இதற்கு மேலும் பேச என்ன மிச்சம்
 
o.o.o
 
நாம் என்பது இரட்டை கிளவி
பிரிந்திருந்தால் ஏது பொருள்?
 

க்ஆ-த்அ-ல் – 1 | 2

 

தங்க கூண்டு

 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
காபியோடு எழுப்பிவிட அலாரம் வேண்டும்
அப்பா ATM லிருந்து கறந்து தர கார்டு வேண்டும்
போதையில் வந்தால் காப்பாற்றிவிடும் கேடயம் வேண்டும்
தனித்தனியே வாங்க எவனிடம் துட்டு உண்டு
அம்மா ஒன்றை படைத்துவிடு
 
“நான் முதலில் உச்சரித்த கவிதை நீ
மண்ணில் வாழும் தெய்வம் நீ”
என்ற குறுஞ்செய்தி கவிதையில் சிக்கனமாய் முடியும் செலவு …
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
அம்மியும் ஆட்டுரலும் மிக்சி ஆச்சாம்
எவனோ சொன்னான்…
யாருக்கு வேண்டும் கட்டிவந்தவள்
கெட்டிக்காரி. எதிர்த்து பேசாமல் எல்லாம் செய்வாள்
அன்பே என்ற ஒற்றை வார்த்தை போதும்
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
நாங்கள் காதலிக்கலாம்
அது கலாச்சார வளர்ச்சி
அவள் எப்படி நண்பனிடம் பேசலாம்
அது எவ்வளவு பெரிய நாகரிக சீர்கேடு
நாங்கள் பொறுப்பான அண்ணன் தம்பிகள் தெரியுமா?
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
மணி கட்ட எலியிடம் கழுத்து நீட்டும்
பூனைகள் நாங்கள் …
எலிக்கு தெரியுமா பூனையின் பல் கூர்மை
அவளும் அப்படித்தான்
வெளி பிரச்சனைகளுக்கு பயப்படவே
அவளுக்கு நேரம் சரியாய் இருக்கிறது…
கூடவே வளரும் வாழும் பிரச்னையை
புரிந்து கொள்ள நேரம் போதவில்லை அவளுக்கு
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
மயிலே குயிலே என்றழைத்து
தங்க கூண்டில் சிறைபிடிக்கும்
சாதாரண வேடுவன் நான்(ங்கள்)
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
எல்லோரும் இப்படி இல்லை
ஆனால் எல்லோருக்குள்ளும்
இப்படி ஒருவன் இருக்கிறான்
அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்

க்ஆ-த்அ-ல் – 2

 
நீ நிலா
நான் நிலா ரசிக்கும் பிள்ளை
நான் உன்னை தான் காதலிக்கிறேன்
நீ என்னை காதலிக்க
வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை

o.o.o

யாரென்று தினம் கேட்கிறாயே
நீ தானென்று உனக்கு தெரியாதா?
தாய் தந்தை யாரென்றெல்லாம்
கேட்டா தெரிந்து கொண்டோம்…
என் காதல் உனக்காக வாழும்
இன்னொரு தாய் இன்னொரு தந்தை

o.o.o

நான் சொன்னால் கூட
ஆம், இல்லை இரண்டு பதில்கள்
நீ சொல்லலாம்
 
சொல்லாத வரை
தினம் நீ எதற்கோ சொல்லும்
“ஆம்” இதற்காகவென கேட்கிறதே
 
அறிவியலே!
இதயத்தில் காதுகள் இருக்கிறது

o.o.o

மூன்று ஆங்கில வார்த்தை சொல்லி
கையோடு கைகோர்த்து
பங்குனி வெயில் ரசித்து
கைப்பேசியை எச்சிலால் இம்சித்து
இப்படி இந்த பாழாய் போன
உலகத்தை போலத்தான் காதலித்தாக வேண்டுமா?

தூரத்தில் உனை பார்த்து
உள்ளுக்குள்ளே தினம் சிரித்து
நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு தாமதாமாய்
நீ அனுப்பும் அந்த பதிலை நிதம் ரசித்து 
உன் புகைப்படத்தோடு தினம் பேசி 
சிறு பிள்ளை புத்தக மயிலிறகாய் காதலை வைத்து
என்னையே தினமும் அரிசியாக்கி
வளராது என தெரிந்தும்
வளரும் வளரும் என்று காத்து கிடக்கும்
என் நிலை மாறுமா?
என் அன்பு, மயிலே உனக்கு புரியுமா…
மாறினாலும் புரியாவிடிலும் அரிசியாக நான் என்றும்

o.o.o

சொன்னால் காதல் மிட்டாய் போல
அன்றோ இல்லை என்றோ
ஒரு நாள் கசக்கலாம்…
சொல்லாத காதல் கரும்பினை போல
காய்ந்தாலும் செத்து வீழ்ந்தாலும்  இனிக்கும்

என் காதல் கரும்பு 

க்ஆ-த்அ-ல் – 1

Thursday, March 14, 2013

ரத்த மொழி

தினமும் கடக்கும் அந்த
பிரதான சாலையின் தரையில்
யாரோ ஒரு உடல்  தன் ரத்தம் கொண்டு
எதையோ எழுதி போவது உண்டு…

அப்படி என்னதான் 
எழுதி போகிறார்கள் அவர்கள்
 
தாங்கள் தலைகவசத்தை
தலையில் மாட்டாமல்
கையில் கொண்டுவந்த அவசியத்தையா?
 
போன வாரம் நிச்சயமாகி
வண்டி ஓட்டுகையில் கூட
கைப்பேசியில் குடும்பம் நடத்திய
வருங்கால மனைவிக்கு கொடுக்க மறந்த முத்தமா?
 
விரட்டி வந்த பெண்ணிடம்
சொல்ல மறந்த காதலா?
 
என்ன தவறு நான் செய்தேன்?
நீ செய்த நொடி பிழையில்
என் வாழ்க்கை முடிவதேனோ என்று
கேட்க முடியாமல் போன பரிதாப கேள்வியோ?
 
அவன் பிள்ளைக்காய் சொத்தும் இல்லை
சொந்தமும் இல்லை… அனாதை ஆக்கிவிட்ட
வருத்தத்தின் கண்ணீரோ?
 
பார்த்து வா என்ற அம்மாவிடம் மன்னிப்பா?
கோபித்து கொண்ட மனைவியை சாந்தபடுத்த
கொண்டு வந்த காதல் முத்தமோ?
அப்பா நான் டாக்டர் ஆகணும் என்ற மகளின் கனவா?
பதவி உயர்வை பிடுங்கிகொண்டவர்
மேலதிகாரி மேலான கோபமா?
 
அப்படி என்னதான் 
எழுதி போகிறார்கள் அவர்கள்
 
அதை இன்னும் எவருக்கும்
மொழி பெயர்க்க தெரியவில்லை…
தெரிந்திருந்தால் தினம் ஒருவன் எழுதிப்போவானா
தினமும் கடக்கும் அந்த
பிரதான சாலையின் தரையில்

பின்குறிப்பு –
  • காலனுக்கு missed call கொடுப்பதுக்கு கூட உயிரை கட்டணமாய் செலுத்தனும். எதற்கு வீண் செலவு?
     
    *~*~*~*~*~*~*~*~
     
    பழைய சோறு – தலை கவனம் | நில் கவனி காதலி
     

Saturday, March 9, 2013

Valentine இருதயம் – II

Image source Samantha Ruth Prabhu Official FB page
எவன் சொன்னான்
பூமிக்கு ஒரே நிலா என்று?
நீ இருப்பதை தெரிந்துகொள்ளாத
நாசாக்காரன் துரதிர்ஷ்டவசமான முட்டாள்
o.o.o
காதல்
உனக்கு தெரியாமல்
உன் வீட்டில் நடமாடும் பூனை…
களவாடும் உருட்டி விளையாடும் காயப்படுத்தும்.
o.o.o
காதல்
ஒரு காக்கா எச்சம்…
தங்கத்தாலனது…
உன் தலையில் விழுவதை
தடுக்கவும் முடியாது…
உன் தலையில்
எப்போது விழ வேண்டுமென்பதை
முடிவெடுக்கவும் முடியாது….
விழும் விழாமலும் போகும்…
விழுந்தால் பத்திரப்படுத்திக்கொள்…
விழவில்லையென தேடி திரியாதே…
அது காக்கா எச்சம்…
o.o.o
ஒரு குழந்தையிடம்
ஏன் உன் அம்மாவை பிடிக்கும்?
என்று கேட்பது போலத்தான்…
ஏன் காதலிக்கிறாய்?
இதயம் உடைத்தவளை(னை)
இன்னும் என் இதயத்தில் சுமக்கிறாய்…
என்று நச்சரிக்கும் கேள்விகள்…
எந்த ஒரு வார்த்தைகளும்
அந்த பதிலை விவரித்திட முடியாது…
அந்த குழந்தை “புடிக்கும்” என்றுதான் சொல்லும் அவ்வளவு தான்…
o.o.o
உடைபடாமலே கிடந்தால்
அழுகி பாழாகும்…
தேங்காயும் இருதயமும்…
காதல் ஒன்றும் உங்களை
கொன்றுவிடாது…
நீங்கள் அதை கொன்றுவிடாதீர்…
o.o.o
காதலும் கடவுளும் ஒன்று
அவர்கள் கொலை செய்வதில்லை…
ஆனால் அவர்களின் பெயரில் கொலைகள் நடக்கிறது…


Valentine இருதயம் – I

காதல்…
உன் காலை ஓடி வந்து
கட்டிக்கொள்ளும் சிறு பிள்ளை…
தூக்கி கொஞ்சுவதும்
உதறிப்போவதும் உன் விருப்பம்
உன்னை பார்த்தழும் பிள்ளைக்கும்கூட
நீ முத்தமுமிடலாம்…
முத்தம் கிடைக்கும்

@_@ + #_# + @_@

ஒன்றையும் ஒன்றையும் கூட்டி
ஒன்று வந்தால்…
கணிதத்தில் அது பிழை…
வாழ்க்கையில் அது தான் சரி…

@_@ + #_# + @_@

இருபது வருடம்
அடுத்தவர் பொருளை
பத்திரமாக வைத்திருக்கும் நாம்…
நமது கிடைத்ததும்
எளிதாய் உடைத்துவிடுகிறோம் – இடம் மாறும் இருதயம்

@_@ + #_# + @_@

எதோ ஒரு குப்பைத்தொட்டியிலோ
எடைக்கு போன பேப்பர் கட்டிலோ
எதோ ஒரு மெயிலின் டிராப்டிலோ
டைரியின் பக்கத்திலோ

இரவு தலையணை நனைக்கும் கண்ணீரிலோ
SMS எழுதிவிட்டு அழிக்கப்பட்ட
எதோ ஒரு வார்த்தையிலோ
முகப்புத்தகத்தில்/smsல் தயங்கி தயங்கி
சொல்லும் ஒரு Hi-யிலோ

இந்த உலகத்தின்
இன்னும் சொல்லப்படாத
ஓர் காதல் இருக்கிறது…
அது உங்களதாககூட இருக்கலாம்…
அதை கொல்வதும் அதில் வாழ்வதும்
உங்கள் கையில்…

@_@ + #_# + @_@

என் கவிதைகளும்
என்னைப் போலத்தானடி
நீ தான் என் காதலி என்பதை
எவ்வளவு சுற்றி வளைத்து
சொல்ல முடியுமோ அவ்வளவு சுற்றி
வளைக்கிறது …
அந்த சுருளுக்குள்ளே
சிக்கிக் கொண்டேன் சுகமாக

Friday, March 8, 2013

தேவதையின் சிறகு சுமை

கவிதை v 2012



ஜனனம், பாசம், சகோதரத்துவம்,
காதல், துணை, சந்ததி
சுகக்கின்ற காயம், இனிக்கின்ற கண்ணீர்,
சுவர்க்கமாய் மடி, சுகமாய் தோள்

எத்தனை எத்தனை வரங்கள்
இந்த தேவதை எனக்கு கொடுத்தது…

அவளுக்கு  நம் சமுகம் கொடுத்ததென்னவோ
கள்ளிபால், அரைகுறை கல்வி,
வரதட்சணை சுமை, அடுப்படி சிறை,
தாலி என்னும் முள் வேலி,
சீரியல் கண்ணீர், காமம்,  பயம் 
கற்பென்னும் சிலுவை,
காபி கேட்டு அதட்டும் கணவன்,
வேண்டுமென்றால் போட்டு குடி
என்று சொல்ல முடியாத அளவு சுதந்திரம்

என்கின்ற சாபங்கள் மட்டும் தான்…

இந்த தேவதைகளுக்கு மட்டும்தான்
சிறகுகள் கூட சிலுவை மரங்களால் செய்யப்பட்டது

அனுகுண்டிடம் கூட தப்பித்துவிடுகிற
கரப்பான் இவளின் துடைப்பானில் நைந்து போகும்
எனவே இன்னுமொருமுறை
இவளை இம்சிக்க நினைத்தால்
நெற்றிக்கண் திறந்து எரிக்கும்…
சிவனின் நெற்றிக்கண் பற்றி எனக்கு தெரியாது
இது சக்தியின் நெற்றிக்கண் நிச்சயம் எரிக்கும் பாவிகளே!

அம்மா, கடவுள் அப்படி இப்படின்னு எவ்வளவோ எழுதலாம் எதுவும் ஈடாகது… அந்த தண்டனை இந்த தண்டனை ன்னு எவ்வளவோ பேசலாம் சரியான கற்பிதம் தான் பெண்களுக்கான அநீதியை/அடக்கு முறையை மாற்றும். அது விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்

என்ன ஒரு முறை பெற்றெடுத்த ஒரு பெண்ணிற்கும், என்னை ஒவ்வொருமுறையும் புதிதாய் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும், காதலை எனக்கு காட்டிய அந்த பெண்ணிற்கும், என் காதலை நிராகரித்த அந்த பெண்ணிற்கும், நான் சொல்லாமலே காதலிக்கும் அந்த பெண்ணிற்கும், என் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றும் எல்லா பெண்ணிற்கும் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்.
 


 

Monday, March 4, 2013

பிள்ளை கறி தின்னும் பூமி

அது பகிர்ந்துண்ண
விரும்பாத காக்கா கூட்டம்

கண் அசந்தால்
பிணமென்று சொல்லியே திண்று தீர்க்கும்
ஆணையும் பெண்ணையும்...

அப்படி என்ன பசியோ?
பிள்ளை கறி தின்றது காக்கா ஒன்று
இந்திய பெருங்கடலின்
மயான தனிமையில்

பிள்ளை கறி தின்றுவிட்டு
திருப்பதி கோபுரத்தில் வந்து
அழகின் அழுக்கை துடைத்து கொள்கிறது...

வெங்கடாசலபதியோ சிரித்துகொண்டே
பார்த்திருந்து கல்லென்று நிருப்பித்துவிட்டான்...
அவன் என்ன செய்வான் பாவம்
அவனுக்கு உண்டியல் துட்டை
கணக்கு பார்க்கவே நேரம் சரியாய் இருக்கிறது

பெரிய புராணத்தில்
பிள்ளைக்கறி சிவன் கேட்கையில்
திருவிளையாடலென்ற கூட்டம்
கோகுலத்தில்
கண்ணன் கோபியரின் தாவணி திருடுகையில்
திருவிளையாடலென்ற கூட்டம்
கலியுகத்தில் இரண்டையும்
ஒரு பேய் செய்கையில் திருவிளையாடலென்று
ரசிக்குது போலும் ...
வரும் நாளில் கோவில்கட்டி
கும்பிட்டாலும் கேட்பதற்கில்லை

யுத்த நீதி வகுத்த
பீஷ்மனே கௌரவருக்காய்
போர்புரிந்த பூமி இது...
இங்கே சகுனியை போய் தர்மனுக்காய்
வாதாட சொல்வதில் என்ன கிடைக்கும்?

ஒரு பிள்ளை கறி

உணவானது இன்று தெரிந்தது
தெரியாமல் எத்தனையோ?
அவர்களுக்காய் கண்ணீர் சிந்த கூட
புகைப்பட சாட்சி வேண்டுது இந்த உலகிற்கு

நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டாய்
என்று புலம்பும் இந்த உலகம்
நீ எத்தனை முறை பிறந்து வந்து இறந்தாலும்
உன் உறவுகள் சிந்திய ரத்தத்திற்கு பதில் கிடைக்காது
என்று சொல்லாமல் சொல்கிறது...
ஆம் நீ புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டாய்

நாலு கண்ணீர் நாலைந்து மெழுகுவர்த்தி
நாற்பது வரி கவிதை
முகபுத்தகத்தில் வீரமகன் என்று
புறநானூறை மேற்கோளிட்டு நானூறு லைக்...
நல்லவேளை இந்த பாவப்பட்ட பூமியிலிருந்து
அவனுக்கு வேகமாய் ஒரு விடுதலை
நிச்சயமாய் அவன் ஆத்மா சாந்தியடையும் ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்