Sunday, November 20, 2011

மதரா(ஸ் வா)சி


மதராஸ் அன்னையின் மடியில்
ஆறுமாத அனுபவம்


ஒரு ஜான்
வயிறு துரத்த
மூளை வியாபாரம்
செய்ய வந்தவன் நான்

சென்னை சுயநல
பூமி என்றான்
ஊர் நாட்டமை...
பத்திரம் என்றால்
திண்ணைப் பாட்டி...
கவனம்
என்றாள் தாய்...
சிக்கனம்
என்றார் தந்தை

எல்லாம் நிச்சயம்
என்று
பத்திரமாய் மடியில்
இடமொன்று
கொடுத்தாள் மண் அன்னை
அவள் தான் சென்னை

அழகான ஊர்

சிலந்தி
வலை கொண்டு
தன்னைத் தானே
சுற்றிக் கொண்டதுபோல்
சாலைகள் பின்னிப்
பிணைந்த குழப்பம்

கூவம் வீச்சம்
சேரி அரசியல்
சுரண்டிப் போட்ட மிச்சம்
இப்படி கவிதையான
ஊர்

21g, t51, e18, pp66
போகும் வழியும்
ஊர் பெயர் வாழ்ந்த
தமிழ் மொழியும்
குழம்பும்
பேருந்து பெயர்கள்
பாமரனும் ஆங்கிலம் பேசினான்

காலை
30 ரூபாயில்
பொங்கலோ, பூரியோ
அரை வயிறு நிறையும்

பொம்மைக் கடை
பார்த்த மழலையாய்
11 மணித் தொட்டு நச்சரிக்கும்
பசி கண்ட வயிறு...
எனக்காய் 37.50 ரூபாய்
கல்லாவிடம் கொத்தடிமையாகி
என் பசி போக்கும்

37.50 ரூபாய் காக்க
மறந்ததை
10 ரூபாய் மசாலா பூரி
சமாதனப் படுத்தும்

இரவு 40/50
திருப்தியாய்
அண்ணனோடு விருந்து
பாசமும் மகிழ்ச்சியும்
சேர்ந்து நிரப்பும் வயிறை

இப்படி 150 ரூபாய்
(ஒரு நாளைக்கு)
சிக்கனமாய் பசிக்குப் போக
மீதி கொஞ்சத்தை
வாடகை வீடும்,
மின்சாரக் கட்டணமும்,
பேருந்து பயணமும்
இணைய வலையும் முழுங்கும்

மிஞ்சியது என் தந்தை
சொன்ன சிக்கனத்திற்கு


எதிர்காலம்!
சிசுக் கொலையும்
பிறப்பு விகிதமும் 
குறைத்த பெண் எண்ணிக்கையால்
ஆண் பிறந்தவுடன்
மணமுடிக்க பெண் தேடும்
நிலை வரும்


அது போல
ஊரைப் பார்க்கும்
ஏக்கம் தீர்க்கும்
ஒரே நாள்
பண்டிகை விடுமுறைக்கு
சன நெருக்கடியால்
3 மாதம் முன்னாள்
ஒரே நிமிடத்தில்
தீர்ந்து போகும்
ரயில் சீட்டு முன்பதிவு

சென்னைக்கு
அழகு மட்டுமல்ல
உயிரும் இருக்கு
உருவான க்ளுகோஸ்
தின்று உடலுள்
பாய்ந்தோடும் குருதிபோல்
உற்பத்தியாகும் பெட்ரோல்,மின்சாரம்
தின்று ஊருக்கு குருதியை
ஓயா ஓடும்
ரயிலாலும் ஊர்திகளாலும்
நிருபணமான உண்மை

12 மணிநேரம் ஓடும்
கடிகாரம்
மென்பொருள் நிபுணன்

அழகான நெரிசல்
அளவான பேருந்து அழகி
அமைக்கப் படாத சாலை
என்று தினம் எப்படியோ
அவனுள் உள்ளக் கவிஞனுக்கும்
வேலை வரும்


இரண்டு நாள்தான்
அவன் சுவாசிப்பதை
உணரும் விடுமுறை நாள்

ஸ்பென்சர் முற்றமும்
ஈ.ஏ வாயிலும்
இவன் வருகைக்கு
காத்திருக்கும் நாட்கள்
மெரினா அலைகள்
ஓடி வந்து
கால்கள் கட்டிக்கொள்ளும் நாட்கள்
மகாபலிபுர சிலைகள்
உயிர் கொள்ளும் நிமிடங்கள்
அண்ணா நூலகம்
என்னை வாசிக்கும் நாட்கள்
துவைக்காத ஜீன்ஸில்
அப்பாவின் லோன் பைக்கில்
சென்னை அழகாகும் நாட்கள்
கட்டிடங்களையும் கல் மண்ணையும்
காதலிக்க வைக்கும் நாட்கள்

காசிருந்தாலே
வாழ முடிந்த ஊர் இது
முதலாளியிடம்
காசு இருக்கு
முதல் தேதி என் கை
சேரும் நம்பிக்கையில்
தினம் விடிந்து முடிகிறது
என் நாட்கள்
இந்த ஊரில்
ஓட்டமும் நடையுமாய்


(இது என் அனுபவமே...தவறிருந்தால் மன்னிக்கவும்/Its just my xperience. Sorry for the mistakes and hurtings, if any)

2 comments:

  1. கவிஞர் வைரமுத்து எழுதிய "நியூயார்க்" நினைவுக்கு வருகிறது.. அது என் இதயத்தை தொட்டதை விட
    "மதரா(ஸ் வா)சி"
    ஆழமாகவே தொட்டது..

    ReplyDelete
  2. உள்ளக் குமுறல்களை " சிதறல்களாய்" வடித்த இளை»னே !
    முதலில் எனது பாராட்டும் வாழ்த்தும்..

    மூளை வியாபாரம் செய்யும் அளவு உருவாக்க ஒரு தந்தை
    எவ்வளவு அவர் மூளையை கசக்கியிருப்பார்..
    என்பதை இளை»ன் தந்தையாகும் போது உணரமுடியும்..

    ஒரு கவியாக.. உன் கவிதையைப் பாராட்டுகிறேன்.
    ஒரு தந்தையாக.. சில "வலிகளை" பதிவு செய்கிறேன்..

    நக்சலைட் பூமியான சத்திஸ்கருக்கு என்னை மாற்றம் செய்தனர்.
    நள்ளிரவு ஒருமணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கி..
    சோவென கொட்டித் தீர்த்த மழையில்..
    செல்வதறியாது..செய்வதறியாது.. திகைத்து..
    எப்படியோ அலுவலகம் அடைந்தேன்.
    இரவு உணவு கிடையாது..
    காலை வயிறு பசியால் குடைந்தது..
    எட்டு மணிவரை காத்திருக்க சொன்னேன்.
    ஒன்பது வரை ஒன்றும் கிடைக்கவில்லை.

    பையில் பணம்.. தின்ன முடியுமா?
    நான் ஓடவுமில்லை..நடக்கவுமில்லை..
    என் கண் முன் நின்றது யார் தெரியுமா?
    நீ சொன்னதுபோல்
    இன்று மூளை வியாபாரம் செய்யும் ஒரு மகன்..
    அவனுக்காக.. அவன் எதிர்காலத்திற்காக..
    நான் அதை செய்யவேண்டும்..
    "சேய் குரல் கேட்டால் தாய் உயிரோடு ஓர் வலி ஏற்படுமே!"
    இந்த வரிகள் தந்தைக்கும் பொருந்தும்..

    தம்பி.. உன் கவிதைகளை இன்னும் படிப்பேன்..
    பதிலும் எழுதுவேன்..
    எழுத தொடங்கி.. வாசகர் பார்வைக்கு.. வைத்துவிட்டால்..
    விமர்சனத்தை ரசிக்கத் தொடங்கு..
    Un எண்ணங்களைத் தடுக்காதே..
    Un விரல்களை ஒடுக்காதே..
    இன்னும் சிதறட்டும்.. வாழ்த்துகள்..

    --sullaankavi..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்