Wednesday, August 28, 2013

கண்ணன் வருவான்


அந்த வீட்டு ராதைக்கு
கண்ணன் வேஷம்.
கிருஷ்ணஜெயந்தி.

o

கண்ணன் வருவான்
என்பதை நம்பாதவர்கள் தான்
 அரிசி மாவில் கால்கள் வரைகிறார்கள்.

o

சேட்டை செய்யாமல்
மீண்டும் வெளியே போய்
ஒழுங்காய் நடந்து வா என்றார்கள் குழந்தையை.
கால் தடம் அழகாய் வரவில்லையாம்.

o

முறுக்கை ஏக்கத்துடன் பார்த்தபடி,
கிருஷ்ணர் வேசத்தில் குழந்தை.
சாமி கும்பிட்ட பிறகு தான்
என்று அம்மா சொல்லி விட்டார்களாம்.
முறுக்கை ஏக்கத்துடன் பார்த்தபடி
கிருஷ்ணர் குழந்தை வேசத்தில்.

Monday, August 26, 2013

வலிகளின் ருசி


துளைபட்ட மூங்கில்
அழுதுகொண்டிருந்தது
இசையென்று ரசிக்கிறார்கள் ...

சூட்டில் மெழுகுக் கூடு
உருகியது. சேர்த்து வைத்த,
உழைப்பு எல்லாம் ஒழுகியது.
திருடிய கை முழங்கை வரை இனிக்கிறதென்கிறார்கள்

மனமுடித்த மகளின் கணவனுக்கு
விருந்தென்று சொல்லி
கெடையில் ஒரு ஆட்டின் தாலி அறுக்கிறார்கள்

சுரந்த மடியை மகனுக்கு தராமல்
போன வாரம் அவன் செத்துப் போனான்...
வைக்கோல் திணித்த அவனை நீட்டுகிறார்கள்...
மகனுக்காய் மடிசுறக்கிறாள் அன்னை இன்னமும் ... விழியும் கூட...

அடுத்தவன் வலியில் தான்
பாதிபேர் வாழ்கிறான்...
அடுத்தவனுக்கு வலிக்க வைத்து வாழ்கிறான்
அடுத்தவன் வலியில் ருசி கண்டுவிட்டவன்... - காதலிக்கப்படாதவன்

Thursday, August 22, 2013

கனவின் கனம்


மறக்கவில்லை இன்னும்,
நியாபகத்தில் இருக்கிறது
அந்த இரவு…

முகம்தெரியாத இருட்டாய் இருந்தாலும்
அவளை அடையாளம் கண்டுகொள்வதொன்றும்
அவ்வளவு கடினமாய் இல்லை அன்று.
அவளே தான் அது…
ஒரு குழந்தையை என் கைகளில் திணித்தாள்.

இன்னும் காதுக்குள் எதிரொலிக்கிறது
அந்த  குழந்தையின் அழுகுரல்
இன்னும் என் கையில் பிசுபிசுக்கிறது
அந்த குழந்தையின் மென்மை ,
அந்த  குழந்தையின் பிஞ்சு கைகள்,
பிளவாத பூ உதடு
இன்று  நினைத்தால் கூட
மயிர்கூச்சிடுகிறது உயிர் கூசுகிறது…

இன்னும் நியாபகத்தில் இருக்கிறது
என் அவள் ஜாடையில் இருந்த அந்த குழந்தை
இன்னும் நியாபகத்தில் இருக்கிறது.

என்னவாயிற்று. தெரியவில்லை.
ஒன்றும் பேசாமல் கத்திக்கொண்டு
குழந்தையின் குரல்வளையை அறுக்கத்தொடங்கினால்…
வெண்ணையில் இறங்கும் ஊசி போல
அமைதியாக அறுபட்டது…
தோல்,நரம்பு என மெல்ல நிதானமாய்…
குழந்தையும் அழாமல் வாங்கிக்கொண்டது.

ஆனால்  எனக்கு வலித்தது.
அந்த வலி,
சுமக்கும் கரு களவுபோகையில்
தாய் கொள்ளும் வலியது
விழித்த கருவிழியில் அமிலத்துளி
விழுந்த வலியது
உயிரோடு இருதயம் வெளிஎடுத்து
சுத்தியால் அடிக்கும் வலியது
வார்த்தைக்குள் அடங்காத வலியது
உங்களால் புரிந்துகொள்ள முடியாத வலியது

எதுவுமே நினைவில் இல்லை.
ரத்தம் நனைத்து விழித்துக்கொண்டேன்.
என்னவாயிற்று அந்த குழந்தைக்கு?
எதுவுமே நினைவில் இல்லை
அந்த வலியை தவிர
எதுவுமே நினைவில் இல்லை
நினைத்தாலே பிடரி நரம்புக்குள்
மெல்ல பரவுது அந்த வலி…

எழுந்து பார்த்தேன்
அந்த குழந்தை என் அருகே
அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.
வேப்பம் பூ தேனைப் போல
அந்த பிஞ்சுதட்டில் சிறுப் புன்னகை…
இப்போது வலிப்பதில்லை.
எப்பேர்பட்ட வலியும்
அந்த புன்னகையில் தீர்ந்துவிடுகிறது

Friday, August 16, 2013

இதழதிகாரம்


காதல் என்றால் என்னவென்றால்
இதயங்கள் கொடுப்பது என்றேன்…

முத்தம் என்றால்?
கொடுத்த இதயம் பத்திரமா
என்று வந்து பார்த்து செல்வது
என்று சொல்லுமளவுக்கெல்லாம்
எனக்கு பொறுமை இல்லை

o

கொஞ்சம் விட்டால் போதும்
நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
இதற்குத்தான்
என் முத்தங்களை நிறுத்துவதே இல்லை…

o

பெண் இதழ்கள், ஆண் இதழை
சிறைகொள்கையில்
என்றாவது பெண்ணாதிக்கம் என்று
நாங்கள் கத்துகிறோமா.
ஆண்கள் எப்போதும் சமத்து.

o

காதல் பாடமென்றால்,
மொத்தமும் படிக்க
ஒரே புத்தகம் அவள் இதழ்.

o

உயிர்வாழ்வதற்கு
ஆக்ஸிஜெனா தேவை?
முத்தங்கள் போதும்.

o

முற்றுப்புள்ளிகள்
தேவைப்படாத கவிதை.
யாருக்குத்தான் அது முடிவது பிடிக்கும்.

o

என்னை சொல்லிவிட்டு
நீ பேசிகொண்டே இரு.
இதற்கு தான் கவிஞனை
காதலிக்க கூடாது.
இது அவளின் கோபம்.

o

Thursday, August 15, 2013

அடிமையின் சுதந்திரம்


அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

விதயெல்லாம் மலடா போச்சு
எங்க செடிக்கு லைசன்சு எவன் பேரிலோ ஆச்சு
குலதொழிலையும் கை மறந்து போச்சு
விடியையில வேல இருக்குமா? துறமாரு இருக்காக

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

டாலர் சரிஞ்சா நெஞ்ச புடிச்சோம்
பணத்துக்காக நம்ம நாமே வித்தோம்…
அப்பா ரெண்டு ரூபாய்க்கு வித்த நெல்ல
மகன் வால்மார்ட்டில் நாப்பது ரூபா அரிசியா வாங்குறான்…
நாப்பது ரூபா ஆனா என்ன நாப்பதாயிரம் சம்பள இருக்கையில

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

ரெண்டு மாநிலம் தண்ணி கேட்டு அடிச்சுகிறான்
ஒரே மாநிலம் ரெண்டா பிரிஞ்சுகிறான்
சாதி சாமின்னு சனங்களத்தான் கொல்லுறான்
பத்திக்கிட்டு எரியற காட்டில் குளிர் வந்து காயுறான்…
என் வீட்டுக்கு எதுவுமில்ல. எனக்கெதுக்கு வீண் கவல

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

தொட்டவன் வாழ, சீதைகள் தீக்குளிக்காமல் எறிகிறார்கள்
காதல் உறங்கிய தண்டவாளத்தில் சாதி ரயிலோடுது
உழச்சவனுக்கு உணவு இல்ல, படிச்சவனுக்கு வேல இல்ல
எதிர்கட்சிக்கு பங்கு தரத ஆளும்கட்சி பிடிபதில்ல
அடுத்த தேர்தலில் தலையெழுத்து மாறும்

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

காந்தி காமராஜர் பேரை சொல்லி தேர்தலில் ஜெய்க்குது…
காந்தி பட நோட்டுக்காக மட்டும் ஆட்சி நடக்குது…
வெறும் மிட்டாயால 67 வருஷம் ஏமாற்றிப் போச்சு
பெத்தெடுக்க தாய் இன்னும் லஞ்சம் கேட்கல…
மத்தபடி இன்னும் நீயும் நானும் அடிமைகள் தான்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்