Monday, November 28, 2011

வி(னா)டை

ஜாதி?
மதம்?
பணம்?
தொழில்?

இப்படி
உன்னைப்
பெற்றவர் அடுக்கிய
கோடி கேள்விகளுக்கு...

நான் திருப்தி படுத்தும்
என்று நம்பி கொண்டிருக்கும்
ஒரே பதில்
நான் உன்னை 
காதலிக்கிறேன்...

காதல் கவிதை

ஒருக் கவிஞனை
காதல் கவிதை
எழுத சொல்லிப் பார்...

நிச்சயம் வெற்றுக்
காகிதம் தருவான்,
காதல் வார்த்தைகளுக்குள்
அடங்காத பொருளென்று 
புரிந்தவன்

Thursday, November 24, 2011

ஊருக்குப் போறேன் I


புழுதிக் காட்டுக்காரன் மகன்

மென்பொருள்...
விளங்காதவனின் மகன்(ள்)கள்
அதை உலகுக்கு
விளக்கிக் கொண்டிருக்கிறோம்

தேன் சுறக்கும்
மலர்களை சுமந்த 
மரத்தில் கூடு கட்டி
வாழ்க்கையை மேடாக்கிடலாம் என்று
விழித்திருக்கும் கண்ணில்
கனவுகளை கரு சுமந்து
நெடுந்தூரம் வந்தவனில்
நானும் ஒருவன்

நிறுவனம்
ஒரு விசித்திர
அத்தி மரம்
வருடம் இதில் நிச்சயம்
12 முறை விடுமுறை
பூத்து விடும்...

சனி ஞாயிரோடு
சேர்த்து ஒன்றிரண்டு
பூக்கையில
ஒத்திவச்ச திபாவளி பொங்கல்
சந்தோசத்த ஒட்டுக்க 
கொண்டாடி தீர்த்துக்கணும்

அப்படி சேர்த்துவச்ச
சொச்ச மிச்சத்த
ஒரேயடியா தீர்க்கப்
போறேன்...
பத்து திங்க
வயித்தில் சுமந்த தாய
வாழ்வெல்லாம் மாரில்
சுமந்த தந்தைய
ரொம்ப நாளு கழிச்சு
பாக்கப் போறேன்
விடுமுறைக்கு ஊருக்குப் 
போறேன்...

ராவு நேரத்துல
ஓவர்டைம் பாக்குற
விளக்கு கண் விழிச்சு
வழி சொல்ல இல்லாத
இருட்டு ரோடுதான் 
இருந்தும்
ஓர வயலு வரப்புல
நெல்லு சேக்கும்
எலிக் குஞ்சும்
பெரிய குளத்துல
ஒட்டி நிக்கும்
கொஞ்சூண்டு தண்ணியில
கும்மாளமிடும் தவளையும்
வழி சொல்லும்
சொந்த ஊரு

தாரும் கருங்கல்லும்
குளைத்து கெட்டியா
போடப்படாத ரோடு தான்
உச்சி வெயிலுல
ஓரமா ஒதுங்கி நிக்கும்
வேம்பும் புளியம் மரங்க
நிழல என் பாதத்துக்கு
செருப்பா தரும்
ஊரு தான்

முடியாம நீளுகிற
பொம்பள பொழப்பு 
கண்ணீரப் போல
நீண்டு கிடந்து
கத கதையா சொல்லும்
பாத வழியா
உயிரைத் தேடி
ஒரு உடலு
தெக்காம கொள்ளும்
பயணம் இது...

குளச்ச மண் வச்சு
பாதமா பதனி சேர்த்து
ஆணையே இடிச்சாலும்
அசையாம நிக்குற
சுவரு வச்சு
சாணி மொழுகிப் போட்டு
கோமிய மருந்தும் இட்டு
அரிசி மாவால 
கோலம் போட்ட 
வீட்டுக்குள்ள வெறுந் தரையில
படுத்து பாரு
காதலிக்கிறவன்கூட 
கொறட்டையோடத் தூங்குவான்

சாஜெஹான் மட்டும்
ஒரு தடவ இங்க 
வந்திருந்தான் நிச்சயம்
மண்ணால தான்
தாஜ் மகாலே 
கட்டி இருப்பான்
அந்த சொர்க்கத்துல
ரெண்டு நாளு
நானு சுகமாத்தான்
தூங்கப் போறேன்

சந்தன சோப்பு
கத்தாழ சாம்பு போட்டு 
அடைச்சு வச்சத்
தண்ணிக்குள்ள ஆயிரம்
பேரு நீச்சலடிச்சு
குளிச்சோம் இத்தன நாளா

உச்சித் தொட்டு
உள்ளங்காலு வர
பூண்டு போட்டுக்
காச்சிய நல்லெண்ண
தடவிக்கிட்டு
சீகக்காயும், புன்க காயும்
பூந்திக் காயும்,வெந்தயமும்
போட்டு அரைச்சு
ஆத்தா தர
கரைச்சு தலையில
தடவிக்கிட்டு
பருத்திக்காட்டுக்கு பத்தியத்துக்கு
தண்ணி விடுகிற
மோட்டார் பம்பில்
குளிச்சுப் பாரு
வாழும் போதே
சொர்கத்த பார்க்கலாம்
அப்படியும் ஒரு நாளு
இந்த விடுமுறையில
குளிக்கப் போறேன்

அளவு சாப்பாடு
விதவித சாப்பாடு...
ஐயோ செத்துப்
போன நாக்குக்கு
புதுசா உயிரு
தரப் போறா 
என் ஆத்தா

5 மணிக்கே
என்ன பெத்தவன
எழுப்பி விடும் பாசம்
ஓடிப் போயி
மொத ஆடு
நல்ல இள ஆடு
அறுத்து...
பட்டினி கிடந்து
அவன் சேர்த்த காசுல
 அரக்கிலோ கறியும் 
கொஞ்சூண்டு ஈரலும்
தெம்பு ஏற நான் கடிக்க
நாலு நல்லி எலும்பும்
வாங்கி வந்து தருவான்

மிச்சத்தில் எல்லாம்
எனக்கு உயிர் கொடுத்தவ
கை தேர்ந்தவ
அம்மிக் கல்லுக்கும்
மசால் உரலும்
அவ மருமகளுக போல
அந்த ரெண்டு நாளு 
இடுப்பு ஓடிஞ்சுப் போக வேல

என்ன மாயம் செஞ்சாளோ
ரெண்டு நாளு
காலும் ஆளும்
ஊரு காடு சுத்தித்
திரிஞ்சாலும்
மூக்கும் நாக்கும் மட்டும்
அவ அடுப்பு பக்கமா
சீட்டு ஒன்னு போட்டு
உட்கார்ந்தே இருக்கும்

இன்டர்நெட்டும் கம்ப்யூட்டரும்
இல்லாத சுதந்திரம்

ஏசி விட்டு
தூசி இல்லாத காத்து
நாசி நிரப்பும் பாத்து

என் கூட
நிலாச்சோறு சாப்புட்ட
குட்டப் பாவாட குமுதா
ரெட்ட சடையில ஆள
ஆண்ட அனிதா
சைக்கிள் டயரு
வச்சு f1 ரேசு
விளையாண்ட வேலு
இப்படி சிதறிப்
போன உயிரை
மீண்டும் சேக்கப் போறேன்

அடி பட்டவன
பாதில ரோட்டுல
போட்டுட்டு
LOP*யே காப்பத்த
கரையான போல
ஆபிசுக்கு ஓடுற ஊரு
தாகமுன்னு சொன்னா
2 ரூபா வாங்கிக்கிட்டு
வியாதிய பிளாஸ்டிக்ல
தர்ற ஊரு
மேகம் சேர்ந்தா
அதிசயம மழையா விழுந்தா
உலகை மறந்து
உடமை நனைய
கொண்டாடும்
சுத்தந்திரம் இல்ல ஊரு
நம்ம ஊருக்குள்ள
வேற ஒருத்தன் வந்தான்
அவனுக்காக நாம
வாடக நாக்குல பேசுற ஊரு

இந்த பாசாங்கு எல்லாமே
வாழ்க்கை நாடகத்தில்
நானு போட்டுகிட்ட வேஷம்...
வேஷத்த 2 நாலு
அவுத்துப் போட்டுட்டு
பாசத்த பாசமா பக்கப் போறேன்

நானு விடுமுறையில
தவணை முறையில
என் உயிர பாக்க
போறேண்டா

ஐபோனு தேச்சு
சோர்ந்தது போன
விரல தும்பி பிடிக்க
வச்சு சொடுக்கு எடுக்க போறேன்

மின்சார போதையில
என்னத்த நான்
அடிச்சாலும் தப்புன்னு
சொல்லும் கம்ப்யூட்டர்
பாத்தக் கண்ணால
பாவட தாவணியோடு
துள்ளி வரும்
தமிழ் கவித
 படிக்கப் போறேன்

என் பெத்த
ரெண்டாவது தாயு...ஊருதான்
அவ மடியத் தேடிப் போறேன்...

*-Loss of Pay

Tuesday, November 22, 2011

அவளைப் பார்த்து


என்னை வைத்து
உன் இருதயத்திலிருக்கும்
காதல் வைத்து
ஒரு கவிதை என்றாள்!

கவிதை படித்துக் 
கொண்டிருப்பவனை
பார்த்து
கவிதை எழுது
என்கிறாயே என்றேன்

என்னைப் பற்றிதான்
கவிதை கேட்டேன்
கள்வரே! கவிஞரே!
உங்கள் எண்ணம்
பற்றி அல்ல...

என்னைக் கவிஞனென்றுவிட்டு
கவிதையாய்
கோபித்துக் கொண்டது
என் கவியின் உவமை

செல்லக் கோபம்தான்
இருந்தும் ஏனோ?
சட்டென்று சூரியன்
சட்டைப் பைக்குள்
விழுந்ததாய் உணர்ந்தேன்

உனக்கு " ----"
என்று பெயரிட்ட
உன் பெற்றோரைவிட
நான் ஒன்றும்
பெரிதாய் கவி
சொல்லிவிட முடியாது
என்றேன்...

காதல் மலர்
கல்யாணக் கனியாகையில்
பெற்றோருக்கு மேலன்றோ நீ?
நிரூபி உன் கவிதையில்
என்றாள்!

இதோ!!!

"எந்த மொழியோ நீ!
எனக்கு மட்டும் புரிய
உன்னை பெற்றவர்
எழுதியக் கவிதை நீ!

அழகு, அடக்கம்,
கல்வி, கலாச்சாரம்,
அன்பு, அரவணைப்பு
வெறும் ஆறே வார்த்தைகளில்
ஆறடி காகிதம் நிரப்பியவள்
நான்கு வேதங்கள்
அடக்கி ஆண்டவள்

நீ வந்தாய்
16 செல்வமும்
தேடி வந்தது
நம்மை மணக்கோலத்தில்
வாழ்த்தப் போகும்
பெரியோருக்கெல்லாம்
நிச்சயம் வார்த்தைப் பஞ்சம்

ஐயோ! நீ
உற்று நோக்கையில்
கவிதையால் படிக்கப்படும்
கவிஞனாகிறேன்

ஏனோ நீ
பக்கம் நெருங்கையில்
என் இருதய
வாய்க் கொண்டு
நூறுக்கு மேல்
சொல்லிப் பார்க்கிறேன்

நான் வாழ்ந்த
22 ஆண்டுகளுக்கான
பரிசா நீ?
இல்லை
வாழப் போகும்
நூற்றாண்டுகளுக்கான
வரமா நீ?

எழுத்துக்கள் சேர்ந்தது
வார்த்தைகளாவது
முக்கியமல்ல
பொருள் ஒன்று
வேண்டும் அதற்கு
இந்தக் கவிதை
வெறும் வார்த்தைக்
குவியல் இல்லை
என் வாழ்வின்
பொருளே, உனை
பொருள்படப் பாடும் இது"
என்று முடித்தேன்

பரிசுகள் சொல்லாமல்
துவங்கப் பட்ட
கவிதைப் போட்டி அது
இருந்தும்
என் அதிர்ஷ்டம்
முத்தப் பரிசுகளால்
என் கன்னத்து பர்சு நிறைந்தது

Monday, November 21, 2011

மெஹந்திக் கோலம்


பிரம்மனின்
அழகுப் படைப்புகளின்
அழகுப் படிப்பிது

எழுத்துக்கள் இல்லாதக்
கவிதை இது
இமை உதடுகளால்
வாசிக்கும் ஊர்
மயங்கிப் போய்

மருதாணிக் கூம்பிற்கு
அப்படி என்ன காதல்?
இப்படி ஓவியமாய்
முத்தமிடுகிறான்

இது என்ன
அழகுப் புதையலுக்கான
வரைபடமோ?

இயற்கையின்
பெண் ரசிகர்கள்
வாங்கிக் கொண்ட 
கை ஒப்பமோ!

என்ன மொழி
இதுவெனத் தெரியாது 
ஆனால் என்னை
மயக்கும் மாய மொழி
மந்திரம்...அது நிச்சயம்




Sunday, November 20, 2011

மதரா(ஸ் வா)சி


மதராஸ் அன்னையின் மடியில்
ஆறுமாத அனுபவம்


ஒரு ஜான்
வயிறு துரத்த
மூளை வியாபாரம்
செய்ய வந்தவன் நான்

சென்னை சுயநல
பூமி என்றான்
ஊர் நாட்டமை...
பத்திரம் என்றால்
திண்ணைப் பாட்டி...
கவனம்
என்றாள் தாய்...
சிக்கனம்
என்றார் தந்தை

எல்லாம் நிச்சயம்
என்று
பத்திரமாய் மடியில்
இடமொன்று
கொடுத்தாள் மண் அன்னை
அவள் தான் சென்னை

அழகான ஊர்

சிலந்தி
வலை கொண்டு
தன்னைத் தானே
சுற்றிக் கொண்டதுபோல்
சாலைகள் பின்னிப்
பிணைந்த குழப்பம்

கூவம் வீச்சம்
சேரி அரசியல்
சுரண்டிப் போட்ட மிச்சம்
இப்படி கவிதையான
ஊர்

21g, t51, e18, pp66
போகும் வழியும்
ஊர் பெயர் வாழ்ந்த
தமிழ் மொழியும்
குழம்பும்
பேருந்து பெயர்கள்
பாமரனும் ஆங்கிலம் பேசினான்

காலை
30 ரூபாயில்
பொங்கலோ, பூரியோ
அரை வயிறு நிறையும்

பொம்மைக் கடை
பார்த்த மழலையாய்
11 மணித் தொட்டு நச்சரிக்கும்
பசி கண்ட வயிறு...
எனக்காய் 37.50 ரூபாய்
கல்லாவிடம் கொத்தடிமையாகி
என் பசி போக்கும்

37.50 ரூபாய் காக்க
மறந்ததை
10 ரூபாய் மசாலா பூரி
சமாதனப் படுத்தும்

இரவு 40/50
திருப்தியாய்
அண்ணனோடு விருந்து
பாசமும் மகிழ்ச்சியும்
சேர்ந்து நிரப்பும் வயிறை

இப்படி 150 ரூபாய்
(ஒரு நாளைக்கு)
சிக்கனமாய் பசிக்குப் போக
மீதி கொஞ்சத்தை
வாடகை வீடும்,
மின்சாரக் கட்டணமும்,
பேருந்து பயணமும்
இணைய வலையும் முழுங்கும்

மிஞ்சியது என் தந்தை
சொன்ன சிக்கனத்திற்கு


எதிர்காலம்!
சிசுக் கொலையும்
பிறப்பு விகிதமும் 
குறைத்த பெண் எண்ணிக்கையால்
ஆண் பிறந்தவுடன்
மணமுடிக்க பெண் தேடும்
நிலை வரும்


அது போல
ஊரைப் பார்க்கும்
ஏக்கம் தீர்க்கும்
ஒரே நாள்
பண்டிகை விடுமுறைக்கு
சன நெருக்கடியால்
3 மாதம் முன்னாள்
ஒரே நிமிடத்தில்
தீர்ந்து போகும்
ரயில் சீட்டு முன்பதிவு

சென்னைக்கு
அழகு மட்டுமல்ல
உயிரும் இருக்கு
உருவான க்ளுகோஸ்
தின்று உடலுள்
பாய்ந்தோடும் குருதிபோல்
உற்பத்தியாகும் பெட்ரோல்,மின்சாரம்
தின்று ஊருக்கு குருதியை
ஓயா ஓடும்
ரயிலாலும் ஊர்திகளாலும்
நிருபணமான உண்மை

12 மணிநேரம் ஓடும்
கடிகாரம்
மென்பொருள் நிபுணன்

அழகான நெரிசல்
அளவான பேருந்து அழகி
அமைக்கப் படாத சாலை
என்று தினம் எப்படியோ
அவனுள் உள்ளக் கவிஞனுக்கும்
வேலை வரும்


இரண்டு நாள்தான்
அவன் சுவாசிப்பதை
உணரும் விடுமுறை நாள்

ஸ்பென்சர் முற்றமும்
ஈ.ஏ வாயிலும்
இவன் வருகைக்கு
காத்திருக்கும் நாட்கள்
மெரினா அலைகள்
ஓடி வந்து
கால்கள் கட்டிக்கொள்ளும் நாட்கள்
மகாபலிபுர சிலைகள்
உயிர் கொள்ளும் நிமிடங்கள்
அண்ணா நூலகம்
என்னை வாசிக்கும் நாட்கள்
துவைக்காத ஜீன்ஸில்
அப்பாவின் லோன் பைக்கில்
சென்னை அழகாகும் நாட்கள்
கட்டிடங்களையும் கல் மண்ணையும்
காதலிக்க வைக்கும் நாட்கள்

காசிருந்தாலே
வாழ முடிந்த ஊர் இது
முதலாளியிடம்
காசு இருக்கு
முதல் தேதி என் கை
சேரும் நம்பிக்கையில்
தினம் விடிந்து முடிகிறது
என் நாட்கள்
இந்த ஊரில்
ஓட்டமும் நடையுமாய்


(இது என் அனுபவமே...தவறிருந்தால் மன்னிக்கவும்/Its just my xperience. Sorry for the mistakes and hurtings, if any)

காத(ல்)லை சுவை

எவோனோ
ஒருவன் செய்ததை
காதலென்று கொண்டு

உன் மேல்
உண்மையாய்
கொண்ட காதலோடு
ஒப்பீடு பார்த்து
தொலைப்பது

மார்கழி காய்ச்சலுக்குப்
பயந்து
பங்குனி தாகத்தில்
அன்பாய் கிடைத்த
இளநீரை
வேண்டாமென்பதடி...

துணி


இறகுத் துடுப்பு போட்டு
காற்றில் மிதக்கலாம் 
என்று முதல் பறவை 
முயலாதவரை இனம் அறியா!

தேனீ முத்தம் பெறாமல்
தேன் சுவைக்கும் என்று 
இதழ்கள் அறிந்ததெப்படி 

ஆழம் பாராமல்
காலை விடத்
தடை சொல்லும் ஊரே!

தினவு கொண்டு 
இறங்கிப் பார்
அப்போது தெரியும் 
அது கணுக்கால் அழ 
வெட்டை என்று...


Friday, November 18, 2011

என்ஜீனியரால் என்ஜீனியருக்காய்


Dedicated to all Engineers, Technicians and Workers 
Who build this world

நேற்று......
இவன் பக்தன்
இல்லா கடவுள்

நிகர் செய்ய முடியா
கலைஞன்

தான் ஆக்கிய 
அகிலத்துக்காய்
சனம் உருவாக்கியவன்
கடவுள்

உருவாகிய உடல்களுக்காய்
அகிலத்தை
அழகாக்கினான் இவன்

பலர் பசிக்காய் 
கல் கொண்டு
காயப் படுத்தி
பசுங் கறி கொள்கையில்
உரசிய கல்லில்
கனல் கண்டான்

துரத்திய பசிக்காய் 
தூரம் ஒடித் திரிகையில்
ஒருவன் உருண்டு ஓடிய 
கல் ஆராய்ந்து
கண்டறிந்தான் சக்கரம்

நரிகள் போல்
ஊளையிட்டு
காற்றில் கலந்து 
எண்ணம் பகர்ந்த காலத்தில்
ஒருவன் எரியும் நெருப்பாலும்
திரியும் புகையாலும் 
செய்தி சொன்னான்
தொலை தூரத்துக்கும்

பலர் குளிருக்கு சுகமாய்
கம்பளி தேடுகையில்
ஒருவன் 
கம்பளி உரசிய 
ரப்பர் துணுக்கில் 
நிலை மின்சாரம் கண்டான்

நாள் இருண்டதும்
அன்று முடிந்ததாய்
எல்லோரும் தூங்கிப் போகையில்
ஒருவன்
ஓடும் எலெக்ட்ரானை
சுருளுக்குள் நிறுத்தி 
மின்னால் ஒளிரும் 
சூரியன் தந்தான்

உட்கார்ந்த இடம் இருந்து
ஒருவன் 
பூமி இருபுறம் 
பிதுங்கிய கோலம் என்றான்

இரண்டு கண்ணாடி
அடுக்கி வைத்து 
தூரங்கள் கடந்து 
அண்ட வெளியின் அழகை 
கண்களால் அளக்க
வைத்தான் ஒருவன்

மற்றொன்றை சார்ந்தும் 
மற்றான் உயிர் 
உரிந்தும் 
நாம் இங்கே பசிக்காய்
போராடுகையில்
அங்கே ஒருவன் 
அந்த போராட்டம் தான் 
பரிணாமத்தை வளர்த்தது என்றான்

எரிகின்ற நெருப்பில்
நீர் சிறிது கொதிக்கையில்
ஆவது அவிக்க மட்டுமல்ல
என்ஜினை இயக்கவும் கூடும் 
என்றான் இன்னொருவன்

பேயென்று பயமுறுத்திய
வியாதிகளை எல்லாம்
பென்சிலின் என்ற 
ஒற்றை உச்சரிப்பில்
பட்டுப் போக செய்தான் 
இன்னும் ஒருவன்

எப்படி வளர்ந்தான்
எப்படி வெளுத்தான்
எப்படி படித்தான் 
என்று ஒவ்வொருவரும்
சுற்றத்தை வியக்க வைக்கையில்
எல்லாம் பொதிந்து கிடக்குது
உன் DNAக் குள்ளே 
என்று உலகை எழுப்பிவிட்டான் 
ஒருவன்

இப்படித்தான் துவங்கியது 
இந்த என்ஜீனியர் 
சகப்தம் 

இன்று.......

கடல்களால் பிரிந்த 
பூமியின் காதலை 
கற்பனைக்கெட்டா
பாலனங்களால் சேர்த்தான் 

வியாபார பிள்ளை 
கப்பல் கால் கொண்டு 
தவழ்ந்து விளையாட 
நிலம் பிளந்து வழி தந்தான் 

நீண்ட காலம்
காத்து பிரிந்து
கிடக்கும் 
விண் மண் காதலை 
சேர்க்க மண்ணுக்கு 
கட்டட விரல்கள் 
கட்டித் தீர்ந்தான்

பூமிப் பெண்ணின்
வனப்பில் மயங்கிப்
போனவன் 
அவள் வளங்கள் ரசிக்க
கோடி கண்களை 
வெளியில் சுற்ற விட்டான்

மனிதனை
பறவை ஆக்கினான் 
நனையாமல் நீரில் 
நீந்த வைத்தான் 
அணுவை பிளந்தான் 

இங்கு என் இதழ்கள்
முனங்கியத்தை 
எழாயிரம் மைல்கள் 
அப்பாலிருக்கும் 
என் காதலின் பூங்காதுகள் 
சேர்க்கும் கைப்பேசித் 
தந்தான் 

எட்டா(வது) கிரகங்கள்
தொட்டு 
முட்டாள் மனிதன்
வாழும் அதாரம் 
தேடித் திரிகிறான் 

நாளை......

கணினிக்குள் காதல் 
சிமுலேடட் காமம்

எட்டாவது பூமி
எண்ணூறு அதிசயம் 

துளி மின்சாரத்தில் 
தொள்ளாயிரம் கிலோமீட்டர் 
பயணம் 

யாருக்காக?

இருக்கும் பூமியை
சுடுகாடாக்கி 
கிடைக்கும் பூமிக்குத் 
தொடரும் போட்டு காத்து கிடக்கும் 
அற்ப பதருக்காய் 

தாய்மை தொலைத்து 
அன்புக் காதல் புனிதம்
தொலைத்து 
நட்பின் வாசம் சுயநல நாற்றமகிப்
போன புளுக்களுக்காய் 

இப்படி கோடி கண்டறிவான் 
தன் ஊரைத் தொலைத்து 
தொலைவில் உறவை பிரிந்து 
மாடாய் உழன்று

தன் நிகரில்லா
புனிதம் 
மனித உருவில் கடவுள் 
பொறியாளன் ... பெருமை பட வேண்டிய பிறப்பு 

Thursday, November 17, 2011

சுய சிதை

கதவின் முன் போய்
திரும்பி நின்று
கண்ணை மூடிக் கொண்டு
வாழ வழியே இல்லை என்று

மீளா மரண சிறை புகும்
கோழைகளின்
வாழ்க்கைக் கவிதை
முற்றுப் புள்ளி தற்கொலை 

Monday, November 14, 2011

இது அல்ல அது

கடலில் தவிக்கும் உயிர்க்குத்
தேவை ...
கலங்கரை விளக்கம் அல்ல
படகு!

குழம்பித்
தவிக்கும் உள்ளத்துக்குத்
தேவை ...
பரிதாபமோ, பணமோ அல்ல

நிறைந்த திறமையை நிரூபிக்க
சிறிது வாய்ப்பு...

குழம்பித் தவிக்கிறேன்...
கரை சேர்க்கும் வாய்ப்பு
எத்திசை வருமென்று...

ஒருதலைக் காதல் வலி(மை)


உண்மைக் காதல்களில் பல
ஒரு தலைக் காதல்களாகி
தகிக்கையில்

காத(லி)லன் உள்ளம்
விரும்புவதோ
காதல(னை)லியை
ஒரே முறை பார்க்க வேண்டுமென

அந்த ஆசையும்
தண்டனையாகும்
தன் காதல்
இன்னொரு இருதயத்தில்
குடி இருக்க பார்க்கையில்

Saturday, November 12, 2011

வண்ண (வான)வில்


வான் தேசத்தில்
சுதந்திர தினம் 
மின்னிப் பறக்குது 
ஏழு வர்ணக் கொடி

வெறும் நேர் கோடுகள்தான்
இருந்தும்
இதற்கு இணையாய்
அழகான மற்றொரு
ஓவியம் உண்டோ?


அப்படி என்ன
இவள் காதலன் சொல்லிவிட்டான்
இந்த வான் பேதை மட்டும்
எழு வண்ணத்தில் 
வெட்கப்படுகிறாள்

மழை சீதையின்
சுயம்வரத்தில்
அந்த சூரிய ராமனின்
கைத் தீண்டலில் துகளாகத்
தானோ இந்தக் கம்பீர தனுசு?

விருந்தாளியாய் மழை
வந்துபோன பிறகு எதற்கு
ஏழு வர்ணத்தில் கம்பளம்
வரவேற்பு வெளியில்?





Friday, November 11, 2011

எளியக் கடினம்

எளிதாய் சொல்லிவிட்டால் 
காதல் இல்லை என்று 



காதலிப்பது கடினம் 

கொண்ட காதலில்
எதிர்ப்பை பர்ப்பது கடினம்

எதிர்த்து நின்றக் காதலில்
தோல்வி கொள்வது கடினம்

தோற்றக் காதலில்
கண்ணீரின்றி அழுவது கடினம்

தேடிய திரிந்த முகவரிக்கு 
புரியா மொழியில்
சொல்லிய வழியாய்
சிந்திய கண்ணீர் பொருள் கொள்ளாமல் 
மண் நனைக்கையில்
இதயத்தின் துடிப்பு தங்குதல்
மிகக் கடினம்!

Wednesday, November 9, 2011

வா(பொ)ய்மை


உடல் நலமே!
இருந்தும் 

அறியாமையின் ஆழுமையாலும்
சோம்பேறித்தனத்தின் சுழர்ச்சியாழும்
பெற்றோர் (இவர்களின்)
என்னும் இழிவாலும்
கயவர்களின் கல் நெஞ்சாலும்

பிச்சைகாரர்காளாகி
சிலர் கை நீட்டையில்

இவர்களின்
தலை எழுத்தை மாற்ற
நினைத்து
தேசத்தின் அவப் பெயர்
போக்க நினைத்து

இல்லை என்று
நான் உரைத்த பொய் 
வாய்மை இடத்தே
சேரும் அன்றோ?

முடிந்தவர்
அவர் உழைக்கும்
வழி சொல்லுதல் ஒரு படி மேல்!

பிஞ்சுக் காதல்


தன் தேவையை 
வார்த்தையாய் தரத் தெரியாமல்
கண்ணீரில் கரைந்து போகும் 
மழலையின் ஏக்கம்...
எதோ கிடைத்த
ஒன்றில் தன் தேவை 
மறந்து சமாதானம் ஆகி
உறக்கத்தில் ஆழ்வது 
போல!

என் காதல் இருதயமும்


நிஜம் மறந்து 
கனவில் லயித்து
உன் நினைவுகளின் 
சுவடிட்ட வலி மறக்க முயலுது

குப்பை(சான்றிதழ்) குவியல்


படித்த உயிர்கள் 
வெறும் உடல்களாய்
உலாவும் இடங்களில்
குவிந்திருக்கும் குப்பைகள் 
பார்க்கையில்

குப்பைகள் இருப்பது
தெருக்களில் மட்டும் அல்ல
சான்றிதழ்களாய்
படித்தவர்களின் கோப்புகளிலும் தான் 
என்று சிந்திக்குது மனது...

தூசி எரிய அறிவே!
கொஞ்சம் உதறிக்கோள் 
சுதாரித்தேழுந்து
சிந்தி ... வீடுகள் மட்டுமின்றி 

உன்னை சுற்றி 
ஒரு அடி சுற்றளவை
சுத்தமாக்கு போதும் 
தன்னால் உலகம் சுத்தமாகும்!

Monday, November 7, 2011

மெய்யும் பொய்யும்

காதலை
பூச்சண்டியாகக் உருவகப் படுத்தி
பயம் ஏற்றி
ஒழுக்கத்தை உட்டிவிட்ட
பெற்றோரே! ...

பயத்துடன்
உட்கொண்டதல்லவா?
அதன் ஆண்பெண் நட்பென்னும்
சத்துணவு உடம்போடு
ஒட்டாமலே போனது!

Saturday, November 5, 2011

உ(பெ)ண்மை

இரு இதழ்
மலர் சுமக்கும்
புன்னகைத் தேன்

ஒற்றை சிறகோடு
இரண்டு கருப்பு நிற
வண்ணத்துப் பூச்சி
பரப்பும் மாய வண்ணம்
எங்கும்...

உண்மைப் பூவே!
பெண்மை மலர் உன்னை விட அழகே
புயலாகவும் மாறும் இவளே!
ஆக்கும் புயல் இவள்!

Friday, November 4, 2011

உளறல் கவிதை


பழந்தமிழ்...
தேனூறும் பைந்தமிழ் 
தூசி தட்டி 

உயிரை மையாக்கி 
உண்மை இறகு இட்டு
இரவு தூக்கம் விட்டு

என் கற்பனைக்கு 
அடைக்கலம் கொடுத்தே
தன் கற்பம் கலைந்த
ரிக்கார்ட் நோட்டு
என் எண்ணம் ஏற்ப
பிறவா கவிதை 
கசங்கிய காகித்ததுக்குள் சிறையாகி 
குப்பை கூடை நிறைய 
எழுதிய கவிதை

பரிட்சைக்குக் கூட 
விழிக்கா கண்
விழித்து விழுங்கும்
வரிகளானக் காதலை

இப்படி அப்படி
முட்டி மோதி
தயாரான என் காதல்
அவளை சேருவது 
என்னவோ
உளறல்களலயே!

Wednesday, November 2, 2011

சு(க)(டு)மே?


அவளோடு 
ஓர் குடைக்குள்ளே
இரு தோள் உரசி 
நடக்கையிலே ...
அமிழமாய் பெய்த
வெய்யில் மழைகூட சுகமே!

அனால் அவள் 
நினைவுகளின் துணையோடு 
தனிமை இரவில்
முகத்தோடு முத்தமிடும்
குளிர் மழையின் சாரல்கூட சுடுமே!

மின்சார சிலந்தி

அலையாய் பாயும்
ஆண் மனதை அடக்கிப்போடும்
பெண்மையின் ஓரவிழிக்கும்

உலையாய் கொதிக்கும்
பெண்மையின் மனதை கட்டிப்போடும்
துணைவனின் அன்பு மார்புக்கும்

பெரும் போட்டியாய்
இணையம் 

உடல் ஏறா போதை இது
உண்மை உலகின் 
சுவாசம் மறந்து 
மின்சார உலகுக்குள் வாசம் 

உண்மை உணரும் நாள் 
என்றோ?
நினைவு திரும்பும் நாள் 
என்றோ?

இன்னார்க்கு இன்னார்


மண்ணில் உள்ள ஒவ்வொரு
அசைவும் அறிவானாம் இறைவன்

இன்னார்க்கு இன்னார் 
என்று முடிச்சு ஒன்றாம்

மாற்றி ஜோடி இனைய 
முயல்கையில் முறிந்து போகுமாம் 

ஆக முறியும் எனத்தெரிந்தும்
முற்றும் வரையில் 
பார்த்து ரசித்தானோ இறைவன்?

வியக்க வைக்கும் 
இறைவனின் படைப்பினில்
காதல் முறிவு
என்னிடம் சொல்வது 
வாழ்வியலில் எங்கோ 
தவறு இருக்குது 
என்பதைத்தான்! 




Tuesday, November 1, 2011

15000 பார்வைகள் - நன்றியுடன் jam

மேடைகள் ஏறுதல் 
பெரிதல்ல 
காற்றினில் உன் பெயர் அதிர்கையில்
கைத்தட்டல் ஓசையில் 
அரங்கம் அதிர்ந்திட வேண்டும்
அதுவே உன்னைப் 
பெற்றவளுக்குப் பெருமை

ஆறாம் விரல் 
மை உமிழ்தல் பெரிதல்ல
உமிழ்ந்த மை எழுத்தாகுதல் பெரிதல்ல 
எழுத்துக்கள் செர்ந்தேழுந்து 
கவியாதல் பெரிதல்ல 
கவி வாசகன் இதயத்தோடு
ஓசையின்றி உரக்கப் பேசவேண்டும்
உண்மை உரைக்கப் பேசவேண்டும் 
அன்றே உண்மைக்
கவிஞனாகிறோம் என் போன்றோர்

15000 முறை 
என் கவிப் பேழை 
திறக்கப்பட்ட சுவடு 
இதோ இன்டர்நெட் மார்போடு 
பச்சை குத்தப்பட்டது 

இன்னும் பயண தூரம் தொலைவு
அது வரை 
வாசகர் துணை வாரீர் 
வாசிக்கும் ஆசையோடு...
உமக்கு வார்த்தை கொண்டு 
சுவாசிக்கும் வித்தை நான் தருகிறேன் 

நன்றியுடன் 
-ramanuJAM

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்