Monday, December 22, 2014

சிறகொடிந்த பறக்கும் முத்தம்


தொடர்ப்பெல்லைக்கு அப்பால்
உயிரறுந்து கிடைக்கும் கைப்பேசிக்குள்
சிரிப்பிழந்து கிடைக்கிறது மஞ்சள்முகங்கள்.

சாத்திய சன்னல் கண்ணாடியில்
மோதி அடிக்கும் பட்டாம்பூச்சியாய்
நெஞ்சுக்குழிக்குள் வார்த்தை.

விண்மீன் புன்னகை சிந்திய மின்னல்,
குண்டூசி நுனியால் பாடும்  தாலாட்டு.
கிலோகணக்கில் கணக்கும் கிலோமீட்டர் தூரம்.

தூதனுப்பிய நிலா எங்கே?
கொடுத்தனுப்பிய ரோஜா பிடித்திருக்குமா?

சாப்பிட்டிருப்பாளா? பதில்கள் தெரியும் தான்.
இருந்தாலும் கேட்க துடிக்கிறேன்.

வெறும்கையில் முழங்கையிட்டு
நண்டும் நரியும் வருவதாய் சொல்லி
சின்னபிள்ளை ஊட்டும் பருப்பு சாதமாய்
பதில்வராத வானத்தில் அவள் முகம் பார்த்துக்கிடக்கையில்,
சிறகொடிந்த பறக்கும் முத்தமொன்று வந்து விழுகிறது மடியில்.

விழுந்த முத்தத்தை மீண்டும் கூட்டில் வைக்கவா?
இல்லை நானே வைத்து வளர்க்கவா? 

- காதலிக்கப்படாதவன் 

Tuesday, October 28, 2014

பசி தீரா கனவு


கலி முற்றும் சாமத்தில்,
புயலேரிய கடலாகும் கட்டில்.
உச்சிமண்டையில் நடமாடும் களிறிரண்டின்
காலிலிருந்து கழன்று உருளும்
சலங்கை மணிக்குள் அனு பிளவும்.
பிடரி பூத்த வியர்வை பற்றி எரிய
நிலா வந்து நெய் வார்க்கும்.
பயந்து, பூமியிலிருந்து இறங்கி
வின்நதி மீது ஓட எத்தெனிக்கையில்
மீன்களின் முள் இடறி உயிர்
முடிவறியா குழிக்குள்ளே விழப்போகையில்…
அவள் மடியில் விழித்துக்கொள்கிறேன் நான்.

திருவிழாவில் தொலைந்த குழந்தையை
தேடி வந்து தூக்கி கொஞ்சும் தாயென
தலை வருடி, உச்சி முகர்கிறாள்.
மீண்டும் ஒரு கனவு. வேறொரு கனவு. தொலைகிறேன்.

- காதலிக்கப்படாதவன் 

Monday, October 20, 2014

அப்பிகை மழை


அவன் காதல்,

நின்று நிதானமாய்,
யோசித்து, ஒத்திகை பார்த்து,
அழகாய், கவிதையாய் எல்லாம்
பெய்யத் தெரியாத
அப்பிகை மழை.

பெய்யென பெய்கையில்,
குடை விரித்துக்கொ(ள்ளா)ல்லாதே…
தாங்காது.

o

அவன் காதல்,
கொட்டும் அப்பிகை மழை.

தேநீர் குவளையின் கதகதப்பில்
ரசிக்கக் கூடியதில்லை,

குடைபிடித்து, ஒதுங்கி
ஓடத் தேவையில்லை,

இறங்கி நட, மெல்ல நனை,
மழையிடம் உன்னைக் கொடு,
மழையை கொஞ்சம் கையில் ஏந்து.
உனக்கும் பிடிக்கும்.

o

மழையின் கல்லறையில் பூக்கும்
வானவில் ரசிக்கும் தேவதை அவள்.
அவளுக்கான வானவில் செய்ய
மீண்டும் மீண்டும் பிறக்கும் மழை அவன்.

தேவதையே வானவில் வேண்டுமா?

- காதலிக்கப்படாதவன்

Saturday, September 6, 2014

இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்


நடைபழகும் மழை பிள்ளை,
யாரோ மறந்த காப்பிக் குவளை,
நீ தந்த பாதி மிட்டாய்,
எழுந்துக்கொள்ளப் பிடிக்காமல் நீயும் நானும்.
சிலரை மழையால் அடித்துக்கொண்டு போகமுடிவதில்லை.

இடது தோள் நனைய நீ,
வலது தோள் நனைந்து நான்,
தீராத மழை, தீராத நம் பேச்சு,
நகராத கடிகாரம், ஒற்றைக் குடை.
சிலருக்கு மழையில் குடை தேவைப்படுவதில்லை.

இன்னும் வரவில்லையென நீயும்,
வந்துவிடக்கூடாதென நானும்
வேண்டியும் வந்துவிடுகிற உன் பேருந்து.
குடையெதுமின்றி நனையாமல் ஓடி ஏறிக்கொண்ட நீ,
குடை இருந்தும் நனைந்துகொண்டு வழியனுப்பும் நான்.
சிலர் நனைவதை குடைகளால் தடுக்க முடிவதில்லை.

நீ கிளம்பிய இருபத்தியோன்பதாவது நொடியின் பாதியில்
இரண்டு ஜென்ம பிரிவை சுமக்கிறேன்.
சிலருக்கு மழை எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை

சில மேகங்கள் மட்டும்
நிற்காமல் தூறும்.
நீ அந்த வகை மேகம்.
எனக்கு இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்.

Friday, August 22, 2014

அன்புள்ள கருவாச்சிக்கு

அன்புள்ள கருவாச்சிக்கு,

எனக்குள் திருட்டுத்தனமாய் நுழைந்த நீ நலம்.
என்னிடம் திருடிக்கொண்டு போன நான் நலமா?

காதலை, சொல்லிவிடுகிற வார்த்தைகளை
இன்னும் பிரசவிக்காத மொழி பேசும் ஊரில்,
அடை மழையில் சிக்கிய உப்பு வியாபாரியாய் இருந்தேன்  நான்.
காதலை சொல்ல பயப்படுகிறவன் கோழை இல்லை.
காதலிக்க பயபடுபவன் தான் கோழை.

நான் கோழையாய் சாவதை விட,
காதலிக்கப்படாதவனாய் செத்துப் போகிறேன்.
இந்தா படி. பிடித்திருந்தால்,
பதிலை கடிதமாய் தான் தர வேண்டுமென்றில்லை.
ஒரு ஸ்மைலி போதும்.
பிடிக்காவிட்டால்?!!! பிடிக்கும்.

எதிலிருந்து ஆரம்பிக்க?

உனக்கு குட் மார்னிங் அனுப்பி பேசும் ஆர்வத்தில்
2 மணிக்கே விடிந்து விடுகிற என் காலை,
குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் தாண்டி
கைபேசி வெளிச்சத்தில் அழகாய் நீளும் இரவு,
சாதாரண ஒரு நிமிடத்தைவிட பெருசாகும்
நீ பேசாத ஒவ்வொரு நிமிடமும்…
எதை பற்றி சொல்ல?

இன்னும் எத்தனை நாள்
வெறும் ஸ்மைலிகளில் உன் முகம் நான் பார்க்க?

எல்லா அலங்காரமும் களைந்து
புன்சிரிப்பு மட்டும் கொண்டு உறங்கும்
உன்னை பார்த்தே விடியட்டும் என் நாட்கள்.
இரவு உறங்கும் உன்னை முத்தமிடுகையில்
குழந்தையாய் சிணுங்க
இன்னுமொரு முத்தத்தோடு நீளட்டும் நம் இரவு.
இவ்வளவு தான்.

உன் சமையலறை சுதந்திரத்தில்
போர் எடுக்கும் என் குறும்புத்தனத்தை…
அடி பிடித்த பாலும், சமையலறை சுவரோவியமும்
கதை பேசட்டும்.
கவிதைகளின் வரிகளிலே
என் கன்னங்களை பதம் பார்த்த
உன் நகத்தளும்புகளின் சாயல் தெரியட்டும்
இவ்வளவு தான்.

இருட்டறை, அழுக்கு போர்வை,
என் மார்பில் நீ, உனக்கு(நமக்கு) பிடித்த இசைவரிசை,
உன்னிடமிருந்து பிடுங்கிகொண்ட ஒரு பாதி ஹெட் போன்,
இவ்வளவு தான்.

தாலி, மெட்டி, முத்தம், கலை
முந்தானை முடிச்சு, தலையணை மந்திரம்
உன் சீப்பில் இருக்கும் என் முடி
என் சட்டையில் படியும் உன் சேலை சாயம்,
கோபித்துகொண்ட இரவுகளின் பட்டினி..
வீம்பை பசி வெல்லும் இரவுகளில் ஒரே தட்டில் நிலா சோறு…
இந்த கடிதத்தை படித்து சிரிக்கும் நம் பேரன்
இதில் எதிலோ தான் நீயும் நானும் நாமாகி இருப்போம்.
இவ்வளவு தான்.

இந்த காதலை இப்படி பக்கம் பக்கமாகவும் சொல்லலாம்.
உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம்.
சொல்ல வந்த வார்த்தை இன்றி,
உன் முட்டை கண்களுக்குள் நான் சொல்லாமலே தொலைந்தும் போகலாம்.
இவ்வளவு தான்.

இப்படிக்கு

உன் ராம் கருவாயன்


Thursday, August 7, 2014

நத்தை கூட்டுக்குள் தேங்கிய மழை


கொட்டும் மழையில் போகும் பேருந்தின்
சரியாய் பூட்டாத சன்னல் கொண்ட இருக்கை மட்டும்
அவ்வளவு கூட்டத்திலும்
அடுத்த நிறுத்தத்தில் ஏறப்போகிறவனுக்கென காலியாய் கிடக்கிறது,
விரல் நிறைய காதல் வைத்து
உன் பெயர் பக்கத்தில் online எனக்காட்ட
கைபேசியுடன் காத்துக்கிடக்கும் நான்,

அன்ன நடையிடும்
மாநகர பேருந்தின் ஒழுகும் கூரைக்கு
“உச்” கொட்டி எரிச்சலடைபவர்கள் ரசிக்காமல்
கிடைக்கிறது சன்னலுக்கு வெளியே வானவில்,
ரொம்ப நேரமாய் காட்டும் typing-க்கிற்கு
காத்திருக்கும் பொறுமையின்றி தூக்கி நானெறிந்த கைப்பேசியில்
வந்து சேரும் உன் ஸ்மைலி,

முன் கண்ணாடியில் மழை பெய்ததும்
துடைத்துவிட்டு அமைதியாகும் பேருந்தின் wiper,
முன்னாடி விழும் அந்த ஒற்றை முடியை
விரலால் ஒதுக்கிவிட்டு அமைதியாய் பார்க்கிறாய்
ஒரு நிமிடம் துள்ளி குதித்துவிட்டு அமைதியாகும் என் இருதயம்.

ஊர் உறங்கிய இரவின் நிசப்தத்தில்
தகரக்கூரை மேல் பெய்யும் மழை…
பேசி நாம் தீர்ந்து போன
அந்த நிசப்தத்தில் உன் குண்டுக்கண்கள்  பேசும் ரகசியம்.

மழை. நீ. நான்.

Saturday, July 26, 2014

நீங்கள் திவ்யா குட்டி இல்லை


உயிரோடு எறும்பு மிதக்கும் பாலை
கண்ணுக்கு நல்லதென்று சொல்லி
குடிக்கக் கொடுக்கிறீர்கள்.
"அப்போ, எறும்புக்கு?" என்று கேட்பாளென
எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இழவு விடொன்றில்
விளையாடிய திவ்யா குட்டியை
அடித்து அழவைக்கிறீர்கள்.
நீங்கள் அழுது வராத இறந்தவர்,
அவள் அழுதாலும் வரமாட்டார்
என்று தெரிதிருக்காது உங்களுக்கு.

அவளை, வருந்த வேண்டியதற்கு சிரிக்கவும்
மறக்க வேண்டியதற்கு அழவும் செய்கிறீர்கள்.

நீங்கள் திவ்யா குட்டி இல்லை,

விளையாடவென ஐபோனைக் கொடுத்தீர்கள்.
அவள் தூக்கி போட்டு விளையாடுவாள் 
என்று எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.

அவள் விளையாடிக்கொண்டிருந்த பலூன் 
பீங்கான் பூந்தொட்டியை தட்டி உடைத்துவிட, 
கோபத்தில் அவள் பலூனை பிடுங்கி 
பரணில் எரிந்துவிடுகிறீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.

நீங்கள் உடைத்ததை விட 
அவள் உடைத்தது எல்லாம் 
திருப்பி சரி செய்யக்கூடியாதகவே இருந்தது.

நீங்கள் திவ்யா குட்டி இல்லை.
திவ்யா குட்டியாய் ஆகவும் முடியாது.

Thursday, July 17, 2014

செத்துப்போ

யாரோ ஒருவன்
பெரியவன் ஆக வேண்டி இருக்கலாம்.
தன் பலம் நிருபிக்கும் அவசியம் வரலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவனுக்கு
உன்னுடையது பிடித்துப்போகலாம்.
உன்னை பிடிக்காமல் போகலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவன்
உன் வீடு கொழுந்துவிட்டெரிகையில்
மிச்சத்தை பிடுங்கி கொள்ள வந்திருக்கலாம்.
குளிர் காய காத்திருக்கலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவனுக்கு
உன் மரணத்தில் லாபம் அதிகம் இருக்கலாம்.
நீ உட்கார்ந்திருக்கும் இடம் தேவைப்படலாம்.
அதற்காகவேனினும்,
ஏறிப் போக படிக்கட்டு வேண்டும்
ஆடும் நாற்காலியின் காலுக்கு வைக்க ஜடம் வேண்டும்.
அதற்காகவேனினும்,
செத்துப்போ.

நீ செத்துப்போகையில்
உன்னை தூக்கி போடவென
யாருமே இல்லாமல் போகலாம்.
அதற்குள்ளாகவேனினும் செத்துப்போ.

உன் பிணங்களை நல்ல விலைக்கு கேட்கிறார்கள்.

காதலிக்கப்படாதவன்


Friday, July 11, 2014

அதே மழை, வேறொரு நாள்


வக்கனை காட்டி மழை தராமல்
காற்றில் கலைந்துவிடுகிற கார்மேகமாய்,
“typing… typing… ”
என்று காட்டிக்கொண்டே இருந்த
உன்னிடம் இருந்து வந்து சேரும் வெறும் ஸ்மைலி.

காற்றை மீறி பெய்யத்துவங்கி
சொல்லாமல் கொள்ளாமல் நின்று போன மழையாய்,
திரும்ப அனுப்பாமல் குப்பைக்கு போகும்
உனக்கு டெலிவர் ஆகாத குறுஞ்செய்தி.

நின்று போன பிறகு
மரம் தூறும் தூறலாய்
திரும்ப திரும்ப படிக்கையில்
உயிருக்குள் இனிக்கும் நீ அனுப்பிய
குட் நைட்டும், குட் மார்னிங்கும்.

12 மணி தாண்டி, அரை தூக்கத்தில்
உன் குறுஞ்செய்தியோடு நீளும் நாள்…
அன்று இரவெல்லாம்
தகர ஓட்டிடம் மழை பேசிக்கொண்டிருக்கிறது
நான் சொல்லாத ரகசியத்தை…

                                  - காதலிக்கப்படாதவன்

அவள் அனுப்பிய ஸ்மைலியாய் இந்த மழை, எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை. :)

Monday, June 2, 2014

சாக்லேட் க்ஆத்அல்

|| க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3 | 4 | 5 ||

தெரியும்,
உன்னை கேட்டு அடம்பிடிக்க
நான் ஒன்றும் குழந்தை இல்லை.
அடம்பிடித்து அடைந்துவிட
நீ ஒன்றும் மிட்டாய் இல்லை.

இருந்தும் ஏனோ,
உன்னை கடக்கும் பொழுதெல்லாம்
மிட்டாய் கடை பார்த்த குழந்தையாய்
இருதயம் என்னிடம் அடம்பிடிக்கிறது.

oOo

நீயும் சரி, மிட்டாயும் சரி…

கிடைத்திருந்தால்
கொஞ்ச நேரம் இனித்து
வாயில் கரைந்து போயி ருக்கும்.

கிடைக்காததால் பார்,
நினைக்கிற பொழுதெல்லாம்
உயிருக்குள் இனிக்கிறது.

அந்த இனிப்பின் பெயர் வலியென்றிருக்கலாம்.
இனிக்கும் வலி.

oOo

என் சாக்லேட்டில்
பாதியை உனக்கு கொடுத்தால்,
உன்னை பிடிக்கும் என்று அர்த்தம்.

உன் சாக்லேட்டையும் பிடுங்கி
நானே சாப்பிட்டுவிட்டேன் என்றால்,
உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று அர்த்தம்.

P.s. – நம்ம எல்லார்கிட்டயும் பிடுங்கி தான சாப்பிட்டு இருக்கோம்!! யாருக்கும் கொடுத்தததா நியாபகம் இல்லையே!! :P

Sunday, June 1, 2014

பச்சோந்தி நிமிடங்கள்


கருகலைத்த மருத்துவச்சியின் நக இடுக்கில்
மிச்சமிருக்கும் உயிரை,
முதுகிலிறங்கிய கத்தியிலிருக்கும்
கைரேகையின் ஜாடையை,
பிரசவ களைப்பில் தாயுறங்குகையில்
குட்டி கடத்தும் கோணிப்பையின் முனங்கலை,
நடக்க இடமில்லாது இருந்தும் அந்த தெருவில்
தன்னந் தனியாய் நடக்கும் இருதயத்தை,
அடுத்த வேலைக்கு காசில்லாத கவலையின்றி
இப்போது சாப்பிடுபவனின் பசியை
சூழ்நிலையால் கொலை செய்ததாய்
அழுதுகொண்டிருந்தவனின் கையிலிருக்கும் கத்தியை

நின்று ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு
மெல்ல தன் நிறம் மாற்றிக்கொண்டு
பார்க்காதது போல் நடந்து போகிறது அந்த நிமிடம்.
அப்போதைக்கு தப்பித்துவிடுகிற பச்சோந்தியாய்.

அவர்களும் கூட.


Thursday, May 15, 2014

நாற்காலி சண்டை


இசை நின்றவுடன்
நாற்காலியை பிடிப்பதில்
குறியாய் இருந்துவிட்டவனுக்கு,

நாற்காலிகள் தீர்ந்த
அப்போது தான் உரைக்கிறது
இனி இசை
கிடைக்கபோவதில்லையென.

oOo

இசை நின்று போனதும்
யாரோ ஒருவனுக்கு
நாற்காலி இல்லாமல் போக போகிறது.

அந்த ஒருவனாய்
தான் இருக்க மாட்டோம்
என்னும் நம்பிக்கையில் தான்,
தானாய் இருக்ககூடாது
என்னும் வெறியில் தான்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.

oOo

இசை நிற்கிற வரை
எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க
ஒருவன் மட்டும் நடுவில் நுழைந்து
கால் மேல் கால் போட்டு
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
தான்தான் வென்றதாய் அறிவித்துக்கொள்கிறான்.

ஓடிகொண்டிருந்தவர்கள்
நாற்காலி கிடைக்கவில்லையென
வருத்தம் மட்டும் பட்டுக்கொண்டார்கள்.

oOo

நீங்கள் அடித்துக்கொள்ள வேண்டுமெனவேதான்
இசை நாற்காலி போட்டியில்
ஒரு நாற்காலி குறையாக இருக்கிறது எப்போதும்.

oOo

இசையையும் ரசிக்க விடாமல்,
நாற்காலியும் உனக்கு கிடைக்க விடாமல்
வெளியிலிருந்து ஒருவன்
உன்னை சுற்றவைத்துக்கொண்டிருக்கிறான்.

இன்றில்லாவிட்டால் என்ன?
என்றாவது கிடைக்கலாம்.
ஓடு. ஓடிக்கொண்டே இரு.

oOo

காலி நாற்காலி இருக்கிற
எல்லா இடத்திலும்
யாருக்கும் தெரியாமல்
உட்கார்ந்திருக்கிறது சண்டை. 

Saturday, May 3, 2014

Sydney Sheldon, Train & காதல்

||பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | 4 || இரயில் காதல் - 1 | 2 ||

கையில் சிட்னி ஷெல்டனுடன்
எதிரே உட்கார்ந்து வாசிக்க தொடங்கினாள்.

138வது பக்கத்தின் பாதியில்
புத்தகம் திறந்திருக்க உறங்கி இருந்தாள்.

நான் மட்டும்
என் முன் இருக்கும் கவிதை புத்தகத்தின்
முதல் பக்கத்தையும் கடக்கவும் முடியாமல்,
மூடிவைத்துவிட்டு உறங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.

 When people tell me I’ve kept them up all night, I feel like I’ve succeeded. - Sydney Sheldon

 oOo

அன்று
வந்து சேர்ந்தது ரயில்கள் மட்டும் தான்.
வெளுத்திருந்தது வானம் மட்டும் தான்.
பிரிந்து போனது திசைகள் மட்டும் தான்.
முடிந்து போனது நாவல் மட்டும் தான்.

ரயில் இஞ்சின் அணைக்கப்பட்ட பிறகும் கூட
அதை தாண்டியும்
தண்டவாள பாதை மட்டும்
இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது.

…but ready or not,life goes on. – Sydney Sheldon

P.P.S. – Ok! It is just another Crush starts at Tambaram and ends while I’m in sleep :P

நிஇஇலாஆஆ


வெள்ளை முற்றுபுள்ளியில்
அழகாய் தொடங்குகிறது
அந்த கவிதை…

தொட்டில் சீலை வழியே
தாய் கண்ட குழந்தையாய்
சிரிக்கிறேன் நிலா பார்த்து,

அழுது கொண்டிருந்தவன்
கண்களை துடைத்து
சிரிக்க காரணமான
இன்னொரு பெண்,

அவளின் இன்மையை நிரப்பிவிடுகிற
இன்னொரு பெண் இவள் மட்டும்தான்.

எல்லா இரவும்
அமாவாசை ஆகிவிட்ட போது,
தூரத்தில் தெரியும்
வெள்ளை வெளிச்சத்தை
நிலவென்று நம்பி உறங்கப்பழகிக்கொண்ட
குழந்தையாய் நான்…

நம்புவதற்கும் ஏமாறுவதற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

Monday, April 14, 2014

அழட்டும். தடுக்காதீர்கள்.


தோள்சாய்ந்து அழுதுகொண்டிருந்தவன்
எழுந்து கன்னங்களை துடைத்துக்கொள்கிறான்.

கண்ணீரில் நனைந்த அந்த நாளை
தூக்கிக்கொண்டு நடக்கிறேன்,
சிலுவை சுமந்த தேவனாய்.

பின்னாடியே வரும் அவன் விசும்பலோசை
தசையடியாய் விழுகிறது முதுகில்.
நடந்துகொண்டே இருக்கிறேன்.
முதுகில் விழும் சவுக்கின் சரடுதிரிகள்
அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சிலுவையில் இறந்து
மீண்டும் நான் உயிர்த்துவருவதர்க்குள்
அழுதுகொண்டிருந்தவர்களை இந்த உலகம்
உயிரோடு வைத்திருக்குமா என்று தெரியவில்லை.

எனவே, இந்த சிலுவையை
இன்னொரு தோளுக்கு மாற்றிவிட்டு
இந்த தோளை இன்னுமொருவன்
அழக்கொடுத்துவிடுகிறேன்.

இன்னுமொருவருக்காய் சாவ
எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
ஆனால் அழுபவனுடன் ஆறுதலாய்
உட்கார எல்லோருக்கும் கொஞ்சம் தயக்கம்.

oOo

நிம்மதியாய் உறங்கிவிட்ட பின்னிரவில்
அழுகை விசும்பலுடன்
உங்கள் வீட்டுக்கதவு தட்டப்பட்டால்
கொஞ்சம் திறந்து பாருங்கள்.
அது நானாக இருக்கலாம்.

ஏன்? எதற்கென்றெல்லாம் கேட்காதே.
நடந்துவிட்டதை மாற்றிடவோ,
நடக்கப்போவதை தடுத்திடவோ
உங்களால்(லும்) முடியப்போவதில்லை.

இப்போதைக்கு
அழுகை மறந்துரங்க வேண்டும் நான்.
முடிந்தால் மடியில் கொஞ்சம் இடம் கொடுங்கள்.

இல்லையென்றால் கதவை
முகத்தில் அறைந்து மூடிக்கொள்ளுங்கள்.
என் முகத்தில் அறைந்த முதல் கதவு இது இல்லை.
ஆனால் என்னை தாங்கிக்கொள்ளும்
முதல் மடி நீங்களாய் இருக்கலாம்.

தனிமையில் உட்கார்ந்திருக்கும் என்னிடம்,
என்னவென்று கேளுங்கள்.
நான்,
உடைந்து உண்மையாய் அழ வேண்டும்.
அன்னை முன்னால் அழும்
குழந்தையின் உண்மையான அந்தக் கண்ணீரோடு.

Wednesday, March 26, 2014

திவ்யா குட்டி L.K.G. ‘A’


சோட்டா பீம், சாக்லேட்
எதுவும் வேண்டாமேன்றுவிட்டு
அழுதுகொண்டே பள்ளிக்கூடம் வந்தவள்
வாசலில் தோழி அனிதாவை பார்த்ததும்
ஓடி பொய் கைகோர்த்துக்கொண்டு
“டாட்டா மாமா” என்கிறாள் சிரித்துக்கொண்டே.

இப்போ அவளை விட்டுவிட்டு
வீடு போவதை நினைத்து
நான் அழத்தொடங்குகிறேன்.
வீட்டுக்கு செல்லும் பாதையையும் மறந்திருந்தேன்.

oOo

சிங்கம் காட்டின் ராஜா
குகையில் வசிக்கும் என்று
பாடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஆசிரியர்.

“Miss க்கு எதுவுமே தெரியல,
வீட்டு remote-ல 702 அமுக்குனா
சிங்கம் காட்டுவாங்க.
இப்ப சிங்கம் காட்டுல எங்க இருக்கு? 
டிவில மட்டும் தான் இருக்கும்”,
என்று தோழியிடம் சொல்லி சிரிக்கிறாள்.

oOo

சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள் திவ்யா குட்டி.

“லஞ்ச்க்கு சப்பாத்தி வச்சுருக்கேன்.
யாருக்கும் கொடுக்காம புல்லா சாப்டனும்”
என்று அம்மா சொன்னதை கேட்டதில்லை.

அப்பா அந்த மஞ்ச கலர் டப்பால இருந்து
வெள்ளை கலர் சாக்லேட் எடுத்து 
புகையோட சாப்பிடும் பொது அதிகமா இருமுறார்னு
அதை எடுத்து ஒளிச்சு வச்சுட்டேன்.

“i love you. i miss you :( ”
என்று யாருக்கோ எங்க அண்ணா எழுதி வைத்திருந்தான்.
அப்படி என்றால் என்னவென்றெல்லாம் தெரியாது.
நான் அதில்
“எங்க அண்ணன் நல்லவன்.
அவனை அழ வைக்காதிங்க. ப்ளீஸ்”
என்று கிறுக்கி வைத்துவிட்டேன்.

நான் செய்தது
எதுவுமே அவங்களுக்கு தெரியாது.
என்ன மன்னித்துவிடு சாமி. - காதலிக்கப்படாதாவன்

Sunday, March 16, 2014

கொஞ்சம் அவகாசம் கொடு


மாற்றிய பிறகும் கூட
பழைய கடவுச்சொல்லை  விரலால்
உடனே உதிர்த்துக்கொள்ள முடியவில்லை தான்.
ஆனால் புதிதிற்கு தன்னை பழக்கிகொண்டது.

வீடு மாறிய பிறகும் கூட
பழைய வீட்டுப் பாதையை கால்களால்
உடனே மறக்க முடிவதில்லைதான்.
ஆனால் மெல்ல நானே பழகிக்கொண்டேன்.

நீ இல்லை என்று சொல்லிக்கொண்ட பிறகு
நிச்சயிக்கப்பட்டவளுக்கென எழுதும்
"i love you"க்கு பக்கத்தில்
எவ்வளவு முயன்றும் உன் பெயரைத்தான் எழுதுகிறேன்.

மறப்பதற்கு நீ கடவுச்சொல்லும் இல்லை,
மாற்றிக்கொள்வதற்கு நீ பழைய வீடும் இல்லை தான்.
ஆனால் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு,
அன்பில் என்னை அமிழ்த்துக் கொள்ள அவள் வருவாள். வரட்டும்.

அவள் கரமெடுத்து என் விழிகளை
இருக்க போர்த்திக்கொள்ளப்போகிறேன்கிறேன்.
பேய் கதை கேட்ட இரவில்
இருட்டை பார்த்து
போர்வையெடுத்து போர்த்திக்கொள்கிற
குழந்தையின் நம்பிக்கையோடு.

Friday, March 7, 2014

இந்த பூக்களை பறிக்காதீர்கள்


வந்து நின்ற பேருந்தில் ஏற வந்தவள்
ஐந்து ஆண்கள் மட்டும் இருப்பது பார்த்து
யோசனையுடன் பின் வாங்குகிறாள்.

"மாமாவோடு போய் விளையாடு"
என்று சொல்லும் அனிதா அக்கா,
இன்றெல்லாம் விளையாட கூப்பிட்டாள்
தயங்கி தயங்கி அனுப்புகிறாள் தியா குட்டியை.

பேசிக்கொண்டிருந்த தோழி
சரியாய் இருக்கும் மாராப்பை
மீண்டுமொருமுறை சரி செய்துகொள்கிறாள்.

அம்மாவும் சகோதரியும் கூட
என்னைப்பார்த்து
பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

வன்கொடுமையால் கொல்லப்பட்ட  சிறுமி
என்று செய்தி வந்த அதன்பிறகு
ஆண் பிள்ளை பிறந்த வீடுகளின்
சங்குகளில் கள்ளிப்பால் தயாரானாலும் ஆகலாம்.

பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை.
கள்ளிப்பால் எதிர்த்த தாய் கூட
பெண் குழந்தை வேண்டாமென பயப்படுகிறாள்.
அடுப்பூதி அடைந்து கிடந்தவர்கள்
தாங்களே உள்ளே போய் அடைத்து கொள்கிறார்கள்.

இதுதான் ஆண்கள் நாம் கொடுத்த பெண் சுதந்திரம்.
கொடுத்தோமா?
அவர்களிடமிருப்பதை எடுக்காமல் இருந்தால் போதும்.

பூக்களை பறிக்காதீர்கள்
என்று சொன்னால் எவன் கேட்டான்?
காவல் காரன் தடி எடுக்கும் வரை. எடுத்தும் கூட.

- காதலிக்கப்பாடாதவன் 

அர்னாப் கோஸ்வாமி கிட்ட மாட்டிக்கிட்ட ராகுல்  காந்தி மாதிரி எதுக்கெடுத்தாலும் "Women Empowerment, Women Empowerment"-ன்னு மட்டும் வெறும் வார்த்தையோடு நின்றுவிடாதீர்கள்.

நிர்பாயாக்கு, அமிலத்தில் அடி வாங்கியவளுக்கு இப்படி எல்லோருக்கும் நீதி கிடைக்குதோ இல்லையோ வீர பெண்மணி விருது கிடைத்துவிடுகிறது. குற்றவாளியை தண்டித்துவிட்டோமே, நீதி கிடைத்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு புரியவில்லை. இன்னுமொரு நிர்பாயா, உமா, லக்ஷ்மி உருவாகாத சமுதாயம் அமையும் வரை HAPPY WOMEN'S DAY என்று வாழ்த்துவது நெஞ்சுக்குள் லேசாய் உறுத்தத்தான் செய்கிறது.








Monday, February 24, 2014

மழைக்கவிதை


டர்க்கி டவலில் தலைதுவட்டி
வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு
பளிங்குக் கோப்பையில்
தேநீர் உறிஞ்சிக்கொண்டே
எழுதப்படும் மழைகவிதைக்கும்

ரோட்டோரம்
ஒழுகும் பாலிதீன் கூடாரத்தில்
தலை சாய்க்க இடமின்றி, உட்கார்ந்துகொண்டு
நடுங்கும் கரங்களில், கடுஞ்சாயாவின்
கண்ணாடி குவளையை இருக்க பிடித்துக்கொண்டு
எழுதப்படும் மலைக்கவிதைக்கும்

நிறையவே வித்தியாசம் இருந்தது.

ஒரே வானம் தான்.
ஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.

o

சாலையில் தேங்கி நின்ற
மழை நீரில் விளையாடிய குழந்தை
முதுகில் அடி வாங்கி வீட்டுக்குள் விடப்பட்டது.
பூட்டிய வீட்டின் கண்ணாடி சன்னல்வழி
விளையாடும் தன் நண்பர்களை பார்க்கிறது.

வெளியே இருந்த குழந்தையின் மழைக்கும்
உள்ளே அடைபட்ட குழந்தையின் மழைக்கும்

நிறையவே வித்தியாசம் இருந்தது.

ஒரே வானம் தான்.
ஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.

o

சிலருக்கு சிரிப்பாய். சிலருக்கு அழுகையாய்.

என்னையும், அந்த மழையையும்
எல்லோராலும் வெறுக்கவும் முடியாது.
எல்லோராலும் ரசிக்கவும் முடியாது. - காதலிக்கப்படாதவன்

Friday, February 21, 2014

என்னை அழவைத்தவளுக்கு


உடைப்பதாயிருந்தால்
தாரளமாக உடை என் இருதயத்தை.
இன்னொருத்தி வந்தால்
நுழைய வசதியாக இருக்கும்.

வேண்டாமென்றால்
பத்திரமாய் திருப்பிக்கொடு
கடிதம் மட்டுமல்ல, என் இருதயத்தையும்.
வேறு யாருக்காவது பயன்படும்.

தூக்கி எறிவதாய் இருந்தால்
நீ இல்லாத கிரகத்தில் எறி.
வேறு யாரையாவது
காதலிக்க பழகவேண்டும் நான்.

போவதாய் இருந்தால்
தாரளாமாய், உடனே போ.
ஆனால் என்னிலிருக்கும் உன்னை
மொத்தமாய் எடுத்துப் போ.

என்னிலிருக்கும் உன்னை
முழுதாய் பிரிக்க முடியாத வரை…
என்னை எங்கு தூக்கி வீசினும்,
நீ இல்லாமல் இருக்கப்போவதில்லை என்னுடன்.
என்றும் என்னுள் நுழையும் உரிமைகொண்ட
அந்த இன்னொருத்தி நீ மட்டும் தான்.

அதுவரை
திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை.
என் இருதயத்தை.

காயம் செய்.காதல் செய்.

என்ன தான் அழவைத்தாலும்
நான் விரும்பி அழுவதற்கு
நீ என் அம்மாவாய் இருக்க வேண்டும்.
இல்லை என் காதலாய் இருக்க வேண்டும்.

நீ என்னை அழவைத்தவள்.
நீயே என்னை அன்பால் அள்ளி அணைத்துக் கொண்டவள். - காதலிக்கப்படாதவன்

Friday, February 14, 2014

ஒரு இளவரசியின் கதை

டெட்டி பியர் இல்லாமல்
உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தவளை
மார்போடு அணைக்கும் அந்த அரவணைப்பில்,

இரவுகளின் முடிச்சுகளை அவிழ்த்து
இளவரசியின் மந்திர தூக்கம் கலைக்கும்
அந்த இளவரசனின் முத்தத்தில்,

சமைக்கும் ஆசையில்
வெண்டைக்காயென விரலை நறுக்கிக்கொண்டவளை
சமையலறைக்குள் நுழைய விடாமல்
முறுகலாய் கருகி போன அவன் தோசையில்

கோபித்துக்கொண்டதாய் நான் நடிக்கிற பொழுதுகளில்
கண்டுகொள்ளாததாய் நடிக்கிற அவனின் குறும்புகளிடம்
தோற்றுப்போகும் ஊடலின் தோல்வியில்

அவனிடமே சண்டை போட்டு
அவனையே கட்டி உறங்கும் அந்த பொழுதுகளில்

மொட்டை மாடி நிலா மழை,
காற்றுக்கும் அனுமதியில்லாத
அவனுடனான தனிமையினில்

என் ஒவ்வொரு மாதிரியான
"ம்"-க்கும் இருக்கும் அர்த்தத்தை
சரியாய் புரிந்துகொள்ளும் அவன்

கருத்துக்கள் வேறுபடும்போது
கோபித்துக்கொள்பவன் பின்னால்
மிட்டாய் வண்டிபின் போகும் பிள்ளையாய்
ஓடும் நான்

இன்னமும் இன்னமும் காதல்.

கூண்டுக்குள் அடைத்துவிட்டு
பூனையை காவல் வைத்ததாய் நினைத்துவிட்டார்கள்
பூனையும் பழகிக்கொண்டது
என்னோடு வான் பறக்க

இளவரசியாக வளர்க்கப்பட்டவள் நான்.
இளவரசியாகவே வாழ விடுகிறான் அவன். - காதலிக்கப்படாதவன்

Wednesday, February 12, 2014

மொத்தமும் காதல்

அவளும் காதலை
ஏற்றுக்கொண்ட தருணத்தில்
கனவா? நிஜமா? குழம்பி நின்றவனிடம்
கன்னத்தைக் காட்டி
கிள்ளிப்பார்த்துக்கொள்ள சொன்னாள்.

அந்த கன்னத்தை கிள்ள ஆசையில்லை.
முத்தமிட்டுப் பார்த்துக்கொண்டேன்.

o

முத்தமிட்டுக்கொண்டிருந்த
என் இதழிடமிருந்து அவள் இதழ் பிரித்து,
மூச்சு வாங்கிக்கொண்டவள்
கல்யாணத்திற்கு பிறகு வேண்டுமென
முத்தங்களை மிச்சம் வைக்க சொன்னாள்.
நான் மீண்டும்
அவள் இதழ் சேர்த்துக்கொண்டேன்.

தீர்ந்து போக,
முத்தங்கள் காமம் இல்லை. காதல்.

o

முத்தமென்பது ஒரு கடன்.
திருப்பி கொடுக்கவென போய்,
மீண்டும் கடன்பட்டு திருப்புகிறேன்.

o

எங்களுக்குள் பிரச்சனையே
வருவதில்லை.
பேசினால் தானே பிரச்சனை வரும். - காதலிக்கப்படாதவன்

Thursday, January 30, 2014

காலி பர்சு

டிக்கெட்டின் விலை கேட்டபிறகு
அந்த இடம் நடக்கும் தூரம்
என்று நடக்கப்பழகிக்கொள்கிறேன்.

முதல் தேதி வரும் சம்பளத்தை விட
கழட்டிப் போட்ட அழுக்கு சட்டையில் கிடைக்கும்
ஐந்து ரூபாய்-க்கு துள்ளி குதிக்கிறேன்.

POS மெசினுக்குள் போன கார்டு
எளிதாய் வெளியில் வந்துவிட்டது.
காசு இருக்கிறதென ஏற்றுக்கொள்ளும்வரை
நான்  உள்ளேயே சிக்கிக் கொள்கிறேன்.

சாப்பிட போன இடத்தில்
அவன், “நீ ராம் தானா? என்ன தெரியுதா?” என்கிறான்.
அவன் பில்லும் எனக்கு வந்திடுமென்று பயந்து
தெரியாதென்று தப்பிக்கிறேன்.

உணவகத்தில் மாவு ஆட்டுவதற்கு
கிரைண்டர் இருப்பதாய் சொல்லும்
அந்த பலகைக்கு பயப்படுகிறேன்

என் கவிதைக்கு காத்திருக்கும்
தோழியை போல்
காத்துக்கொண்டிருக்கிறேன் அந்த தேதிக்கு.
குழந்தை உறங்கிய பின்னிரவில்
வீட்டுக்கு வந்துவிட்டு, விடியும் முன்பே
கிளம்பிவிடும் அப்பாவாய் ஏமாற்றி தொலைகிறது.

வெறும் கையும் பையும்
இவ்வளவு கணக்கும் என்ற
இன்று தான் தெரிந்து கொண்டேன்.
நீ காலி செய்து போன இருதயம் போலவே :( - காதலிக்கப்படாதவன் 30/31-01-2014 

Monday, January 20, 2014

மண்(ட)day


வீட்டுப்பாடம், டீச்சரின் அடி எல்லாம்
திடீரென்று நினைவில் வர
போர்வைக்குள் இருந்துகொண்டு
"அம்மா தொட்டு பாரு.
உடம்பு சுடுதுல. காய்ச்சல் அடிக்குது.
இன்னைக்கு மட்டும் ஸ்கூல்க்கு வேண்டாம் மா"

என்று சொல்லுகிற குழந்தையாய்
எல்லோரையும் மாற்றிவிடுகிறது
இந்த திங்கள் கிழமை

o

இன்னொரு முறை
தாத்தாவை சாகடிக்க மனமில்லாமல்
நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க
தூண்டும் திங்கள் கிழமை.

அடுத்த வாரமே இந்த தோழனுக்கு
குழந்தை பிறந்தாலும் பிறக்கலாம்.

o
சம்பள நாளுக்கு காத்திருப்பது போல்

நான் மட்டும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த திங்கள்கிழமைக்கு.
உனக்கே தெரியும் எதற்கென்று.

ஆனால்,
வெறும் திங்கள்கிழமை மட்டும் தான்
வந்து வந்து போகிறது.

o

வெறுக்கும் அவளை
விரும்பும் என்னை போல

விரட்டினாலும், விரட்டி வந்து
அன்பை சொல்லித்தரும்
இந்த திங்கள்கிழமை

இது தான் உலகின் முதல்
ஒரு தலைக் காதல்


Tuesday, January 7, 2014

திவ்யா குட்டியின் பொம்மை


பொம்மை வாங்கவென
கடைக்கு இழுத்து சென்றாள் என்னை.

கடையை சுற்றி வந்த திவ்யா குட்டி,
பிடித்த பொம்மையென
இரண்டை எடுத்து வைத்திருந்தாள்.
என் கூடையிலோ பாதிக் கடை இருந்தது.

அவளுக்கு பொம்மை வாங்க போய்
நான் குழந்தையாய் மாறி இருந்தேன்.

o

என்னிடம் காற்றூதி தரச்சொல்லி
பலூனொன்றைக் கொடுத்தாள்.

இரண்டு முறை ஊதியதும். போதுமென்றாள்.
நான், இன்னும் ஊதலாம் என்று ஊதினேன்.
மீண்டும் போதுமென்றாள்.
நான் இன்னும் பெரிதாய் ஊதினேன்.
போதும் போதும் போதுமென்றாள்.
இன்னும் ஒரே முறை என்று ஊத,
வெடித்து சிதறியது பலூன்.

கண் கலங்கியே விட்டாள் திவ்யா.
துடைத்துக் கொண்டு,
அடுத்த பலூனைக் கொடுத்து
இதையாவது உடைக்காமல் ஊதித் தாவென்றாள்.

தனக்கதிகமானதை தாண்டி
ஆசைபடுவதும் இல்லை.
தன்னை விட்டு போனதையே எண்ணி
கண்ணீர் சிந்துவதும் இல்லை திவ்யா குட்டி.

o

அலுவலகத்திலிருந்து வந்த அம்மா,
“செல்லம், மம்மிக்கு முத்தா கொடு என்கிறாள்”.

திவ்யா குட்டி ஓடி போய்
டெட்டி பியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.

o

திவ்யா குட்டிக்கு பிறந்த நாள்.
தாய் மாமன் சீரென்று என்னால் முடிந்ததென்னவோ
அந்த பத்து ரூபாய் பொம்மை தான்.
பரிசீலாய் கொடுக்க
தகுதி இல்லாத பொம்மை அது என்பது
எல்லோர் பார்வையிலையே புரிந்தது.

ஆனால் என்னவோ,
திவ்யா குட்டிக்கு மட்டும்
பொம்மை ரொம்ப பிடித்திருந்தது.
நான் கொடுத்தது
வெறும் பொம்மையில்லை என்பது
திவ்யா குட்டிக்கு மட்டுமே தெரியும்.

o

ஆயிரம் பொம்மைகள் வந்தாலும்
திவ்யா குட்டிக்கு பிடித்தது
அந்த ஒரே ஒரு பொம்மை தான்.

ஏன்? எதற்கென்றெல்லாம் கேட்காதீர்கள்.
திவ்யா குட்டி சொல்வதாய் இல்லை.
அந்த பொம்மை அவளுக்கு உயிர் அவ்வளவு தான்.

காதலிக்கப்படாதவன் 07-01-2014

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்